Tuesday, July 8, 2025
Home செய்திகள் சிறப்பு குறைதீர் முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது உயர்கல்வி கனவை அடைய வேண்டும்

சிறப்பு குறைதீர் முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது உயர்கல்வி கனவை அடைய வேண்டும்

by Lakshmipathi

*மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கடலூர் : சிறப்பு குறைதீர் முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது உயர்கல்வி கனவை அடைய வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தினார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்காக விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் பெறுவதற்கான சிறப்பு குறைதீர்வு முகாம் நிறைந்தது மனம் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆத்தியா செந்தில்குமார் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும் பல்வேறு சிறப்பான முயற்சிகளை செயல்படுத்தி வருகிறார்.

பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் உயர்கல்வியில் படிப்பதற்க்கு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் “உயர்கல்வி வழிகாட்டி குழு“ அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் நடந்த உயர்கல்வி வழிகாட்டுதல்கள் பெறுவதற்கான சிறப்பு குறைதீர்வு முகாமில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்கள் உயர்கல்வியை அடைவதை நோக்கமாக கொண்டு உயர்கல்வி சேர்க்கைக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப முகாமில் பங்குபெற்ற அரசு கலைக் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றது. இம்முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைகாக நடைபெறும் இதுபோன்ற சிறப்பு முகாம்களை மாணவர்கள் திறம்பட பயன்படுத்திக் கொண்டு தங்களது உயர்கல்வி கனவை அடைய வேண்டும், என்றார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

நிறைந்தது மனம் திட்டத்தில் பயனடைந்த மாணவன் கூறுகையில், என் பெயர் முகமது யாசின். நான் நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து 383 மதிப்பெண் பெற்றுள்ளேன். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த உயர்கல்வி தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் முகாமில் நான் கலந்து கொண்டு, எனது மதிப்பெண் அடிப்படையில் என்ன படிக்கலாம், எவ்வாறு கல்லூரியை தேர்ந்தெடுப்பது குறித்து அறிவுரைகள் பெற்று, பெரியார் கலைக் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் பிரிவில் நேற்றைய தினமே சேர்ந்துள்ளேன், என்றார்.

இத்திட்டத்தில் பயனடைந்த மாணவி கூறுகையில், எனது பெயர் அமீரா. நான் பரங்கிப்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளேன். மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான முகாமில் பங்கேற்று, காட்டுமன்னார்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பயனடைந்துள்ளேன், என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi