சென்னை: கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வருகைப்பதிவு குறைவால் தேர்வு எழுதவும் 2024-25 கல்வி ஆண்டுக்கான வகுப்பை தொடரவும் பல்கலைக்கழகம் தடை விதிக்கப்பட்டது. வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து, கல்லூரி மாணவர் ஸ்ரீரிஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறியதாவது;
வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது, முறையாக வருகை பதிவு இருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வருகைப் பதிவு குறைவாக இருக்கும் கல்லூரி மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது சரியான செயல் அல்ல என்றும் உரிய கட்டணத்தை செலுத்தி மீண்டும் படிப்பை தொடர மாணவர் விரும்பினால் அனுமதி அளிக்க பல்கலைக் கழகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மாணவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.