சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டிகள், ஆசிய பாரா விளையாட்டு, சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள், தேசிய அளவிலான போட்டிகள், தேசிய விளையாட்டு போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டு, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.
விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பத்தினை இணையதள முகவரியில் உரிய இணைப்புகளுடன் பதிவேற்றம் செய்து, 31.10.2023ம் தேதி மாலை 5. மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்கலாம்.