சென்னை: மிக தீவிர புயலாக நிலவிவரும் பிபர்ஜாய் அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடைம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த ஜூன் 6ம் தேதி அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே இடத்தில் மையம் கொண்டிருந்தது. பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் வழங்கியுள்ள ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இந்த புயல் காரணமாக கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த நிலையில், பிபர்ஜாய் புயல்.அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரையோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புயலால் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.