டெல்லி : 10.25% சர்க்கரை சத்து உள்ள கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.355ஆக ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு 0.1% சர்க்கரை சத்து கூடுதலாக உள்ள கரும்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.3.46 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 9.5% சர்க்கரை சத்து உள்ள கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.329.05ஆக நிர்ணயம் எனவும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பின் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில்;
“கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.355 ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரை சத்து 10.25 சதவீதம் உள்ள கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.355 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை சத்து 9.5 சதவீதம் உள்ள கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.329.05 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் நேரடியாகப் பணிபுரியும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த உத்தரவால், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட முக்கிய கரும்பு உற்பத்தி மாநிலங்களின் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என தெரிவித்தார்.