அணைக்கட்டு: நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மலை கிராமங்களில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று நடத்தினர்.
அணைக்கட்டு ஒன்றியம் ஜார்தான்கொல்லை ஊராட்சி குண்டுராணி மலை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டுக்கு அதிகளவில் மாணவர்களை சேர்ப்பதற்காக அந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று முன்தினம் நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப்அன்னையா தலைமை தாங்கினார். மலை கிராமத்தின் ஊரான் சின்னபையன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் அந்த மலை கிராமத்தில் உள்ள பகுதிகளில் மேடுபள்ளங்கள் வழியாகவும், விவசாய நிலங்களின் வழியாகவும் ஊர்வலமாக சென்று, மலைவாழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை கட்டாயம் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து இந்த ஊர்வலம் மீண்டும் பள்ளிக்கு வந்து நிறைவடைந்தது. தொடர்ந்து கல்வி வளர்ச்சி நாள் குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் ஜோசப்அன்னையா ஜாமென்ட்ரி பாக்ஸ், எழுதுகோல் உள்ளிட்டவர்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.