Sunday, June 22, 2025
Home செய்திகள்இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விமர்சனம்; ‘உபா’ சட்டத்தில் கைதான மாணவி விடுதலை: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விமர்சனம்; ‘உபா’ சட்டத்தில் கைதான மாணவி விடுதலை: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

by Neethimaan


மும்பை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விமர்சித்ததற்காக ‘உபா’ சட்டத்தில் கைதான மாணவியை மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக விடுதலை செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவி ஜைனப் பட்டேல் (19) என்பவர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்தும், இந்து பெண்கள் அணியும் குங்குமம் குறித்தும் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டிருந்தார். அவரது பதிவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவரை உபா (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கீழ் மும்பை காவல் துறை வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தது.

போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் மாணவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘என்னை காவல் துறை கைது செய்ததன் மூலம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எனது கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மாணவியாகிய எனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே காவல் துறையின் கைது நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்‘ என்று கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மாணவியை கைது செய்தது அதிர்ச்சியளிக்கிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சமூக வலைதள பதிவை, மறுபகிர்வு செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெறுமனே ஒரு பதிவை மறுபகிர்வு செய்தற்காக மாணவியை கைது செய்வது ஏற்கத்தக்கதல்ல. இந்த வழக்கு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. உபா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த குற்ற நோக்கமும் இல்லாமல் பதிவை மறுபகிர்ந்ததுள்ளதால், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு, சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் மற்றும் கடுமையான சட்டங்களின் தவறான பயன்பாடு குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஜைனப்பின் வழக்கறிஞர், இந்த உத்தரவு மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முக்கியமான முன்னுதாரணமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi