Thursday, March 28, 2024
Home » பங்குச் சந்தையில் யார் பங்கு பெறலாம்?

பங்குச் சந்தையில் யார் பங்கு பெறலாம்?

by Kalaivani Saravanan

* ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

பங்குச் சந்தை என்பது முதலீட்டிலும் லாபத்திலும் பங்குபெறும் அமைப்பாகும். ஜோதிடத்தில் பங்குச் சந்தை என்பது முதலீட்டையும் லாபத்தையும் குறிப்பிடும் அமைப்பாகும். இந்த பங்குச் சந்தையில் பங்கு பெறுபவர்களுக்கு பதினொன்றாம் பாவம் (11-ஆம்) வலிமையாக இருக்க வேண்டும். இதுவே லாபம் ஈட்டுதலை குறிப்பிடும் அல்லது பதினொன்றாம் பாவ அதிபதி கேந்திர கோணங்களில் அமைந்து சுப கிரகங்களின் பார்வை தொடர்புடன் இருத்தல் சிறப்பைத் தரும். மேலும், ஏழாம் பாவம் (7-ஆம்) இதுவே விற்பனை செய்வது, கொள்முதல் செய்யும் தொடர்புடைய பாவ அமைப்பாகும்.

கேந்திர அதிபதியாகிய (7-ஆம்) அதிபதியும் மறைவான பாவங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த கேந்திர அதிபதியுடன் அசுப கிரகங்கள் தொடர்பின்றி இருத்தல் சிறப்பான பொதுவான அமைப்பாகும். பாவத் பாவம் என்பதையும் இந்த பங்குச் சந்தை முதலீட்டில் பார்க்க வேண்டும். அதாவது பதினொன்றாம் பாவத்திற்கு (11ம்) பதினொன்றாம் பாவமாகிய ஒன்பதாம் பாவத்திற்குரிய (9ம்) கிரகம் சிறப்பாக இருப்பது இன்னும் சிறப்பே.

எப்பொழுது எந்த பங்கில் முதலீடு செய்யலாம்?

கோட்சாரத்தில் வலிமையாக உள்ள கிரகங்கள் தொடர்புடைய பங்குகள் அதிகரிக்கும். உதாரணத்திற்கு, வியாழன் தன் சொந்த ராசியில் அமர்ந்து அசுப கிரகங்கள் பார்வையின்றி இருக்கும்பட்சத்தில் தங்கம் தொடர்புடைய பத்திரங்கள், தங்க நகை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களின் பங்குகள் விரைவாக வளர்ச்சியடையும். அதனால் முன்னரே அந்த பங்குகளை வாங்கி வைத்த நபர்களுக்கு லாபம் ஈட்டித் தரும். ஆகவே பங்குச் சந்தையினை நன்றாக தெரிந்து கிரகங்களின் வலிமையை உணர்ந்து அதில் முதலீடு செய்வதுதான் லாபத்தை ஈட்டித் தரும் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.

கோட்சாரத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் வலிமை பெறும் காலகட்டத்தில் எலெக்ட்ரிகல் தொடர்புடைய சாதனங்களான பேட்டரி, வயர்கள், சுவிட்ச் போன்ற உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கோழி பண்ணை தொடர்புடைய பங்குகள் அதாவது தீவனங்கள், முட்டை போன்ற உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கும். எனவே, அதனைச் சார்ந்த பங்குகள் விலை அதிகரிக்கும்.

கோட்சாரத்தில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் இணைந்து வலிமை பெறும் காலத்தில் கட்டிடத்துறை, சுரங்கம் தொடர்பான பங்குகள் இந்த இரண்டு கிரகங்கள் வலிமை பெறும் போது ஏற்றம் காணும். வியாழன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வலிமையாக இருக்கும் போது பேனா, பேப்பர் மற்றும் எழுதுகோல் ஸ்டேஷனரி தொடர்பான பங்குகள் ஏற்றத்தை நோக்கி செல்லும்.

11-ஆம் பாவத்தில் ராகு – கேது தொடர்புடன் இருந்தால் ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் முதலீடு செய்யலாம். இதனால் லாபம் உண்டாக்கும். நான்காம் (4-ஆம்) பாவாதிபதி மற்றும் பத்தாம் (10-ஆம்) பாவாதிபதிகள் பதினொன்றாம் (11-ஆம்) பாவத்திலோ அல்லது ஏழாம் (7-ஆம்) பாவத்திலோ இருந்து, அந்த கிரகத்திற்கான திசா புத்திகள் நடைபெறும் போது முதலீடு செய்திருந்தால் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய தனலாபத்தினை ஏற்படுத்தி உங்களை அதிசயத்தில் ஆழ்த்தும். சந்திரன், சனி கிரகங்கள் தொடர்புடைய ஜாதகர்கள் நீர் மேலாண்மை, மது உற்பத்தி, சினிமா மற்றும் மீடியா தொடர்புடைய பங்குகளிலும் முதலீடு செய்யலாம். சிலருக்கு எட்டாம் அதிபதி (8ம்) திசாக் காலங்களில் அதிகமான லாபத்தினை ஈட்டும்.

* வலிமையிழந்து நீசம் பெற்ற கிரகங்களின் தொடர்பான பங்குகளை வாங்கினால் விலை குறைவாக வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

* அதே கிரகம் வலிமையை நோக்கிச் செல்லும் போது அதே பங்கின் விலை உயரத் தொடங்கும் காலத்தில் விற்பனை செய்வது சிறப்பான லாபத்தினை உண்டாக்கும்.

பங்கு வர்த்தகத்தில் யார் நஷ்டம் அடைவார்கள்?

லாப ஸ்தானத்தில் ஆறாம் அதிபதி (6-ஆம்), எட்டாம் அதிபதி (8-ஆம்) மற்றும் (12-ஆம்) அதிபதியின் திசாக்கள் நடக்கும் காலத்தில் முதலீடு செய்யும் ஜாதகர்கள் நஷ்டம் அடையும் வாய்ப்புகள் அதிகம். பாதகாதிபதி திசா, புத்திகள் நடைபெறும் காலத்தில் முதலீடு செய்வது நன்மை செய்யாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சர லக்னத்திற்கு 11-ஆம் அதிபதி பாதகாதிபதி, ஸ்திர லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி பாதகாதிபதி, உபய லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி பாதகாதிபதி ஆவர்.

இதில், சந்திரன் வலிமையற்ற ஜாதகர்கள் ஆலோசனையின் மூலம் நல்ல பங்குகளை வாங்கி விற்கலாம். இரண்டாம் அதிபதி என்ற தனஸ்தானாதிபதி வலிமையிழந்த ஜாதகர்களும் நஷ்டம் அடைய அதிக வாய்ப்புகள் உண்டு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

You may also like

Leave a Comment

16 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi