Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தெளிவு பெறு ஓம்

? தேவாரம் என்பதன் பொருள் என்ன?

- கருணாகரன், அருங்குளம்.

தேவாரம் என்பது தே + ஆரம் எனப் பிரித்தால், தெய்வத்திற்கு அணிவிக்கப்படும் பாமாலை என்று பொருள்படும். தே + வாரம் என்று பிரித்தால் இறைவனைப் புகழும் பாமாலை என்று பொருள் வரும். இரண்டும் சரிதானே. திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவபெருமான் மீது பாடிய தமிழிசைப் பாடல்களின் தொகுப்பு தேவாரம் என்று சொல்லப்படுகிறது. வைணவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ‘‘அருளிச்செயல்” என்று சொல்வது போல, சைவத்தில் திருமுறை என்று சொல்வார்கள்.

திரு ஞானசம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளையும் (1,2,3), திருநாவுக்கரசர் அடுத்த மூன்று திருமுறைகளையும் (4,5,6), சுந்தரர் ஏழாம் திருமுறையும் பாடினார். இந்த ஏழு திருமுறைகளையும் சேர்த்து தேவாரம் என்று சொன்னாலும், திருநாவுக்கரசர் பாடியதை தேவாரமாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய ஏழாம் திருமுறை ‘‘திருப்பாட்டு” என்றும், திருஞானசம்பந்தர் அருளிய பாடல்களை ‘‘திருக்கடைக்காப்பு” என்று வழங்கும் மரபும் உண்டு.

? வேற்று கிரகங்களில் உயிர்கள் வாழ்வதை இன்றைய விஞ்ஞானம் ஏற்கிறதா?

- கார்த்திக், தருமபுரி.

விஞ்ஞானம் ஏற்கிறதா என்பதை விட இதுவரைக்கும் அப்படி இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று விஞ்ஞானம் மறுக்கவும் இல்லை. அண்டங்களைக் கடந்து வேற்று கிரகங்களில் உயிர்கள் இருக்குமா என்ற ஆய்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆய்வு முடியாதவரை, அறிவியலால் ஒரு விதமான முடிவையும் சொல்ல முடியாது. ஆனால் மெய்யியல், பல்லாண்டு காலமாக அண்டாதி அண்டங்களைப் பற்றியும், அண்ட உயிர்கள் பற்றியும் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றது .வள்ளலார், ‘‘அண்ட வகை எவ்வளவோ அவ்வளவு அவற்றின் அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவு அவைகள்” (திருவருட்பா 4169) என்று திருவருட்பாவில் பாடியதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

? நாம் ஆன்மிகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா?

- சுவாமிநாதன், வைத்தீஸ்வரன் கோவில்.

நாம் சமயச் சடங்குகளைப் புரிந்து கொண்ட அளவுக்கு (அதுவும் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்பது தெரியவில்லை) ஆன்மிகத்தின் மையக் கருத்தை புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். யாரோ ஒருவருக்கு நீங்கள் உணவு தருகிறீர்கள் அல்லது அன்னதானம் நடத்துகின்றீர்கள். இப்படி மற்றவர்களுக்கு உணவு தருவது, பசுமாட்டுக்கு உணவு தருவது நமக்குப் புண்ணியம் தரும்; அது மேலுலக வாழ்க்கையை தரும்; நம்முடைய வாழ்க்கை வசதியை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள இதைப் போன்ற சின்ன சின்ன புண்ணியச் செயல்கள் உதவும் என்பதன் அடிப்படையில் தான் நாம் பெரும்பாலும் செய்கின்றோம்.

ஆனால் பசியுள்ள ஒருவனுக்கு அந்தப் பசியை தீர்க்க வேண்டும்; புண்ணியம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் போகிறது. அது என்னுடைய கடமை. மனிதாபிமானம். அவன் பசியோடு இருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று நினைத்து நீங்கள் உணவை வழங்கினால், நீங்கள் ஆன்மிக உணர்வோடு இருக்கின்றீர்கள் என்று பொருள்.

தை வெள்ளிக்கிழமை, அம்மன் கோவிலுக்குப் போனால் புண்ணியம் என்று நினைத்துக் கோயிலுக்குப் போவது ஒரு வகை. தை வெள்ளிக்கிழமை, அம்மனுடைய அலங்காரத்தை நாம் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே, அதற்காகவே இந்தப் பிறவி என்று நினைத்துக் கொண்டு போவது ஒரு வகை . அப்படி இறை வனுக்காகவே போவது தான் ஆன்மிகம்.

? திருமுறைகளைக் காட்டியவர் பொல்லாப் பிள்ளையாரா? பொள்ளாப் பிள்ளையாரா?

- புருஷோத்தமன், திசையன்விளை.

பொள்ளாப் பிள்ளையார் என்பதுதான் சரி. பொள்ளா என்றால் உளி கொண்டு செதுக்கப்படாதது என்று பொருள். இந்த விநாயகர் சுயம்பு விநாயகர் என்பதால் ஒரு கருவியால் உருவாக்கப்பட்டவர் அல்ல என்னும் கருத்தில் பொள்ளாப்பிள்ளையார் என்று பெயர் வழங்குகிறது. ஆனால் பொதுமக்கள் இவரை பொல்லாப் பிள்ளை யார் என்று சொல்லி வருகின்றனர். தேவாரத் திருமுறைகளைத் தொகுப்பதற்காக நம்பியாண்டார் நம்பியை நமக்குத் தந்தவர் இந்தப் பிள்ளையார்.

காட்டுமன்னார்குடிக்கு அருகே திருநாரையூர் என்னும் தலத்தில் இவரை நாம் தரிசிக்கலாம். இன்னொரு செய்தியையும் இங்கு சொல்லுகின்றேன். இந்த ஊரில் இருந்து நான்கு அல்லது ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுமன்னார்குடியில் அவதரித்தவர் தான் நாதமுனிகள். தேவாரத்தைக் கண்டெடுத்து நமக்குத் தந்தவர் நம்பியாண்டார் நம்பி என்றால், 4000 பாசுரங்களையும் கண்டெடுத்து நமக்குத் தந்தவர் நாதமுனிகள். இந்த இரண்டு பேருமே அருகருகே உள்ள ஊரிலே அவதரித்தவர்கள் என்பது சிறப்பு.

? சூரிய பகவானை என்றைக்கு வணங்கினால் சிறப்பு?

- விஸ்வநாதன், தூத்துக்குடி.

சூரிய பகவானுக்கு உரிய நாள் ஞாயிற்றுக்கிழமை. சூரிய பகவானுக்கு உரிய திதி சப்தமி. எனவே சப்தமி நாள்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சூரிய உதயத்தின் போது கிழக்கு நோக்கி நின்று அவரை வணங்குவது சிறந்தது. ஆனால் நம்முடைய பெரியவர்கள் இது போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு செய்தாலும், மற்ற எல்லா நாட்களிலும் காலை சூரிய உதய நேரங்களில் சூரிய நமஸ்காரம் செய்வது ஆரோக்கியத்திற்கும், ஆத்ம பலத்திற்கும், கண் களுக்கும் நல்லது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

?வள்ளலார் கொள்கையிலேயே தலைசிறந்த கொள்கை எது?

- சரண்யா குமரன், தாம்பரம்.

ஜீவகாருண்யம். உயிர் இரக்கம். எல்லாச் சமய நூல்களிலும் உள்ள மையக்கருத்தையே இவர் பிரதான கருத்தாக பிரகடனப்படுத்தினார் என்பது வள்ளலாருக்குரிய பெருமை. ‘‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வார்த்தையும், ‘‘அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும்; ஆருயிர்களுக்கு எல்லாம் நாம் அன்பு செயல் வேண்டும்” என்ற அவருடைய வேண்டுதலையும் பாருங்கள்.

ஒரு பூஜையைச் செய்து விட்டு ‘‘எனக்கு இந்த இந்த மாதிரியான வசதிகளை எல்லாம் தர வேண்டும்” என்று வேண்டுபவர்கள் தானே அதிகம். எல்லா உயிர்களுக்கும் நான் அன்பு செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்ற உத்தமரல்லவா வள்ளலார்! எனவே உயிர் இரக்கம் ஆன்மிகத்தின் அடிப்படை.

? வழிபாடு, பூஜை இவற்றின் முக்கியமான பலன் என்ன?

- சர்வேஷ்மித்ரன், சைதாப்பேட்டை.

1. மனச்சுமை குறைதல்

2. மனத் தெளிவு ஏற்படுதல்.

இவை இரண்டும் நமக்கு கிடைத்துவிட்டால் மற்றப் பிரச்னைகளை எல்லாம் நாமே சமாளித்துக் கொள்ளலாம்.

? தெப்ப உற்சவத்தில் தாத்பரியம் என்ன?

- ராஜலட்சுமி, தஞ்சாவூர்.

மிக எளிமையான தத்துவம்தான். தெப்பம் எத்தனை ஆழ மான நீராக இருந்தாலும் உள்ளே போகாமல் மிதக்கிறது. அதனால் அந்தப் பயணம் சுகமாக இருக்கிறது. தண்ணீரில் இருந்தாலும் அந்த தண்ணீரின் ஆபத்துக்கள் சஞ்சலப்படுத்துவதில்லை. செயல்களைத் தடை செய்வதில்லை. இறையருள் என்ற தெப்பத்தின் மீது நீங்கள் பாரத்தைப் போட்டு விட்டு வாழ ஆரம்பித்து விட்டால் வாழ்வின் எந்தச் சிரமங்களும் உங்களை சஞ்சலப்படுத்துவதில்லை.

ஒரு கரையில் இருந்து அடுத்த கரையை மிக எளிதாக தெப்பத்தைப் பிடித்துக் கொண்டு கடந்து விடலாம். அதைப்போல இந்த சம்சாரக் கடலை கடந்து நற்கதியை இறைவனின் திருவடி ஆகிய தெப்பத்தைப் பிடித்துக் கொண்டு அடைந்து விடலாம். இவ்வளவுதான் தெப்பத்தின் தத்துவம். இதைத்தான் ‘‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவன் அடி சேராதார்” என்றார் திருவள்ளுவர்.

? திருமணத்தின்போது மஞ்சள் ஆடைகள் அணிவதன் சிறப்பு என்ன?

- செல்ல துரை, பல்லடம்.

இப்பொழுது மஞ்சள் ஆடைகளை திருமணத்தில் அணிவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. பொது வாகவே மஞ்சள் என்பது மங்கலத்தைக் குறிக்கும் வண்ணம். திருமணத்திற்கு மட்டுமல்ல, வைதீகச் சடங்குகளின் போதும், ஹோமங்கள் செய்யும் போதும், யாத்திரைகள் செய்யும் போதும், மஞ்சள் ஆடைகளை அணியும் வழக்கம் இருக்கிறது. மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, ஆற்றல் மற்றும் நேர்மறையை வெளிப்படுத்தும் ஒரு துடிப்பான, ஒளிரும் நிறமாகும். படைப்பாற்றல், நம்பிக்கை, அறிவு மற்றும் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கிறது. தமிழர் கலாச்சாரத்தில், மஞ்சள் நிறம் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

?குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் பொழுது கண்ணா, சீதா, ராமா, முருகா என்று நெடிலில் முடிவது போல அழைப்பதன் பொருள் என்ன?

- புஷ்பலதா, திருப்பரங்குன்றம்.

முதலில் நெடில் என்பது நீண்ட ஓசையோடு கூடியது. இரண்டு மாத்திரை ஓசை என்று சொல்வார்கள். அதனால் அழைக்கும் போது அழுத்தமான ஓசை நயத்தைத் தருகின்றது. பெயரை அழைக்கும் பொழுது ஓசை நயத்தால் இனிமை கூடுகிறது. கண்ணன் என்று அழைப்பதை விட, கண்ணா என்று அழைத்துப் பாருங்கள், இனிமை வேறுபாடு புரியும். அதனால்தான் இறைவனை வேண்டும் போது ராமா, முருகா, கந்தா, மஹாதேவா, தாயே, அம்மா என்று நெடிலில் நீட்டி அழைத்து ஆறுதல் பெறுகிறார்கள்.

?இறைவனை அடைய இத்தனை வழிகள் தேவையா? ஒரு வழி போதாதா?

- பாலசுப்ரமணியன், சிதம்பரம்.

இத்தனை வழிகள் இருப்பதில் என்ன தவறு? அவரவர்க்கு அவரவர்க்கு ஏற்ற வழி.

? இறைவன் செவிகளில் நம் பிரார்த்தனைகள் விழுமா?

- புஷ்பலதா, திருப்பரங்குன்றம்.

இப்படிச் சந்தேகத்துடன் கேட்டால் எப்படி? உங்கள் பிரார்த்தனை மட்டும் அல்ல, ஒவ்வொரு உயிரின் பிரார்த்தனையும் கேட்கும். அவன் பதிலும் சொல்லுவான்.ஆனால் சில நேரங்களில் நாம் விரும்பியதும் கேட்டதும் கிடைக்காது. நமக்குத் தேவையானது கிடைத்து விடும்.

? இறைவன் நாமங்களைச் சொன்னால் பாவங்கள் போய் விடுமா?

- எஸ்.பாலதேவி, கரூர்.

வேறு யாராவது சொன்னால் சந்தேகப்படலாம். ஆண்டாள் நாச்சியார் சொல்வதை மறுக்க முடியுமா? ‘‘வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு ” என்றல்லவா சொல்கிறாள்.இதை வேறு விதமாக ஒரு ஞானி கூறினார். கைகளைத் தட்டினால் எப்படி மரத்தில் உள்ள பறவைகள் பறந்து விடுகின்றதோ, அப்படி இறைவனுடைய பெயரையும் புகழையும் பாடினால் எல்லாப் பாவங்களும் பறந்துவிடும் என்கிறார். நீங்களும் சொல்லிப் பாருங்கள்.

?நவகிரக தோஷங்களுக்கு நவகிரகங்களுக்கு மட்டும் வழிபாடு நடத்தினால் போதுமா?

- வெங்கடேஸ்வரன், சுவாமிமலை.

நவகிரகங்களை வழிபடுவது தவறில்லை. ஆனால் நவகிரகங்களை மட்டும் வழிபடுவது தவறு. இதைச் சமயப் பெரியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் நவகிரகங்கள் நம்முடைய வினைகளின் பலன்களைத் தருவதற்காக நியமிக்கப்பட்ட இறைவனின் சேவகர்கள். அவர்களால் வினைகளின் பலனை மாற்றித் தர முடியாது. வினைகளின் பலன் முற்றும் தீரவேண்டும் என்று சொன்னால் மூல மூர்த்தியைத் தான் சரணடைய வேண்டும்.

இதைத்தான் கோளறு திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் பாடுகின்றார். நவகிரக தோஷங்கள், தீவினைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கி, நல்லனவற்றை அருளக்கூடிய 11 பாடல்கள் கொண்ட சிறப்புப் பிரார்த்தனைப் பதிகம் இதுவாகும். ‘‘சிவன் தன் உளமே புகுந்ததால்” தீயவை நல்லவையாக மாறும் என்பது இதன் மையப்பொருள். அதனால் நீங்கள் மூலமூர்த்திகளோடு நவகிரகங்களையும் சேர்த்து வணங்குங்கள். நவகிரகங்களை மட்டும் வணங்கிவிட்டு கோயிலில் உள்ள மூல மூர்த்தியை வணங்காது வந்து விடலாகாது.

தேஜஸ்வி