திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் முத்தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் பெயிண்டர். இவரது மனைவி புவனா. இவர்களது மகன் சந்தோஷ்(17). இவர், கடம்பத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறந்ததால் முதல்நாள் பள்ளிக்கு சந்தோஷ் சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை 10.40 மணியளவில் விடையூர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் சந்தோஷ் மயங்கிய நிலையில் கிடப்பதை அங்கு ஆடு மேய்த்தவர்கள் பார்த்ததும் தந்தை சரவணனின் செல்போனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சரவணன் வந்து மகனை மீட்டபோது, ‘’தன்னை சிலர் கடத்தி குடோனில் கட்டி வைத்திருந்ததனர். நான் அங்கிருந்து தப்பிவந்துவிட்டேன்’ என்று தெரிவித்தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரித்தனர்.பள்ளி அருகே உள்ள கடம்பத்தூர் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் டியூசன் படித்துவரும்நண்பருடன் பேசிவிட்டு பள்ளிக்கு சென்றபோது காரில் வந்த முதியவர் தன்னிடம் முகவரிகேட்பது போல் பேசினார். அப்போது திடீரென முகத்தில் ஸ்பிரே அடித்ததும் மயக்கம் அடைந்துவிட்டேன். இதன்பிறகு நடந்தது தெரியவில்லை. கண்விழித்து பார்த்தபோது குடோனில் அடைத்து வைத்திருந்தனர். அங்கிருந்து தப்பிவந்துவிட்டேன். குடோனில் அடித்து துன்புறுத்தியதாகவும் இடது கை தோள்பட்டை காயம் ஏற்பட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், போலீசார் வழக்குபதிவு செய்து பள்ளி அருகே உள்ள சிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கடத்தல் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. விடையூர் பகுதியில் உள்ள குடோனுக்கு காரில் கடத்தி வந்ததாக சொன்ன பகுதியில் ஆய்வு செய்தபோது அங்குள்ள கேமராவிலும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் சந்தோஷின் கைகளில் காயம் உள்ளது. எனவே மாணவன் கடத்தப்பட்டாரா, நாடகமாடுகிறாரா என்று விசாரிக்கின்றனர்.