4.3.2025 செவ்வாய்
காங்கேயம் முருகன்
மயில் மீது உலா
காங்கேயம் முருகன் கோயிலில் இன்றைய உற்சவத்தில் முருகன் மயில் மீது உலா வருகிறார். காங்கேயம் அருகே 4 .கி. மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் ஒரு மலையின் மீது இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோயிலை அடைய 496 படிகள் உள்ளன. இது 10 மற்றும் 12 ஆம் நூற்றாண்டு பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மலைக்கோயில் முழுவதும் ராஜகோபுரம், தீபஸ்தம்பம், கொடிமரம், முன் மண்டபம், பிராகாரம், மூலவரின் கருவறை ஆகியவற்றைக் கொண்ட கல்லால் கட்டப்பட்டுள்ளது, ராஜகோபுர மண்டபம் மற்றும் தீப ஸ்தம்பத்திற்கு முன்னால், அரசு மற்றும் வேம்பு ஆகிய இரண்டு மரங்களுக்கு இடையில் விநாயகர் இருக்கிறார். அந்த இடத்தில் கைலாசநாதர் - ஞானாம்பிகை - ஆகிய தெய்வங்களுக்கும் சந்நதிகள் உள்ளன; தீபஸ்தம்பம்; கன்னிமூல கணபதி, தண்டபாணி, கொடிமரம் மற்றும் பலிபீடம். சுமூகரும் சுதேகரும் துவாரபாலகர்கள். மேலும், அஷ்ட துர்க்கைகள், ஆலம்பாடி வன சாட்சி (கட்டம்மை), பாப்பினி அங்காள பிரமேஸ்வரி, காங்கேயம் ஆயி அம்மன், வழுப்புரம்மன், தங்கம்மன், அந்தனுரம்மன், கரிய காளி அம்மன் மற்றும் செல்வநாயகி அம்மன் என 8 சக்தி ஆலயங்களும் உள்ளன.
மலைக்குச் செல்லும் 18வது படி சத்யா படி என்று அழைக்கப்படுகிறது, இங்கு இரண்டு வழக்குரைஞர்களுக்கிடையேயான வழக்குகள் கடந்த காலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டன. படி என்றால் படி என்று பொருள். இது புராண படி என்றும் அழைக்கப்படுகிறது. விசாரணைகள் மற்றும் நீதி வழங்கப்படுவதைக் காண சடைச்சி அம்மன் இந்தப் படியில் வசிப்பதாக நம்பப்படுகிறது. அன்னை வள்ளி அம்மனின் பாதங்களுடன் ஒரு அர்த்த-மேரு-அ யந்திரமும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. படிகளில் ஏறுவதே ஒரு தவம் என்று நம்பப்படுகிறது. ஆகம விதிகளின்படி சுப்பிரமணியரின் சந்நதியில் நவக்கிரகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கோயிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி இருக்கிறார். கிரகங்கள் வரிசையாக - சூரியன், சந்திரன், செவ்வாய், குரு மற்றும் சுக்கிரன் - வைக்கப்பட்டுள்ளன. மற்ற கோயில்களைப் போலல்லாமல் சனியும் செவ்வாயும் ஒன்றாக இருப்பது இதன் சிறப்பு. இந்த ஒரே கோவிலில் நவக்கிரகங்கள் - 9 கிரகங்களை வழிபடுவது, அவற்றிற்குக் காரணமான சில கோயில்களில் அவற்றை வழிபடுவதற்குச் சமம் என்று நம்பப்படுகிறது.திருமணம், குழந்தை பாக்கியம், தொழிலில் முன்னேற்றம், நோய் நிவாரணம் போன்றவற்றிற்காக பக்தர்கள் சுப்பிர மணியரிடம் வேண்டுகிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் பிரார்த்தனைகளுக்கு உரிய பலன்களைப் பெறுகிறார்கள். நவக்கிரக சந்நதியை 9 முறை வலம் வருவது பக்தரின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாகும். சனி பகவானுக்குத் தனியாக சந்நதி உள்ளது.
5.3.2025 புதன்
சஷ்டி விரதம்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று புதன்கிழமை. சஷ்டி திதி. சஷ்டி விரதம் இருக்க வேண்டிய தினம். மன உறுதியையும், நினைத்த காரியத்தில் வெற்றியையும், குழந்தை வரத் தையும் தரக்கூடிய அற்புதமான விரதம் சஷ்டி விரதம். ஆறாவது திதி சஷ்டி திதி முருகப்பெருமான் ஆறு முகங்களை உடையவன். ஆறு தலைகளால் ‘‘ஆறுதலை’’ வழங்குபவன். செல்வம், கல்வி, ஆயுள், ஆரோக்கியம், புகழ், ஞானம் என்ற ஆறு பொருட்களையும் அள்ளி அள்ளித் தருபவன். கூர்மையான வேல் கொண்டு, அகப்பகையையும் புறப்பகையையும் விரட்டுபவன். சஷ்டி விரதம் முதல் நாள் பஞ்சமியில் தொடங்கி, மதியம் உணவுக்கு பின், இரவு பால் பழங்களை மட்டும் உண்டு, மறுநாள் முழுக்க உபவாசம் இருந்து, மாலையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வைத்து, புஷ்ப மாலைகளைச் சாற்றி, படையல் போட்டு, பின் உணவு உண்டு, விரதத்தை முடிப்பது சாலச் சிறந்தது இன்றைய தினம் இந்த திருப்புகழை பாராயணம் செய்யவும். இன்று முருகனுக்குரிய இன்னொரு சிறப்பும் இருக்கிறது. காலை பரணி நட்சத்திரம் முடிந்து கிருத்திகை நட்சத்திரம் துவங்குகிறது. கிருத்திகை விரதமும் இன்றைய சஷ்டி விரதத்தோடு சேர்ந்து வருகிறது. வைத்தீஸ்வரன் கோயில் போன்ற முக்கியமான ஆலயங்களில் இன்று முருகனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். வைணவத்திலும் கார்த்திகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். காரணம் திருமங்கை ஆழ்வார் உடைய ஜன்ம நட்சத்திரம். பெரும்பாலான பெருமாள் கோயில்களில் திருமங்கையாழ்வார் சந்நதி இருக்கும். அங்கே இன்று திருமங்கையாழ்வாருக்கு திருமஞ்சனமும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும்.
5.3.2025 புதன்
நாபுதூர் அடைக்கலம்
காத்த அய்யனார் பெரிய பூஜை அய்யனார் என்பவர் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் போற்றப்படும் தமிழ் நாட்டார் தெய்வமாகும். அய்யனார் வழிபாடு கிராமப்புறத் தமிழ் மக்களிடையே பரவலாக உள்ளது. பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு இருந்து வருகிறது. காவல் தெய்வ வழிபாடு என்றும் சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊர்களிலும் காவல் தெய்வமாக இவரை வழிபடுகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள ஐயனாரின் கோயில்களில் ஐயனார் அவரது பரிவார தெய்வங்களுடன் யானை மற்றும் குதிரைகளில் அமர்ந்த நிலையில் பிரமாண்டமாக வண்ணமயமான சிலைகளால் அமைக்கப்பட்டிருக்கும் இவர் கம்பீரமான தோற்றத்துடன் கையில் செண்டாயுதம் எனும் சாட்டை வைத்திருப்பார் (இது அடக்கி ஆளுதல் எனும் குறியீடு). பெரிய யானைகள் மற்றும் பெரிய குதிரை சிலைகள் ஐயனார் கோயில்களில் இருக்கும். பொதுவாக ஊர் எல்லையிலும், நீர் நிலைகளின் அருகிலும் வெட்டவெளியில் கோயில் அமைந்திருக்கும். தேவியர்கள் இருபுறமும் அமர்ந்து கையில் மலரை பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டும் மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர். இந்த வகையில் அடைக்கலம் காத்த அய்யனார் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோயில்கள் இருக்கின்றன. இதில் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் புதூர் என்ற ஊரில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் பிரசித்தமான மாசி மாதம் இவருக்கு பெரிய பூஜை நடைபெறும். இந்த ஆண்டு 138 ஆம் வருட மாசி களரி பெரும் பூஜை விழா பின்வருமாறு நடைபெற இருக்கிறது. ஸ்ரீ குச்சிவீட்டு மாதா புகழ் பெற்றிருக்கும் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயில் விழா மாசி மாதம் 21-ம் தேதி (5.3.2025) புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு ஸ்ரீ குச்சிவீட்டு மாதா சுவாமிக்கு அபஷேக ஆராதனை செய்து, மற்றும் அன்று இரவே திசை நோக்கி கும்பிட்டு இரவு ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் சுவாமிக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை செய்து பெரும்பூஜை நடைபெறும். மறுநாள் (6.3.2025) மாசி மாதம் 22-ம் தேதி வியாழக்கிழமை இரவு 12.00 மணியளவில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் சுவாமிக்கு பெரிய பூஜை சிறப்பாக நடைபெறும்.
5.3.2025 புதன்
திருப்பரங்குன்றம்
பங்குனித் திருவிழா
முருகனின் முதல்படைவீடு திருப்பரங்குன்றம். இங்கே உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் பங்குனி விழா மற்றும் வைகாசி விசாகம் முதலிய விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். அதில் இந்த ஆண்டு பங்குனித் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை கம்பத்தடி மண்டபத்தில் கொடியேற்றத்துடன் துவங்கும் ஒவ்வொரு நாளும் உற்சவ மூர்த்திகளின் வீதி உலாக் காட்சிகள் நடைபெறும். மார்ச் மாதம் 16-ஆம் தேதி சூர சம்ஹார லீலை நடைபெறும். மற்ற இடங்களில் கார்த்திகை மாதம் கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருப்பரங்குன்றத்தில் பங்குனி விழாவில் சூரசம்ஹார லீலை நடைபெறும். அடுத்த நாள் பட்டாபிஷேகமும் அதற்கடுத்த நாள் மார்ச் 18 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். திருப்பரங்குன்றத்தில் குன்றத்து ஆண்டவர் கோயிலும் இருக்கின்றது. அந்த ஆண்டவர் கோயிலிலும் இன்றைய தினம் திருவிழா தொடங்கும்.
6.3.2025 வியாழன்
நத்தம் மாரியம்மன்
பால் காவடி உற்சவம்
இன்று நத்தம் மாரியம்மன் கோயிலில் பால் காவடி உற்சவம். தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் களில் ஒன்றாகத் திகழ்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலில் அம்மன் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கோயிலின் வெளிப்பிராகாரம் கருங்கற்களால் கட்டப்பட்டு, அழகுடன் காட்சியளிக்கிறது. இந்தக் கோயிலில் 22 கல் தூண்கள் நிலை நிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. மாசி மாதத்தில் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழாவில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நத்தம் மாரியம்மன் கோயிலுக்கு வருகின்றனர். 15 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழாவின் தொடக்கமாக நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் மஞ்சள் காப்பு அணிந்து, கரந்தமலை சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனை வழிபடுகின்றனர்.
6.3.2025 -வியாழன்
ஸ்ரீ ராகவேந்திரர் ஜெயந்தி
16 ஆம் நூற்றாண்டின் துறவி மற்றும் குரு ஸ்ரீ ராகவேந்திரர். ஸ்ரீ மத்வாச்சாரியாரின் த்வைத தத்துவத்தை பிரபலப் படுத்தியவர். குரு ராகவேந்திரா சுவாமி ஜெயந்தி ( வர்தந்தி) இந்த வருடம் மார்ச் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் குருவின் பிறந்தநாள் ஸ்ரீ ராயரின் சீடர்களால் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராகவேந்திர குரு வைபவத்ஸவ விழா என்றழைக்கப் படும் முக்கிய விழாவானது மந்த்ராலயாவில் நடைபெறுகிறது. ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமிகள்வர வர்தந்தி உற்சவத்தையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீவாரி வஸ்திரத்தை TTD அதிகாரிகள் கொண்டு வர. ஸ்ரீமட அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி ஸ்ரீவாரி வஸ்திரத்தை வரவேற்பர். இந்த வஸ்திரம் ஸ்ரீ ராயருக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
7.3.2025 வெள்ளி
திருக்கச்சி நம்பிகள் திருநட்சத்திரம்
திருக்கச்சி நம்பிகள் சென்னைக்கு அருகே பூவிருந்தவல்லியில் அவதாரம் செய்தவர். இவருடைய இயற்பெயர் கஜேந்திர தாசர். ஸ்ரீ ராமானுஜரின் ஆன்மீக குரு. ஆளவந்தாரின் சீடர். காஞ்சிபுரத்தில் தேவப் பெருமானுக்கு (வரதராஜர்)திரு ஆலவட்டம் (விசிறி வீசும்) கைங்கரியம் செய்தவர். அதனாலேயே பெருமாளோடு பேசுகின்ற வாய்ப்பைப் பெற்றவர். பேரருளாளன் பெருமை பேசும் விதமாக, ‘‘தேவராஜ அஷ்டகம்’’ என்னும் கிரந்தத்தை அருளிச்செய்து, பரம ஸாத்விகராய் தன் தொண்டுகளைத் தொடர்ந்து செய்துவந்தார். மாசி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் (இன்று) அவதரித்த அவருடைய உற்சவம் வைணவ ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும். பூவிருந்தவல்லியில் திருக்கச்சி நம்பிகளின் உற்சவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
4.3.2025 செவ்வாய்க்கிழமை- கோவை கோனியம்மன் திருக்கல்யாணம்.
5.3.2025 புதன்கிழமை- கிருத்திகை விரதம்.
7.3.2025 வெள்ளிக்கிழமை -கோவை கோனியம்மன் இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம்.



