Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சிற்பமும் சிறப்பும்

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் (அழகியநாதர்) கோயில்

ஆலயம்: அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமாத்தூர், விழுப்புரம் மாவட்டம்.

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் மிகவும் தொன்மையான, வரலாற்று மற்றும் ஆன்மிகச் சிறப்புமிக்க ஒரு பாடல் பெற்ற சிவ ஸ்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் ஒன்றாகத் திகழும் இக்கோயில், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய பெருமைகளைக் கொண்டு, பக்தர்களின் துயரங்களைத் தீர்க்கும் உன்னத வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

தல வரலாறு மற்றும் ஆமாத்தூர் பெயர்க் காரணம்

தமிழில் ‘ஆ’ என்றால் பசு என்று பொருள். முற்காலத்தில் பசுக்கள் இறைவனை நோக்கிப் புனிதமான முறையில் வழிபாடு செய்த காரணத்தினாலேயே, இத்தலத்திற்கு ‘ஆமாத்தூர்’ (திருவாமாத்தூர்) என்ற பெயர் ஏற்பட்டது.

அபிராமேஸ்வரர் பெயர்க் காரணம்: திரேதா யுகத்தில்ஸ்ரீ ராமர் இத்தலத்திற்கு வந்து இறைவனை மனமுருகி வழிபட்டதாக நம்பப்படுகிறது. இராமபிரான் வழிபட்டதன் காரணமாகவே, இத்தல இறைவனுக்கு ‘அபிராமேஸ்வரர்’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது என்ற ஐதீகம் உள்ளது.

முருகப் பெருமான் வழிபாடு

அசுரனான சூரபத்மனை அழிப்பதற்காக, முருகப் பெருமான் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி வழிபட்டு அருள் பெற்றார் என்பதும் இத்தலத்தின் மற்றொரு முக்கிய புராண வரலாறாகும்.

கோயிலின் தனித்துவமான அமைப்பு

இத்தலத்தின் கட்டிடக் கலையிலும் கோயில் அமைப்பிலும் ஒரு வியக்கத்தக்க புதுமை காணப்படுகிறது. பொதுவாக சிவன் கோயில்களில் இறைவனும் இறைவியும் அருகருகே அல்லது ஒரே திசையை நோக்கியே வீற்றிருப்பார்கள். ஆனால், இங்கு அபிராமேஸ்வரர் (இறைவன்) கிழக்கு நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். முத்தாம்பிகை தேவி (இறைவி): இறைவனுக்கு நேர் எதிரே, மேற்கு நோக்கிய வண்ணம் எழுந்தருளியுள்ளார்.

இப்படி இறைவனும், இறைவியும் ஒன்றை ஒன்று எதிர்நோக்கிய வண்ணம் தனித்தனி கோயில்களாகக் கட்டப்பட்டிருப்பது இத்தலத்தின் ஆகச்சிறந்த தனித்துவமாகும்.

சந்நதிகளும் தெய்வங்களும்

கோயிலின் உள் மற்றும் வெளிப்பிராகாரங்களில் பல்வேறு தெய்வங்கள் தனிச்சந்நதி களில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்:

கோஷ்டம் மற்றும் வெளிப்புற சந்நதிகள்

விஷ்ணு துர்க்கை, மும்மூர்த்திகள், தட்சிணாமூர்த்தி, கையில் கரும்புடன் வீற்றிருக்கும் கணபதி மற்றும் பழமையான பிள்ளையார் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இரண்டாம் பிராகாரத்தில் விநாயகர், ராமர், காசி விஸ்வநாதர் மற்றும் சுப்பிரமணியர் ஆகியோருக்குத் தனித்தனி சந்நதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுச் சிறப்பு மற்றும் கல்வெட்டுகள்

இத்திருக்கோயில் வரலாற்று ரீதியாக மிகவும் பழமையானது. கோப்பரகேசரிவர்மன் முதலாம் பராந்தக சோழனின் (பொ.ஆ. 907-953) ஆட்சியாண்டில் இக்கோயில் ஒரு ‘கற்றளியாக’ (கற்கோயிலாக) மாற்றிக் கட்டப்பட்டது. கோயிலில் முதலாம் பராந்தகன், மாமன்னன் முதலாம் ராஜராஜன், கங்கைகொண்ட சோழன் என்று அழைக்கப்படும் முதலாம் ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன், முதற் குலோத்துங்கன் மற்றும் ராஜகேசரி திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவன் ஆகிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன.

கல்வெட்டுகளில் உள்ள முக்கியக் குறிப்புகள்

இக்கல்வெட்டுகளில் இத்தல இறைவன் திருவாமாத்தூர் உடைய பெருமானடிகள், திருவாமாத்தூர் ஆள்வார், திருவாமாத்தூர் ஆளுடையார் அழகியதேவர் மற்றும் திருவாமாத்தூர் உடைய பரமஸ்வாமி ஆகிய பல்வேறு போற்றுதலுக்குரிய பெயர்களால் குறிக்கப்படுகிறார்.இத்திருக்கோயிலைச் செதுக்கி உருவாக்கிய சிற்பி (தச்சன்) அருகூர்த் தச்சன் நாராயணன் வேற்கந்தனாகிய திருவாமாத்தூர் ஆசாரியன் ஆவார்.கோயிலின் திருச்சுற்று மண்டபத்தைக் கட்டிய பெருமை செம்பியன் காத்திமானடிகள் என்பவரைச் சாரும்.

இலக்கியச் சிறப்புகள் (பாடல் பெற்ற தலம்)

சைவ சமயக் குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பதிகங்கள் பாடப்பெற்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இதுமட்டுமன்றி, முருக பக்தரான அருணகிரிநாதர் தமது ‘திருப்புகழ்’ பாடல்களிலும் இத்தலத்தைப் பாடிப் பரவியுள்ளார்.

வழிபாட்டு பலன்களும் நம்பிக்கைகளும்

சொத்துப் பிரச்னைகள் தீருதல்: ண்ணன் - தம்பிகளுக்கு இடையே நீண்ட நாட்களாகத் தீராமல் இருக்கும் சொத்துப் பிரச்னைகள் மற்றும் குடும்பப் பகைகள் இத்தல வழிபாட்டின் மூலம் சுமுகமாக முடியும் என்பது பக்தர்களின் பலத்த நம்பிக்கை.

தர்மம் நிலைநாட்டப்படுதல்: இத்தலத்து அன்னை முத்தாம்பிகை, முற்காலத்தில் பொய் சத்தியம் செய்தவனைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டியவள். எனவே, இவளை வணங்கும் பக்தர்களுக்கு வாழ்வில் அநீதிகள் நீங்கி, நன்மைகளும் நியாயமும் கிட்டும் என்பது ஐதீகம்.