Wednesday, July 9, 2025
Home செய்திகள்இந்தியா மேற்கு வங்க சட்ட கல்லூரியில் மாணவி பாலியல் பலாத்காரம்: 3 மாணவர்கள் கைது

மேற்கு வங்க சட்ட கல்லூரியில் மாணவி பாலியல் பலாத்காரம்: 3 மாணவர்கள் கைது

by Francis

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொல்கத்தாவில் சட்ட கல்லூரியில் மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் மாநில அரசு நடத்தும் சட்ட கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 24 வயது மாணவி ஒருவர் முதலாமாண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை(25ம் தேதி) அந்த மாணவி தேர்வு தொடர்பான சில படிவங்களை பூர்த்தி செய்வதற்காக சட்ட கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவர்கள் 2 பேர் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கல்லூரியில் உள்ள பாதுகாவலர் அறைக்கு இழுத்து சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கஸ்பா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “தரை தளத்தில் உள்ள பாதுகாவலர் அறைக்கு என்னை இழுத்து சென்று இரவு 7.30 மணி முதல் 10.00 மணி வரை அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். நான் பலாத்காரம் செய்யப்படுவதை 3 பேரும் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து கொண்டு, இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் அதை இணையதளத்தில் வௌியிட்டு விடுவோம் என மிரட்டினர்” என குற்றம்சாட்டி உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கல்லூரியில் தற்போது படிக்கும் மூத்த மாணவர்களான ஜயிப் அகமது(19), பிரமித் முகர்ஜி(20) மற்றும் சட்ட கல்லூரி முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “3 பேரிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் பதிவான காட்சிகள் வேறு யாருக்கும் அனுப்பப்பட்டதா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

இதுகுறித்து சட்ட கல்லூரி அதிகாரிகளில் சிலர் கூறுகையில், “மனோஜித் மிஸ்ரா அலிப்பூர் காவல் நிலைய மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சட்ட கல்லூரி திரிணாமுல் காங்கிரசின் பரிஷத் பிரிவின் முன்னாள் தலைவர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் தெற்கு கொல்கத்தா அமைப்பின் பொது செயலாளர்” என தெரிவித்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட ஜயிப் அகமது, பிரமித் முகர்ஜி மற்றும் மனோஜித் மிஸ்ரா ஆகிய 3 பேரும் அலிப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi