கடலூர்: கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், நல்லதம்பி ஆகியோர் கடலூர் மாவட்டம் முழுவதும் சவர்மா தயார் செய்யப்படும் ஓட்டல்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பண்ருட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு செய்ததில் 5 கிலோ தரமற்ற சிக்கன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சிக்கன் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது. இதேபோல் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுப்போன 3 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த 2 கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3 ஓட்டல்களில் சவர்மா தயார் செய்யும் இடம் சுகாதாரமின்றி இருந்ததை பார்த்த அதிகாரிகள், அந்த ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும் ஓட்டல்களில் சவர்மா தயார் செய்யும் இடங்களில் சுகாதாரமின்றி இருந்ததாக விருத்தாசலத்தில் 3 ஓட்டல்களுக்கும், புவனகிரி மற்றும் சேத்தியாத்தோப்பில் 5 ஓட்டல்கள், கடலூரில் 4 ஓட்டல்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டது.