திருவள்ளூர்: ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாமின் நினைவு நாள் விழாவை அனுசரிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி, தீப ஒளியில் அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக மாணவர்கள் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடக்கக் கல்வி மாணவர்கள் கலாம் படத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர். இதில், தொடக்கக் கல்வி முழுவதும் 1000 மாணவர்கள் வரிசையாக அமர்ந்து, கலாமின் படத்திற்கு வண்ணம் தீட்டியது, கலாமை நேரில் பார்த்தது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது.
மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் 25 அடி உயர கலாமின் படத்தை வரைந்து, அதில் மெழுகுவர்த்தி ஏற்றி, தீப ஒளியில் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழகமே போற்றும் வண்ணம், முழு மதிப்பெண் பெற்று கலாமிற்கு பெருமை சேர்ப்போம் என்று மாணவர்கள் அனைவரும் கலாமின் நினைவு தினத்தில் உறுதி ஏற்றுக் கொண்டனர். பள்ளித் தாளாளர் ப.விஷ்ணுச்சரண் தலைமை தாங்கினார், இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியர்கள் ஷாலினி, சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.