சென்னை: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையில் நடந்த உள்நாட்டு போரை நிறுத்தும் நோக்கில் கடந்த 1987ல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, அமைதிப்படை வீரர்களுக்காக உணவுப் பொருள்கள் சப்ளை செய்வதற்கான குழுவில் அங்கம் வகித்த மேஜர் ஜெனரல் ஏ.கே.குப்தா டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சி கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மேஜர் குப்தாவை குற்றவாளி என்று அறிவித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2013ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குப்தா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள அஹமத்நகர் அழைத்துச் சென்றபோது, மேஜர் குப்தா தப்பிச் சென்றதை வைத்து சிபிஐ நீதிமன்றம் வெறும் யூகங்களின் அடிப்படையில் எந்த காரணங்களையும் தெரிவிக்காமல் தீர்ப்பளித்துள்ளது. மேஜர் குப்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.