Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பூராடம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு இருபதாவது(20) வரக்கூடிய நட்சத்திரம் பூராடம் நட்சத்திரமாகும். ‘பூராடம் நூலாடாது’ என்ற சொலவடை சொல்வார்கள். அதன் பொருளையும் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். பூராடம் நூலாடாது என்பது இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் முதல் திசாவாக சுக்ர திசா ஆரம்பம் ஆகும். அவ்வாறு சுக்ர திசா ஆரம்பம் ஆகும் பட்சத்தில் கேளிக்கை, விளையாட்டுகளை குழந்தை விரும்பும் அதன் காரணத்தினால் ‘குழந்தை புத்தகத்தை எடுக்காது’ என்ற பொருளில் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனாலும், இதிலும் விதிவிலக்கு உண்டு. குழந்தைக்கு இரண்டாம் (2ம்) பாவகத்தில் சுக்ரன் அமர்ந்து அந்த குழந்தை பூராட நட்சத்திரத்தில் பிறந்தால் ஆரம்ப கல்வி அற்புதமாக இருக்கும். அக்குழந்தை படிப்பை விளையாட்டாகவும் கேளிக்கையாகவும் கற்கும் திறன் பெற்றிருக்கும் என்பது ஜோதிட சூட்சுமம். படிக்காமலே அனைத்து கல்வி கேள்விகளுக்கும் பதில் கூறும் சக்தி உண்டு.

பூராடம் நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் குளம்,பொய்கை, வாவி ஆகியனவாகும்.

பூராட நட்சத்திரத்தின் அடையாளமாக விசிறி, முறம் மற்றும் கட்டில்கால்கள் அடையாளமாகும்.

வாருணி புராணம்

பூராட நட்சத்திரத்தின் அதிதேவதை வாருணியாக வருகிறாள். இவள் வருணனின் மனைவி ஆவாள். இவள் லெட்சுமி தேவியின் அம்சமாக உள்ள யோகினி. வருணனான தனது கணவனின் கட்டளைக்கு மட்டுமே கட்டுப்படும் தேவியாக உள்ளாள்.

லெட்சுமி தேவியின் சகோதரியாகவும் சொல்லப்படுகிறாள். லெட்சுமி தேவிக்கு மூத்தவள் ஒருவள் மூத்ததேவியை எல்லோரும் அறிவர். பின்பு லெட்சுமி அதன்பின்பு வாருணியாக புராணங்கள் விளக்குகின்றன.

வாழ்வின் அத்தனை செல்வச் செழிப்புகளையும் வழங்கும் தேவியாக உள்ளாள். இவள் ஆழ்கடலின் அடிப்பகுதியில் உள்ள வருணலோகத்தில் வாழ்பவளாக உள்ளாள். இவளை வணங்கினாள் லெட்சுமி தேவி ஆசீர்வாதம் செய்கிறாள். ஆழ்கடலின் ஆழத்தில் வாழ்வதால் இவள் ஜலதேவதையாக வருணிக்கப்படுகிறாள். கடல்தாய் என்று வர்ணிக்கப்படுபவளும் இவளே.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும் பொழுது ஏராளமான பொருட்கள் வெளிப்பட்டன.

அச்சமயத்தில் லெட்சுமி தேவியும் அதிலிருந்து வெளிப்பட்டாள் அவளைத் தொடர்ந்து கையில் மதுபானத்துடன் ஒரு தேவதை வெளிப்பட்டாள் அவளே வாருணி தேவியாக உள்ளாள்.

இந்த மதுபானத்தைதான் விஷ்ணு மோகினியாக உருவெடுத்து அசுரர்களுக்கு வழங்குவார். பின்பு, அவர்கள் மயக்க நிலையில் இருக்கும் பொழுது தேவர்களுக்கு அமிர்தத்தை விஷ்ணு வழங்கினார்.

அந்த பிரதோஷ நேரத்தில்தான் மது அருந்தாத அசுரன் ஒருவன் காணவே அவன் தலை துண்டிக்கப்படுகிறது. அவனே பிரதோஷ நேரத்தில் துண்டிக்கப்பட்டதால் இன்றும் ராகு - கேதுவாக உருப்பெற்றான் என வேதப்புராணங்கள் சொல்கின்றன.

இங்கு மதுபானம் என்பது பால், தயிர் மற்றும் தேன் கலந்து செய்யக்கூடியது. இந்த கலவையை நொதிக்கச் செய்து மதுபானமாக அருந்தியுள்ளனர். இப்போது போல் அல்ல. கிருஷ்ணரின் மூத்தவரான பலராமர் இந்த வகையான மதுபானத்தை விரும்பி அருந்தும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். இந்த பானத்தை அருந்தியவுடன் தலைசுற்றலுடன் மயக்க நிலையில் இருப்பார்கள் என வேத புராணம் கூறுகிறது.

வாருணி தேவிக்கு என்று பாகிஸ்தானில் கராச்சியில் ஒரு கோயில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது போன்ற வாருணி என்ற யோகினிக்கு உள்ள தனிக்கோயில் வேறெங்கும் இல்லை.

பொதுப்பலன்கள்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளிப்படையாக பழகும் பண்புள்ளம் கொண்டவர்கள்.கேளிக்கைகளை விரும்பும் வேட்கை கொண்டவர்களாக இருப்பர். உங்களை எளிதில் ஏமாற்றி விடுவர். ஏமாற்றம் அடைந்த பிறகு எல்லோரையும் சந்தேகிக்கும் குணத்திற்கு மாறும் இயல்புடையவர்கள். வெள்ளிக் கிழமை தோறும் மாரியம்மனை தரிசனம் செய்யுங்கள் உங்கள் வாழ்வு மேம்படும்.

ஆரோக்கியம்

பூராடம் நட்சத்திரக் காரர்களுக்கு உடலில் உள்ள சூட்சும ஹார்மோன்கள் அடிக்கடி பாதிப்புகளை உண்டாக்கும். உடலில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் சுரபிகளில் குறைபாடு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதாவது, கணையத்தில் குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்புகளும் உண்டு.

பூராடத்திற்குரிய வேதை நட்சத்திரம்...

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். பூசம் என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திர நாளில் புதிய காரியங்களை தொடங்குவது வேண்டாம்.

பரிகாரம்

இந்த நட்சத்திரமானது வியாழன் வீட்டில் அமர்ந்துள்ளதால் மஹாலெட்சுமி திருக்கோயில் வழிபாடு வெள்ளிக்கிழமை தோறும் செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.

அத்தி / வஞ்சி மர விருட்சம் சுக்ரனின் அம்சமாக உள்ளதால் வெள்ளிக்கிழமை முறையாக காப்புகட்டி அத்தி மரக்கன்றை நீர்நிலைக்கு அருகில் உள்ள கோயிலில் நாற்று நட்டால் மிகவும் உங்கள் தோஷங்கள் மற்றும் தடைப்பட்ட பணவரவுகள் திரும்ப வரும்.

பூராட நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் கல்வி வேண்டி அத்தி / வஞ்சி மர விருட்சத்தை நட்டால் கல்வியில் நன்கு தேர்ச்சி பெறுவர்.