சென்னை: விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக ரூ.75 லட்சம் நிதியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். இந்த ஆண்டு விளையாட்டு போட்டிகளின் பயன்பாட்டிற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காவும், ஊரக பகுதிகளில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் பங்கேற்பாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் கீழ் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக ரூ.75 லட்சத்துக்கான காசோலையினை முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் , அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் கிருஷ்ணன், துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.