ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் வேதிப்பொருட்கள், குஜராத் கொண்டு செல்லப்படுகிறது: தூத்துக்குடி ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு முதல் மூடப்பட்டது. இதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிக்காக கொண்டுவரப்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை ஆலையில் இருந்து அகற்ற அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் 80 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்களை அகற்ற அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பொருட்களை அகற்றும் பணியானது தொடங்கியது.
இதற்காக கண்டெய்னர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் வேதிப்பொருட்கள், குஜராத் கொண்டு செல்லப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் பொருட்கள் குஜராத்தில் உள்ள டாமன் - டையூ பகுதிக்குக் கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


