
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை விரட்டியடித்ததால் குறைந்தளவு மீன்களுடன் பாம்பன் மீனவர்கள் கரை திரும்பினர். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் ஏராளமான நாட்டுப்படகுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அங்கிருந்த நாட்டுப்படகு மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த நாட்டுப்படகு மீனவர்கள், படகுகளை வேறு பகுதிக்கு ஓட்டிச் சென்று மீன்பிடித்தனர். இதனிடையே நாட்டுப்படகு மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட பாம்பன் விசைப்படகு மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக கரையோரப் பகுதிகளில் மட்டும் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர். பாம்பன் துறைமுகத்தை வந்தடைந்த படகுகளில் மீன்வரத்து மிகவும் குறைவாக இருந்தது.