ஏழாயிரம்பண்ணை : வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காதணி, சங்கு வளையல், கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டதில் பணிகள் முழுமையாக முடிந்த 7 குழிகளில் அளவிடும் பணிகள் முடிக்கப்பட்டு குழிகளை மூடும் பணியில் தொழிலார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
18 குழிகளில் சுடுமண் முத்திரைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்கள், சுடுமண் விளக்குகள், தங்க அணிகலன், சூது பவளமணி உட்பட 3,800க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் சுடுமண்ணால் ஆன காதணி, சங்கு வளையல், கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன பைக் கோன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நம் தமிழரின் மரபையும் பெருமையையும் பறைசாற்றும் விதமாக வெம்பக்கோட்டை திகழ்ந்து வருகிறது. வெம்பக்கோட்டையில் அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், முன்னதாக உடைந்த நிலையில் கிடைத்த காதணி தற்போது முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சுடுமண்ணால் செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.
அதுமட்டுமின்றி அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உடைந்த நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் கண்ணாடி, சுடுமண்ணால் செய்யப்பட்ட பைக் கோன் என்று சொல்லக்கூடிய இருமுனை கூம்பு வடிவில் கண்டறியப்பட்டுள்ளது. மணிகளும் பல கிடைக்கப் பெற்றுள்ளன என்பது, பல்லாயிரம் ஆண்டு முன்பு வாழ்ந்த தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயங்களைக் காட்டுகிறது’’ என அவர் பதிவிட்டுள்ளார்.