ராமேஸ்வரம்: கடலுக்கு சென்ற மண்டபம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர். 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து நேற்று முன்தினம் ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் பாக். ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை விரட்டியடித்தனர். இதனால் வேறு பகுதிக்கு படகுகளை ஓட்டிச் சென்றனர்.
இவர்களில் மண்டபம் பகுதியை சேர்ந்த நாகநாதன், வேலு ஆகியோரின் 2 விசைப்படகுகளை கடற்படையினர் சிறை பிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். கைதான மீனவர்கள் இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். மண்டபம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று காலை குறைந்தளவு மீன்களுடன் கரை திரும்பினர்.
மண்டபம் பரம்பரை மீனவர் சங்க தலைவர் பக்கர் கூறுகையில் ‘‘காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் படகுடன் விடுதலையாகி வந்தனர். பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து கைது செய்யப்படும் மீனவர்கள் விடுதலையாகின்றனர். ஆனால் ரூ.50 லட்சம் மதிப்பிலான படகுகள் அந்நாட்டின் அரசுடமையாக்கப்படுகிறது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் மீன்பிடித்தொழில் நசிந்து வருகிறது’’ என்றார்.