Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

யாத்திரையும் மேல்துண்டும்…

பல வருடங்களுக்கு முன்,ஸ்ரீகாஞ்சி மடத்தில் மகா ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர் ஓர் இளம் வைதிகத் தம்பதி. அந்த இளம் வைதிகருக்குச் சுமார் 25 வயதிருக்கும். அவர் மனைவிக்கு 20 இருக்கலாம். வேறு ஒரு பக்தரிடம் உரையாடிக்கொண்டிருந்த ஆச்சார்யாள், அதை நிறுத்திவிட்டு அந்தத் தம்பதியை நிமிர்ந்து பார்த்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.பெரியவா உற்சாகத்துடன், “ஏண்டாப்பா, நீ மதுரை சேஷு கனபாடிகளோட புள்ளையாண்டான் ரகுநாதன்தானே? ஆனா… இப்போ உன்னை நான் அப்டி கேக்கக் கூடாது. ஏன்னா… இப்போ நீ ரகுநாத சாஸ்திரிகளாயிட்டே! மதுரை பிராந்தியத்துலே ஒங்கப்பா மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்சவனாகவும் ஆயிட்டே” என்று கேட்டுவிட்டுத் தொடர்ந்தார்…

“இவ ஒன் ஆம்படையாள் (மனைவி), தெரியறது. இவ திருச்சிராப்பள்ளி வைத்யநாத கனபாடிகளோட பேத்தி. சுப்ரமண்ய வாத்தியாரின் ஏக புத்ரி. நான் சொல்றது சரிதானே? போன வருஷம் ஒங்க கல்யாணப் பத்திரிைகயை எடுத்துண்டு ஒங்கப்பா கனபாடிகளும், மாமனார் சுப்ரமண்ய வாத்யாரும் மடத்து ஆசீர்வாதத்துக்காக வந்திருந்தாளே. அப்போ நீயும் வந்து நமஸ்காரம் பண்ணினே இல்லியா… சரி… சரி! இப்போ தம்பதி ஒத்துமையோட சௌக்யமா இருக்கேளோன்னோ?”

ஸ்வாமிகள் உரிமையோடு கேட்டு முடித்தார்.உடனே ரகுநாத சாஸ்திரிகள், “ரொம்ப சௌக்யமா இருக்கோம் பெரியவா, ஒங்க அனுக்ரஹத்திலே” என்று கைகூப்பிக்

சொன்னார்.பெரியவா விடவில்லை. “நீ சொல்லிப்டே, உன் ஆம்படையா வாயே திறக்கலியே” என்று சிரித்தார்.உடனே அந்த இளம் மனைவி சுதாரித்துக் கொண்டு, “எம் பேரு அலமேலு பெரியவா… சந்தோஷமாகத்தான் இருக்கோம்… சந்தோஷமாத்தான் இருக்கோம்” என்று சொன்னாலும், அவள் குரலில் இழையோடிய வருத்தத்தைக் கண நேரத்தில் புரிந்து கொண்டார் ஸ்வாமிகள்.

“இல்லேம்மா, நீ ஏதோ மனவருத்தத்தோடு இருக்கேங்கறத உன் குரல் சொல்றதே? என்ன… சொல்லு… சொல்லு” என்று அன்பாக விசாரித்தார் ஸ்வாமிகள்.“அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா”சமாளித்தாள் அலமேலு.“இல்லே… இல்லே! உன் குரல் சொல்றதே… நீ ஏதோ வருத்தத்துல இருக்கேங்கிறத. என்ன விஷயம் சொல்லு” கனிவுடன் கேட்டார் ஸ்வாமிகள்.அலமேலு தயங்கிய படியே, “பெரியவா, நா ரொம்ப தெய்வபக்தி உள்ளவள். பால்யத்திலேருந்தே சாஸ்திர சம்பிரதாயங்கள்ல பூர்ண நம்பிக்கை உண்டு. கல்யாணத்துக்கு முன்னாடி நெறய க்ஷேத்ராடனம் எங்க குடும்பத்தோடு, வேண்டியவாளோடு போயிருக்கேன். அது நேக்கு ரொம்பப் புடிக்கும். இப்போ இவரோடு கல்யாணமாகி ஒரு வருஷமாறது. அதுக்கப்புறம் ஒரு இடம் போகலே பெரியவா. அதுதான் வருத்தம்” என்று முடிப்பதற்குள், “ஏன்… ஏன் போக முடியலே?” என்று இடைமறித்தார் ஸ்வாமிகள்.

அலமேலு தயங்கியபடியே, “விவாஹத்துக்குப் பிறகு நான் தன்னிச்சையா தீர்த்த யாத்ரா போக முடியாதோல்லியோ பெரியவா! பர்த்தாவும் (கணவனும்) கூட வந்தாத்தானே யாத்ரா பலன் கிடைக்கும்? ரெண்டு மூணு தடவை கூப்டேன். வரமாட்டேங்கறார்.” என்று விவரித்தவள், கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.விஷயத்தைப் புரிந்துகொண்ட ஆச்சார்யாள், “அழப்டாது… அழப்டாது!” என்று சமாதானப்படுத்திவிட்டு, “என்ன ரகுநாத சாஸ்திரிகளே, ஆம்படையாளை இப்படி கண்கலங்க விடலாமோ? நல்ல விஷயந்தானே சொல்றா? தீர்த்த யாத்ரா… க்ஷேத்ராடனம் கூப்டா போய்ட்டு வர வேண்டியதுதானே? அதுல என்ன சிரமம்?” என்று புருவங்களை உயர்த்திக் கேட்டார்.

இளைஞர் ரகுநாத சாஸ்திரிகள் மீண்டும் ஒரு தடவை பெரியவாளை நமஸ்கரித்து எழுந்து பவ்யமாகச் சொன்னார், “அவ சொல்றதும் ஞாயம்தான் பெரியவா. ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை… பத்து நாளுக்குக் குறையாம மத்தவாளோட சேர்ந்து வடதேச க்ஷேத்ரங்களுக்கு யாத்ரை போய்ட்டு வரணுங்கறா. ஆகிற கார்யமா அது பெரியவா?”

“ஏன், போய்ட்டுத்தான் வாயேன். ஆம்படையாதானே அன்போட கூப்பிடறா?” இது ஸ்வாமிகள்.

உடனே ரகுநாத சாஸ்திரிகள் குரல் தழுதழுக்க, “பெரியவாளுக்கு எல்லாம் தெரியும். நா வைதிகத்தை வருத்தியா (தொழிலா) வச்சுண்டிருக்கேன். அப்பாவுக்கும் ஒடம்பு முடியலே. அவர் பாத்துண்டிருந்ததை எல்லாம் இப்போ நா பாக்கறேன். வருத்தியை விட்டுட்டு, ரண்டு மாசத்துக்கு ஒரு தரம் பத்துப் பதினஞ்சு நாள் நா எப்டி இவளோடு யாத்திரை போக முடியும் பெரியவா? நீங்களே சொல்லுங்கோ?” என்று முடித்தார்.

சற்று நேரம் மௌனமாக இருந்த பெரியவா, பிறகு சிரித்துக் கொண்டே, “ஒஹோ! இந்த விஷயத்துலே என்னை சரியான மத்யஸ்தம் பண்ணிவைக்கச் சொல்லிக் கேக்க வந்தேளாக்கும்?” என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார், “அலமேலு சொல்றதும் ஞாயம்தான். அவளுக்கு பக்தியுடன் தீர்த்த யாத்ரா போறதுலே ஒரு ருசி இருக்கு. கல்யாணம் ஆனப்புறம் பர்த்தாவுடன் (கணவனுடன்) போனாத்தான் ‘யாத்ரா பவன்’ கிட்டும்கிறதையும் தெரிஞ்சு வச்சிண்டிருக்கா. ஆனா, நீ சொல்றதுலேயும் நியாயம் இருக்கு. நோக்கு வ்ருத்தி வைதிகம்.

மாசம் முப்பது நாளும் ஜோலி சரியாயிருக்கும். ரண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஆம்படையாளுடன் தீர்த்த யாத்திரை போறது ரொம்பரொம்ப சிரமம். என்ன பண்றது?”

“நீங்கதான் ஒரு மார்க்கம் சொல்லணும் பெரியவா…” இருவரும் கோரஸாக ஸ்வாமிகளைப் பிரார்த்தித்தனர். ஸ்வாமிகள் சற்று நேரம் யோசனை பண்ணியபடியே அமர்ந்திருந்தார். என்ன சொல்லப் போகிறாரோ என அங்கிருந்த அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார்: “அலமேலு! ரண்டு மாசத்துக்கு ஒரு தரம் தீர்த்த யாத்ரா போகணும்கிறதுலே நீ தீவிரமா இருக்கே. அதுலேயும், பர்த்தாவும் கூட வந்தாத்தான் யாத்ரா புண்ய பலன் கிடைக்குங்கிற தர்ம சாஸ்திரத்தையும் தெரிஞ்சு வச்சிண்டிருக்கே. வைதிகத்தைத் தொழிலா வச்சிண்டிருக்கறதாலே, யாத்ரைக்கு உன்கூட அவர் வர்றது ரொம்ப சிரமம்கிறார். ஒரு கார்யம் பண்ணுங்கோ…” ஆச்சார்யாள் முடிப்பதற்குள் “அனுக்ரஹிக்கணும் பெரியவா” என்றனர் தம்பதி.

ஸ்வாமிகள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, “ஒரு மார்க்கம் சொல்றேன். கேளு அலமேலு. நீ எப்ப தீர்த்த யாத்ரைக்குக் கிளம்பினாலும், பொறப்படறத்துக்கு முன்னாடி, ஆத்துக்காரரைக் கிழக்கே பார்த்து நிக்கச் சொல்லி நமஸ்காரம் பண்ணிப் பிரார்த்தனை பண்ணு. நீ என்ன பண்றே ரகுநாத சாஸ்திரிகளே உன்னோட மேல் அங்கவஸ்திரத்தை எடுத்து ஆம்படையாகையிலே கொடுத்து, ‘இது நா உன்கூட தீர்த்த யாத்ரை வர்றதுக்கு சமானமானது. க்ஷேமமா போய்ட்டு வா’னு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பு. தம்பதியா யாத்ரை போன புண்யமும் கிடைக்கும்… ஒத்தருக்கும் மன சிரமமும் இருக்காது. என்ன சந்தோஷம்தானே,” என்று கனிவுடன் கேட்டு, பிரசாதம் அளித்தார்.

மகா பெரியவாள் சொன்ன இந்த பதிலால் இளம் தம்பதிக்குப் பரம சந்தோஷம். பெரியவாளை நமஸ்கரித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பெரியவாளின் சமயோஜிதமான இந்த அனுக்ரஹத்தைக் கேட்டு, வியந்து மகிழ்ந்தனர்.

ரமணி அண்ணா