வேலூர்: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, வரும் 7ம்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என, தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, ஐ.டி.ஐ,களில் படிக்கும் மாணவர்களுக்கு, போக்குவரத்து கழகங்கள் சார்பில், இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுதும், 30.14 லட்சம் பேர் பயணம் செய்வர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும், ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை தொடங்கி உள்ளோம். இதற்கான பணியை, ஐஆர்டி எனப்படும் சாலை போக்குவரத்து நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரையில் தமிழகம் முழுவதும் 30.14 லட்சம் மாணவர்கள் பயணம் செய்வார்கள் என மதிப்பிட்டுள்ளோம். தேவைப்பட்டால் கூடுதல் பாஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறந்த ஒரு சில நாட்களுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.