Sunday, June 15, 2025
Home செய்திகள்Showinpage கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு வரவேற்பு: 2.17 கோடி புத்தகங்கள்; 35 லட்சம் பேருக்கு இலவச சீருடை விநியோகம்

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு வரவேற்பு: 2.17 கோடி புத்தகங்கள்; 35 லட்சம் பேருக்கு இலவச சீருடை விநியோகம்

by Karthik Yash

சென்னை: தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல்நாளிலேயே அவர்களுக்கு 2 கோடியே 17 லட்சம் பாடப்புத்தகங்களும், 35 லட்சம் பேருக்கு இலவச சீருடைகளும் வழங்கப்பட்டன.
பெரும்பாலான பள்ளிகளில் அலங்கார வளைவுகள், வாழை மரம், தோரணங்கள், பூக்களை கொண்டு சோடித்த ஆரங்கள் என்று அலங்காரங்களுடன் பள்ளிகள் களைகட்டின. பள்ளி வந்த மாணவ, மாணவிகள் இனிப்பு கொடுத்து வரவேற்கப்பட்டனர். காலையில் 9 மணி அளவில் இறைவணக்க நிகழ்வு தொடங்கி 9.30 மணி வரை நடந்தது. பிறகு வகுப்புகள் தொடங்கின. மாணவ, மாணவியருக்கு 2 கோடியே 17 லட்சம் பாடப்புத்தகங்கள், 2 கோடியே 16 லட்சம் மதிப்பு நோட்டுகள் வழங்கப்பட்டன.

இதுதவிர 1 முதல் 8ம் வகுப்புகளில் படிக்கும் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் 35 லட்சம் பேருக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. இந்த விநியோகங்களை சென்னை திருவல்லிக்கேணி பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பள்ளிகளுக்கு வந்து மாணவ, மாணவியருக்கு விலையில்லா பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பள்ளிகளில் படித்து இடைநின்ற மாணவியர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு திரும்ப அழைத்து வரும் வகையில், உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், முறைப்படி மாணவர்கள் சேர்க்கை நேற்று தொடங்கியது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இடையில் பள்ளியை விட்டு நின்றுவிடாத வகையில், அவர்கள் 9ம் வகுப்பில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் காலை உணவு, குறித்த நேரத்தில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் முறையான பணி பகிர்வுடன் கூடிய வகுப்புக்குரிய மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய காலை அட்டவணையை தயார் செய்து பள்ளி திறக்கும் முதல் நாளில் இருந்தே செயல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 32 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 40 லட்சம் மாணவ, மாணவியர் நேற்று பள்ளிகளுக்கு திரும்பினர். இதையடுத்து, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கும் உடனடியாக பாடங்களை நடத்துவதற்கு முன்னதாக நீதி நெறிக் கதைகள், ஒழுக்கம், நல்ல பண்புகளை உருவாக்கும் அறிவுரைகள் வழங்கும் வகையில் நெறிப்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு வாரத்துக்கு இந்த வகுப்புகள் நடத்தப்படும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi