Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம்மாழ்வாரும் வைகாசி விசாகமும்

ஆழ்வார் என்றால் நம்மாழ்வார்தான்

வைணவத்தில் பல ஆழ்வார்களும், பல திவ்யதேசங்களும் இருந்தாலும், ‘பெயர்ச்சொல்லால்’ ஆழ்வார் என்றால் நம்மாழ்வார். கோயில் என்றால் ஸ்ரீரங்கம். பெருமாள் என்றால் நம்பெருமாள். ஜீயர் என்றால் நஞ்சீயர். தென்னரங்கம் எனில் கோயில், திருவாய்மொழி எனில் ஆழ்வார்” என்பது வைணவப் பெரியோர்களின் வாக்கு. இதை பின்வரும் பாடலால் அறியலாம்.

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை

என்பர் அவர் தம் ஏற்றத்தால் - அன்புடையோர்

சாற்று திருநாமங்கள் தான் என்று நன் நெஞ்சே

ஏத்ததனைச் சொல்லி நீ இன்று!

பன்னிரு ஆழ்வார்களில் தலைவராகக் கருதப்படுபவர் நம்மாழ்வார். மற்ற ஆழ்வார்கள் அனைவரும் இவருடைய அவயவங்களாக (உறுப்புகளாக) கருதப்பட, இவர் ஒருவரே “அவயவி” (உடல்) என்று போற்றப்படுகிறார். இவர் அருளிய நான்கு பிரபந்தங்கள் (திருவிருத்தம், திருவாசி ரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி) நான்கு வேதங்களின் சாரமாகக் கருதப்படுகின்றன.

வைகாசி விசாகமும் நம்மாழ்வாரும்

நம்மாழ்வார், பாண்டிய நாட்டில் உள்ள திருக்குருகூரில் (இன்றைய ஆழ்வார்திருநகரி) வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ‘மாறன்’. இவர் பிறந்தவுடன் அழ வில்லை, பால் குடிக்கவில்லை, கண்களைத் திறக்கவில்லை. உலக ஞானம் ஏதுமின்றி பகவத் சிந்தனையிலேயே இருந்தார். உலக வழக்குக்கு மாறி இருந்ததால் மாறன் என்பர். ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு புளிய மரத்தின் பொந்தில், 16 ஆண்டுகள் எவ்வித அசைவுமின்றி தவம் இருந்தார்.

இந்த மரம் இன்றும் அத்தலத்தில் ‘திருப்புளி ஆழ்வார்’ என்று வணங்கப் படுகிறது.வடதிசையில் இருந்து வந்த மதுரகவி ஆழ்வார், ஒரு ஒளிப் பிழம்பைப் பின்தொடர்ந்து வந்து நம்மாழ்வாரைச் சந்தித்து, அவரிடம் கேள்வி கேட்டு அவரைப் பேச வைத்தார்.

ஒளியும் ஒலியும்

முதலில் மதுரகவியார் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார். அவர் லேசாக விழி திறந்தார். இறை உணர்வைத் தேடி வடக்கே பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்றிருந்த, மதுரகவி ஆழ்வாருக்கு,

இரவில் ஒளிகாட்டி ஆழ்வார் திருநகரிக்கு கொண்டு வந்து சேர்த்த ஆழ்வார், விழி திறந்தார். தனக்கு வழிகாட்டத் தயாராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார் மதுரகவி ஆழ்வார், அடுத்து ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வியின் மூலம் அவர் ஒலி வழியாகவும் தனக்கு உபதேசம் செய்கிறாரா என்று பார்த்தார்.

அப்படி அவர் கேட்ட கேள்விதான் செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? 16 வயது வரை யார் கேட்டாலும் வாய் திறக்காத நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரின் ஆன்ம வேட்கையை உணர்ந்து, சோதி வாய் திறந்து பதில் சொன்னார். அந்தப் பதில் சாதாரணமானது கிடையாது. அந்த ஒரு வரி பதிலில், உலகத்தின் அத்தனைத் தத்துவங்களும் இருக்கின்றன. அந்தத் தத்துவங்களின் வெளிப்பாடாகத்தான் அவர் நாலு பிரபந்தங்களைப் பாடினார். முதலில் ஒளி மூலம் வழிகாட்டிய நம்மாழ்வார், ஒலியின் மூலமாகவும் பாசுரங்கள் பாடி வழிகாட்டினார். ஆழ்வார் திருநகரியின் புளிய மரப் பொந்திலே “ஒளியும் ஒலியும்” முதன் முதலில் பரவசமாக வெளியானது.

வினைகளும் பிறவியும்

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’ என்று மதுரகவி ஆழ்வார் கேட்டார். ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்றார் என்று நம்மாழ்வார் விடை கூறினார். செத்ததன் வயிறு: அறிவற்ற ஜடப் பொருளை (சடப் பொருள்) அல்லது உடலைக் குறிக்கிறது. உடல் உயிர் அற்ற நிலையில் “செத்தது” போன்றது (பிரகிருதி).சிறியது: ஆன்மாவை (ஜீவாத்மா) குறிக்கிறது. ஆன்மா அணுவை விட மிகச் சிறியது, ஆனால் அளப்பரிய ஆற்றல் கொண்டது.அத்தைத் தின்று அந்த ஆன்மா எதை உண்ணும்? தான் தங்கியிருக்கும் உடலால் விளையும் வினைகளை (பாவ - புண்ணியங்களை) இன்ப துன்பங்களாக நுகர்ந்து கிடக்கும்: அந்த உடலுக்குள்ளேயே கட்டுண்டு (சம்சாரம்) உழன்று கொண்டிருக்கும்.

கேள்வியும் பதிலும்

கேள்வியும் பதிலும் என்பது அற்புதமான விஷயம். பதில் சொல்வதை விட கேள்வி கேட்பதற்கு மிகுந்த ஞானம் வேண்டும். நாம் மிகச் சரியான கேள்விகளைக் கேட்டால், இந்தப் பிரபஞ்சம் நமக்கு உள்ளுணர்வின் மூலம் மிகச்சரியான ஒரு பதிலைத் தரும். அப்படிக் கேள்வி கேட்டு பதில் பெற்றவர்கள் தான் ஞானிகளாகிறார்கள். இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் தர வேண்டும் என்பதற்காகவே, இந்தப் பிரபஞ்சம் நம்மாழ்வார் போன்ற பல மஹா ஞானிகளை உருவாக்குகிறது.

மதுரகவி ஆழ்வார் கேட்ட கேள்வி வெறும் விடுகதை அல்ல; சாரீரக மீமாம்சை எனப்படும் தத்துவத்தின் சாரத்தை அடிநாதமாகக் கொண்டது. சாரீரகம் என்றால் ‘உடல் சார்ந்தது’ என்று பொருள். அழியக்கூடிய உடலுக்குள் (சரீரம்), அழியாத ஆன்மா (சாரீரகன்) எப்படிப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதே இந்த சாஸ்திரம். இந்த உரையாடல் வைணவ விசிஷ்டாத்வைத தத்துவத்தின் மூன்று முக்கிய உண்மைகளை (தத்துவத்ரயம்) தொட்டுச் செல்கிறது: அசித் (செத்ததன் வயிறு): அறிவற்ற ஜடப்பொருள் அல்லது உடல்.

இதற்குத் தானாக இயங்கும் தன்மை இல்லை. சித் (சிறியது): அறிவுள்ள ஆன்மா. இது அணு வடிவிலானது (சிறியது), ஆனால் உடல் முழுவதும் அறிவை வியாபிக்கச் செய்யும் திறன் கொண்டது.ஈஸ்வரன், இந்த இரண்டையும் நியமிக்கும் பரம்பொருள்.

நம்மாழ்வாரின் வைகாசி உற்சவத்தை முதலில் நடத்தியவர்

இதன் பின் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் திருவடியே கதி என்று இருந்தார். தன்னுடைய குருவின் மேன்மையை பிரகாசப்படுத்துவதற்காக, கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று தொடங்கும் 11 பாசுரங்கள் கொண்ட பிரபந்தத்தை இயற்றினார். நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கு இதுவே திறவுகோல் என்பார்கள். இந்தப் பாசுரங்களை ஓதாமல் நம்மாழ்வாரின் பாசுரங்களை ஓத மாட்டார்கள். இது முழுக்க முழுக்க

நம்மாழ்வாரின் பெருமையையும், மதுரகவி ஆழ்வார் ஆச்சாரிய பக்தியையும் சொல்லுகின்ற பிரபந்தம். பகவானைப் பிடிக்க வேண்டும் என்று சொன்னால் குருவைப் பிடிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக காட்டும் பிரபந்தம்.

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்

மேவினேன் அவன் பொன்னடிமெய்ம்மையே

தேவு மற்றறியேன் குருகூர் நம்பி

பாவின் இன்னிசை பாடித் திரிவனே.

எனக்கு வேறு தெய்வம் எதுவும் கிடையாது, நம்மாழ்வார் என்னுடைய தெய்வம்.திருவாய் மொழியின் இன்னிசையைப் பாடுவதுதான் இனி என்னுடைய வாழ்நாள் பணி, என்று நம்மாழ்வாருக்குக் கோயிலைக் கட்டி அவருடைய திருவாய்மொழியை உலகெங்கும் பரப்பும் திருப்பணியைச் செய்தார் மதுரகவியாழ்வார். நம்மாழ்வார் வைகாசி விசாக உற்சவத்தை முதல் முதலில் அவர் நடத்திக் காண்பித்தார்

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்?

மணவாள மாமுனிகள் அருளிய உபதேச ரத்தின மாலை எனும் நூலில், வைகாசி விசாகத்தின் சிறப்பை இப்படிப் பாடுகிறார்:

“உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்?

உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர்? - உண்டோ

திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ

ஒருபார்தனில் ஒக்கும் ஊர்?

இதன் பொருள் மிகவும் ஆழமானது:வைகாசி விசாகத்துக்கு இணையான நாள் உண்டோ?: இந்த உலகமே உய்யும்படி நம்மாழ்வார் அவதரித்த நாள் இது. ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவராகத் திகழ்பவர் நம்மாழ்வார். இவருக்கு இணையாக ஒரு ஞானியைச் சொல்ல முடியுமா? வேதங்களின் சாரத்தை அள்ளித் தரும் ‘திராவிட வேதம்’ எனப்படும் திருவாய்மொழிக்கு இணையான நூல் ஏதேனும் உண்டோ?

வைகாசி விசாகப் பெருந்திருவிழா (10 நாட்கள்)

ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகத்தையொட்டி கொடியேற்றத்துடன் நடைபெறும். இந்த 10 நாட்களும் ஆழ்வார் திருநகரியே கோலாகலமாக இருக்கும். நம்மாழ்வார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் தோளுக்கினியான், இந்திர விமானம், புன்னை மரம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம் எனப் பல்வேறு வாகனங்கள் உண்டு. இந்தத் திருவிழாவின் சிகரமே 5-ஆம் நாள் நடைபெறும் நவதிருப்பதி கருட சேவை உலகிலேயே வேறெங்கும் காண முடியாத ஒரு வியத்தகு வைபவம்:

நவ திருப்பதி கருட சேவை 25-5-2026

நம்மாழ்வாரின் அவதார தினத்தைக் கொண்டாட, நவதிருப்பதி தலங்களில் இருந்தும் அந்தந்த பெருமாள்கள் கருட வாகனத்தில் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளுவார்கள்.

* ஸ்ரீவைகுண்டம் - கள்ளபிரான் கோவில்:

* நத்தம் - விஜயாசன பெருமாள் கோவில் (வரகுணமங்கை):

* திருக்கோளூர் - வைத்தமாநிதி பெருமாள் கோவில்:

* திருப்புளியங்குடி - காய்சினவேந்தர் கோவில்:

* ஆழ்வார்திருநகரி - ஆதிநாதர் கோவில்:

* தென்திருப்பேரை - மகர நெடுங் குழைக்காதர் கோவில்

* திருக்குளந்தை - மாயக்கூத்தன் கோவில் (பெருங்குளம்)

* தொலைவில்லிமங்கலம் - தேவர்பிரான் கோவில் 1 (இரட்டை திருப்பதி)

* தொலைவில்லிமங்கலம் - அரவிந்த லோசனர் கோவில் 2 (இரட்டை திருப்பதி)

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் முதலில் வர, தொடர்ந்து மற்ற 8 பெருமாள் களும் வரிசையாக அணிவகுப்பார்கள். நம்மாழ்வார் ஹம்ச (அன்ன) வாகனத்தில் அமர்ந்து, ஒவ்வொரு பெருமாளுக்கும் மங்களாசாசனம் செய்வார்.பின்னர், நம்மாழ்வாரைத் தொடர்ந்து 9 பெருமாள்களும் கருட வாகனத்தில் வீதி உலா வருவது கண்ணுக்கினிய காட்சியாக இருக்கும். எட்டாம் திருநாள் அன்று நடைபெறும் தேங்காய் சாற்றுதல் (தேங்காய் உருட்டுதல்) ஒரு சுவாரஸ்யமான மற்றும் உணர்ச்சிகரமான நிகழ்வு. இப்படி வைகாசி விசாகம்,வைணவ குருவாகிய நம்மாழ்வாருக்கு உகந்த விழாவாக இருக்கிறது.