22.2.2025 - சனிக்கிழமை காளஹஸ்தி சிவசைலம் ஸ்ரீசிவபெருமான் பவனி
கண்ணப்ப நாயனார் சிவபூஜை செய்த திருக்காளத்தி, 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றும், அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்றான. ஸ்ரீசைலம் முதலிய சிவாலயங்களில் மகா சிவராத்திரி திருவிழா பிரம்மோற்சவமாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது ஒவ்வொரு நாளும் சுவாமி காலையிலும் மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் காட்சி வைபவம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று மாலை சிவபெருமான் வீதி உலா வருகின்றார்.
24.2.2025 - திங்கட்கிழமை காரிய நாயனார் குருபூஜை
``கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்” என்று பாடினார் திருத்தொண்டத் தொகையில் சுந்தரர்.காரி நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். வேதம் கற்று, அந்த வேதத்தால் சிவனையே வாழ்த்தி வாழும் மறையவர்கள் உள்ள திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார். தமிழ் இலக்கியத்தில் பெரும் புலமை மிக்கவர். கவிதை பாடுவதில் வல்லவர். இலக்கண நுட்பங்களை அறிந்தவர். இத்தனை கலைகளையும் சிவனைப் பாடுவதில் பயன்படுத்தியவர். அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் மகிழும்படி பொருள் விரித்துரைத்தார்.அவர்கள் பரிசாகத் தந்த பெரும் செல்வத்தைக் கொண்டு சிவபெருமானுக்குப் பல கோயில்கள் கட்டினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை அள்ளி அள்ளி வழங்கினார். சிவபெருமானையும் சிவனடியார்களையும் போற்றும் இடையறாத அன்பினாலே நிறை வாழ்க்கை வாழ்ந்து சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார். அவர் குருபூஜை இன்று மாசி பூராடம்.
28.2.2025 - வெள்ளிக்கிழமை வேதாரண்யம் சிவாலயம் பவனி
திருமறைக்காடர் (வேதாரண்யம்) கோயில் என்பது சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். மூலவர் திருமறைக்காடர்; தாயார் வேதநாயகி ஆவர். இத்தலத்தின் தல விருட்சங்கள் வன்னிமரம் மற்றும் புன்னைமரமாகும். வேததீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தில் உள்ளன.ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றாக உள்ள தலமிது. கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.இத்தலத்தின் தியாகராஜர் புவனி விடங்கர் என்றும் அவரது நடனம் ஹம்சபாத நடனம் என்றும் இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்றும் அறியப்படுகிறது. ‘‘வேதாரண்யம் விளக்கழகு” என்று இக்கோயிலுக்குப் பெருமை உண்டு. அகத்தியர், வசிஷ்டர், கௌதமர், விசுவாமித்திரர், நாரதர், மாந்தாதா, முசுகுந்த சக்கரவர்த்தி, ஸ்ரீராமர் ஆகியோரால் வழிபடப்பட்டதாகும். வேதங்கள் நான்கும் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் இருக்கும் இறைவனை பூஜை செய்து வந்தன. கலியுகம் தொடங்கும் தருவாயில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்ததல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி திறந்து வைத்தனர். இத்திருக்கோயிலில் மாசிமக பிரம்மோற்சவப் பெருவிழா 23 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு. அதில் ஒரு நாளான இன்று சுவாமி வீதி உலா காட்சி கோலாகலமாக நடைபெறும்.
24.2.2025 - திங்கட்கிழமை - சர்வ ஏகாதசி.
25.2.2025 - செவ்வாய்க்கிழமை - மகா பிரதோஷம்.
26.2.2025 - புதன்கிழமை - திருவோண விரதம்.
27.2.2025 - வியாழக்கிழமை - சர்வ அமாவாசை.
27.2.2025 - வியாழக்கிழமை - திருப்பதி கபிலேஸ்வர சுவாமி திருக்கல்யாணம்.
28.2.2025 - வெள்ளிக்கிழமை - திருக்குறுங்குடி அழகிய நம்பி தெப்பம்.
28.2.2025 - வெள்ளிக்கிழமை - மாம் பலம் கோதண்டராமர் கருடசேவை.
28.2.2025 - வெள்ளிக்கிழமை - கோச்செங்கண் சோழன் குருபூஜை.


