சென்னை: போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘என்னை தவறாக போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள் கடத்தலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் காவல்துறையினர் நேரடியாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருவேன் என்று தெரிவித்துள்ள நிலையில் சட்ட விரோதமாக என்னை கைது செய்துள்ளனர். நான் போதை பொருள் உட்கொண்டதாக காவல்துறையினர் தவறாக சித்தரித்துள்ளனர்.
என்னை காவல்துறையினர் கைது செய்த 4 மணி நேரத்திற்கு பிறகு சிறுநீர் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு எனக்கு உணவு மற்றும் குடிநீர் தந்தனர். நான் மயக்க நிலை அடைந்து விட்டேன். அதன் பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் என்னை சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதே வேளையில் எனது வீட்டிலிருந்து எந்தவிதமான போதை பொருளும் காவல்துறையினரால் கைப்பற்றப்படவில்லை. எந்த தனிநபர் சாட்சியமும் எனக்கு எதிராக பதிவு செய்யப்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெர்மிஸ் முன்பு விசாரணைக்கு வந்தன. ஸ்ரீகாந்த் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.சந்திரசேகரன், கே.பிரேம் ஆஜராகினர். நடிகர் கிருஷ்ணா தரப்பில் இன்பேன்ட் தினேஷ் ஆஜரானார். அவர்கள் வாதிடும்போது, மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகி உள்ளது. போதை பொருளை பயன்படுவதுவதற்கும், கைவசம் வைத்திருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்று நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில்வாதிடப்பட்டது. அப்போது, இருவருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என்று காவல்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை இன்று மாலைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதன்படி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2 பேருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.