Monday, June 16, 2025
Home செய்திகள்இந்தியா பங்குச்சந்தை முறைகேடு விவகாரம் மாதபி மீது எப்ஐஆர் பதிவு செய்ய தடை: மும்பை ஐகோர்ட் உத்தரவு

பங்குச்சந்தை முறைகேடு விவகாரம் மாதபி மீது எப்ஐஆர் பதிவு செய்ய தடை: மும்பை ஐகோர்ட் உத்தரவு

by Karthik Yash

மும்பை: பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில், செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் உட்பட 5 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்யுமாறு சிறப்பு கோர்ட் பிறப்பித்த உத்தரவின் மீது 4ம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. செபி தலைவராக இருந்த மாதபி புரி புச் மீதான மோசடி புகார்களை விசாரிக்க உத்தரவிடக்கோரி ஊழல் வழக்குகளுக்கான மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாதபி புரி புச் உட்பட 5 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், விசாரணை அறிக்கையை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது.

இதை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மாதபி புரி புச் மற்றும் மும்பை பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி, மும்பை பங்குச்சந்தையின் அப்போதைய தலைவர் பிரமோத் அகர்வால் மற்றும் செபியின் முழுநேர உறுப்பினர்கள் அஸ்வனி பாட்டியா, அனந்த் நாராயண், கம்லேஷ் சந்திர வர்ஷிணி ஆகியோர் மேல் முறையீடு செய்தனர். இது அவசர வழக்காக பட்டியலிடப்பட்டு, மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஜி.திகே தலைமையிலான பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

இதில் மாதபி மற்றும் செபியின் தற்போதைய முழு நேர இயக்குநர்கள் அஸ்வனி பாட்டியா, அனந்த் நாராயண், கம்லேஷ் சந்திர வர்ஷிணி ஆகியோர் சார்பில் சொலிசிடார் ஜெனரல் துஷார் மேத்தாவும், மும்பை பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி மற்றும் அதன் முன்னாள் தலைவர் பிரமோத் அகர்வால் சார்பாக மூத்த வழக்கறிஞர் அமித் தேசாயும் ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு மார்ச் 4ம் தேதி (இன்று) விசாரணைக்கு வரும் எனவும், அதுவரை சிறப்பு கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi