தமிழ்நாட்டின் விளையாட்டு துறையை உலக அளவிற்கு எடுத்துச் சென்றவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: பி.கே.சேகர்பாபு புகழாரம்
பெரம்பூர்: தமிழ்நாட்டின் விளையாட்டு துறையை உலக அளவிற்கு எடுத்துச்சென்றுள்ளார் துணை முதல்வர் உதயநிதி என்று அமைச்சர் சேகர்பாபு புகழாரம் சூட்டினார். துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி பிறந்தநாளையொட்டி, சென்னை திருவிக. நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள குக்ஸ் சாலையில், திமுக துணை அமைப்பு செயலாளரும் திருவிக.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தாயகம் கவி ஏற்பாட்டில், 500 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் சிலம்பம் போட்டி நடத்தப்பட்டது.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு போட்டியை துவக்கிவைத்து சிலம்பம் சுற்றிய மாணவர்களின் திறமைகளை கண்டு ரசித்தார். இதன்பின்னர் அங்கு நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டார். அப்போது சென்னை மேயர் பிரியா உள்பட பலர் இருந்தனர்.
முன்னதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது,’’தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறையை உலக அளவுக்கு நம்முடைய துணை முதலமைச்சர் எடுத்து சென்றுள்ளார். சிலம்பக்கலையால் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் பெற முடியும்’’ என்றார். தாயகம் கவி எம்எல்ஏ கூறும்போது, ‘’பங்கேற்றுள்ள 500 போட்டியாளர்களுக்கும் பரிசு கொடுக்கப்பட உள்ளது. விளையாட்டுத் துறைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்து தமிழ்நாட்டினுடைய இளைஞர்களையும் மாணவர்களை ஊக்குவித்து பல்வேறு போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் சாதனைக்கு உறுதுணையாக இருந்து வருபவர் நமது துணை முதலமைச்சர் உதயநிதி’ என்றார்.


