Friday, July 18, 2025
Home செய்திகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகக்கூடாது

படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகக்கூடாது

by Lakshmipathi

*விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டிஆர்ஓ அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை : பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகக்கூடாது என அரசுப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டிஆர்ஓ சுரேஷ் பேசினார்.

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதை இல்லா தமிழ்நாடு, போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொறுப்பு) பிரேமலதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டு உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சிியல் டிஆர்ஓ சுரேஷ் பேசியதாவது: தமிழ்நாடு அரசு போதைப் பொருட்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் சுவர் விளம்பரம், துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும். போதைப் பழக்கத்தில் உள்ளவர்கள் தான் என்ன செய்கிறார்கள் என தெரியாமல் குற்றம் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை, ஸ்மார்ட் கிளாஸ் என பல சலுகைகளை வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கின்றனர். மாணவர்கள் நன்கு படித்து குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். தீய பழக்கத்திற்கு ஆளாக கூடாது. செல்போனை பார்ப்பது மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

படிப்பில் சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களிடத்தில் கேட்கலாம் அல்லது யூடியூப் பார்த்து உங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். அதை தவிர்த்து மற்ற நேரங்களில் செல்போனில் நேரத்தை கழிப்பதை தவிர்த்து விளையாட்டிலும், படிப்பிலும் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பள்ளிப் பருவத்தில் உள்ள நண்பர்கள் தான் கடைசி வரை இருப்பார்கள். நண்பர்களிடத்தில் நேரத்தை செலவிடுங்கள் செல்போன் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மருந்துகள் ஆய்வாளர், உணவு பாதுகாப்பு அலுவலர், கலால் இன்ஸ்பெக்டர், சுகாதாரத்துறை மனநல மருத்துவர் ஆகியோரும் மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கி பேசினர். இதையடுத்து போதைப் பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி டி.ஆர்.ஓ. சுரேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது பள்ளி வளாகத்தில் தொடங்கி கிருஷ்ணகிரி டிரங் ரோடு வழியாக முத்துக்கடை பேருந்து நிறுத்தம் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சுதர்சன்பாபு, நேர்முக உதவியாளர்கள் தனஞ்செழியன், ரவிச்சந்திரன், பள்ளி துணை ஆய்வாளர் வெங்கடேசன், பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) விநாயகமூர்த்தி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

‘10581’ இலவச எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

டிஆர்ஓ சுரேஷ் பேசுகையில், ‘பள்ளி வளாகத்தில் உள்ள சுவரில் எங்கள் பள்ளி போதை பயன்பாடு இல்லாத பள்ளி என்ற வாசகம் எழுதி உள்ளது. மாணவர்கள் அதை பார்த்திருப்பீர்கள். அதில் இருக்கும் இலவச புகார் எண் 10581 எழுதப்பட்டுள்ளது.

பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடையில் போதைப் பொருட்கள் பயன்பாடு இருந்தால் அல்லது சக மாணவர்கள் புதிதாக ஏதாவது பொருள் வைத்திருந்தாலும் புகார் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்’ என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi