*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வடலூர் : வடலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இயக்கப்படும் பேருந்துகளில் குறிஞ்சிப்பாடி, வடலூர், குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் இருக்கின்றன. இப்பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் சென்று வந்து படிக்கின்றனர்.
ஆனால் மாணவர்கள் பேருந்தின் உள்ளே செல்லாமல் காலை, மாலை இருவேளையும் பேருந்து உள்ளே செல்லாமல் படியில் தொங்கியபடி பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் படியில் நிற்காமல் உள்ளே செல்லுமாறு அறிவுரை கூறியும், மாணவர்கள் அவற்றை காதில் வாங்கிக்கொள்ளாமல் ஆபத்தான பயணத்தை படிக்கட்டில் தொங்கியபடியே செல்கின்றனர்.
இப்படி ஆபத்தை உணராமல் படியில் தொங்கி பயணம் செல்வதால் தவறி விழுந்து விடுவார்களோ என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ள நேரிடுகிறது. நடத்துனர், ஓட்டுனர்களும் மாணவர்கள் நலன் கருதி பேருந்தை மெதுவாக பள்ளம் மேடு பார்த்து இயக்கி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.