Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

தொழில் மேன்மை ஏற்படும் தலங்கள்

சில தலங்களுக்குச் சென்று வந்தால் நம்முடைய வாழ்வாதாரம் வளம் பெறும். கடன்கள் குறையும். வறுமை ஒழியும். ஒருவருக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என்று சொல்லப்படும் ஆறாவது இடம் வலிமை இழந்து இருந்தாலும், ஜீவன ஸ்தானம் எனப்படும் தொழில் ஸ்தானம் வலிமை இழந்து இருந்தாலும், ஜீவன காரகனாகிய சனி வலிமை இழந்திருந்தாலும், அவர்களுக்குச் சரியாக தொழில் அமையாது. அமைந்தாலும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்காது. வெற்றி கிடைத்தாலும் பணம் கைக்குச் சேராது. எவ்வளவு சம்பாதித்தாலும் சிலருக்கு சேமிப்பு இருப்பது. கையில் கையிருப்பு இருக்காது. தொழில் வளம் பெருகவும் மேலும் மேலும் பல தொழில்களில் முன் னேறவும் சில அருமையான தலங்கள் உண்டு. அந்தத் தலங்கள் சிலவற்றைக் காண்போம்.

சாக்கோட்டை

கும்பகோணம் மன்னார்குடி போகும் பாதையில் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு தலம். இங்குள்ள ஈசனுக்கு அமிர்தகலச நாதர் என்று பெயர். அம்பாளுக்கு அமிர்தவல்லி என்று பெயர். பிரம்மா இந்த உலகத்தை படைத்தார். பிரளய காலம் வருவதற்கு முன் வேதங்கள் பிரம்மா வித்துக்களை ஒரு கலசத்தில் வைத்து பூஜை செய்து வந்தார். பிரளயம் வந்தது. மிகப்பெரிய ஊழி வெள்ளத்தில் கலசம் அடித்துச் செல்லப்பட்டது. சிவபெருமான் ஒரு வேடனாக வந்தார். கிராதமூர்த்தி என்கிற பெயரில் வந்தவர் அம்பெய்து இந்தச் கலசத்தை உடைத்தார். அதன் நடு பாகம் சாக்கோட்டை என்று அழைக்கப்படும் இந்த ஊரில் விழுந்தது.அதற்குப் பிறகு பிரம்மதேவர் இந்த வித்துக்களை வைத்துக்கொண்டு படைப்புத் தொழிலை மறுபடி ஆரம்பித்தார் சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலம் இது. ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்குத் தங்கியதால் திருக்கலயநல்லூர் என்று பெயர். தீர்த்தம் அமிர்த தீர்த்தம். சுந்தரர், சேக்கிழார் பாடிய தலம். ஞானசம்பந்தர் தம் பதிகத்தில் இப்பகுதியில் சாக்கியர் (பௌத்தர்) வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளதால் ‘சாக்கியர் கோட்டை’ என்று பெயர் வழங்கி அதுவே பின்பு சாக்கோட்டையாக மாறி வழங்கிற்று என்பர். மக்கள் இக்கோயிலை ‘‘கோட்டைச் சிவன்கோயில்’’ என்று சொல்கின்றனர்.

``குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு

குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து

விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த

விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில்

அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட

அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்

கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்

கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே. என்பது தேவாரம்’’

இத்தலத்தில் உள்ள சப்தமாதர் சிற்பங்கள் ஒரே கல்லில் புடைச் சிற்பமாகவுள்ளன; தரிசிக்கத்தக்கது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி - புதிய திருமேனி அதிசயமான அமைப்புடையது. இத்திருமேனி வலது மேற் கையில் ருத்ராட்ச மாலையும், இடது மேற்கையில் அக்கினியும், வலக் கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாகி விளங்குகின்றது.

நடை திறப்பு: காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை.வேலை உத்தியோகம் முதலியவை சிறப்பு பெறவும், வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கவும், வியாபாரத்தில் லாபம் பெருகவும் இந்த ஈசனை வணங்கலாம்.இங்கு ஆயுஷ் ஹோமம் முதலியவற்றைசெய்கிறார்கள். அம்பாளுக்குத் தனிச் சந்நதி உண்டு. திருமணத் தடைக்கு 5 பௌர்ணமிகளில் 54 தீபங்கள் ஏற்ற வேண்டும். அதைப் போலவே வெள்ளிக்கிழமை ஐந்து தீபம் ஏற்றுவதன் மூலமாக கிரக தோஷங்கள் விலகும். இந்த கோயிலில் லிங் கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, முருகன் எழுந்தருளியிருக்கிறார். சிவராத்திரி மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசியில் அன்னாபிஷேகம் மிக அற்புதமாக நடக்கும்.

வட தில்லை பாப ஹரேஸ்வரர்

ராமானுஜரின் தம்பி கோவிந்தா பட்டர் காசியில் நீராடும் போது அவர் கையில் ஒரு சிறிய பாண லிங்கம் கிடைத்தது. அதைச் சிறிது காலம் பூஜித்தார். மறுபடியும் வைணவ சமயத்திற்கு திரும்பினார். அப்பொழுது அவர் பூஜித்த இந்த சிறிய லிங்கதோடு ஒரு பெரிய லிங்கமும் சேர்ந்து இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்தார்கள்.1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையை சுமந்த அந்தக் கோயில்தான் சென்னை-ஊத்துக்கோட்டை மார்கத்தில் வடதில்லை கிராமத்தில் அமைந்த பாபஹரேஸ்வரர் ஆலயம். பாவங்கள் நீக்குதல் என்று அர்த்தம். இந்தத் திருக்கோயிலுக்கு வந்தால் பாவங்கள் நீங்கி புண்ணிய பலனை பெறலாம். அம்பாளுக்கு மரகதவல்லி என்று திருநாமம். விநாயகர் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா துர்க்கை முருகன் மகாவிஷ்ணு முதலியவர்கள் எல்லாம் தனித்தனி சந்நதிகளில் காட்சி தரும். இந்த கோயில் கிராமத்தின் உட்புறமாக அமைந்திருக்கிறது வில்வ மரம் தல மரமாக கொண்ட இந்த கோயிலில் அஷ்டபுஜ பைரவர் அற்புதமாக எட்டு திருக்கரங்களுடன் காட்சி தருவார்.

கோனேரிக்குப்பம்

காஞ்சிபுரத்தைச் சுற்றி எத்தனையோ கோயில்கள் உண்டு. அதில் கோனேரிக்குப்பம் என்கிற இடத்தில் உள்ள சிவன் கோயில் விசேஷமானது. இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோனேரிக்குப்பம் என்னு மிடத்தில் அப்பாராவ் தெருவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் சாக்கிய நாயனார் வழிபட்ட தாகச் சொல்கிறார்கள். இக்கோயிலின் மூலவராக வீரட்டானேசுவரர் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளார். அவருக்கு எதிரில் சாக்கிய நாயனார் கையில் கல்லுடன் காணப்படுகிறார். லிங்கத்திருமேனி மீது கல்லை எறிந்த அடையாளமாக பாணத்தில் புள்ளி காணப்படுகிறது. அருகில் விநாயகர் உள்ளார்.கொங்கணர் என்ற சித்தர் இறைவனை பரிசோதிக்க நினைத்தார். அவரிடம் ஒரு குளிகை இருந்ததாகவும் அதனை எதன் மீது வைத்தாலும் அது தண்ணீராக மாறிவிடும் தன்மையைக் கொண்டிருந்தது. இக்கோயிலுக்கு வந்து அக்குளிகையை பாணத்தின்மீது வைக்கவே, குளிகையை லிங்கத்திருமேனி உள்ளே இழுத்துக்கொண்டது. சக்தி யறிந்த அவர் இறைவனை வழிபட்டு பல சித்திகளைப் பெற்றார். சிவனுடைய அடியார்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்து திருத்தொண்டர் புராணம் என்று அளித்தார் சேக்கிழார் பெருமான். அதில் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வரலாறு சொல்லப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒவ்வொருவிதமான சிறப்பு உண்டு. சாக்கியநாயனார் தன்னை மறந்த நிலையில் சிவனை வழிபட்டவர். கற்களைக் கொண்டு கற்றளி சமைத்து பல திருப்பணிகளைச் செய்தவர்கள் உண்டு.சொற்களைக் கொண்டு பல கவிதைகளைச் சமைத்து திருப்பணிகளைச் செய்த மகான்களும் உண்டு.ஆனால் கற்களை வீசி பூஜை செய்த ஒரு பத்தரை நீங்கள் பார்க்க வேண்டும் என்று சொன்னால் அவர் தான் சாக்கிய நாயனார்.இனி இவர் வரலாறு சுருக்கமாகப் பார்ப்போம்.இவர் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். சமய உண்மைகளை அறிய காஞ்சி நகரத்தை அடைந்து புத்தசமயத்தை மேற் கொண்டிருந்தார். ஆயினும் அதில் மன நிறைவு இல்லை.சிவபெருமான் திருவருள் கை கூட சிவநன்நெறியே பொருள் எனும் நல்லுணர்வு கை வரப்பெற்றார்.இறைவனுக்குத் திருமேனியாகிய சிவலிங்கத்தின் பெருமையுணர்ந்து நாள்தோறும் இறைவனை வழிபட்ட பின்னரே உண்ணுதல் வேண்டும் என உறுதி கொண்டார்.இதனால், பௌத்தத் துறவிக் கோலத்தை (சாக்கியர் கோலம்) மாற்றாமல் ஒரு பொட்டலில் இருந்த சிவலிங்கத்தைச் சிறு கல்லால் எறிந்து அக்கல்லை மலர்போலப் பாவித்துப் பூசை செய்து வந்தார். சிவலிங்க பூசை செய்த பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சாக்கியரின் உறுதி ஆகும்.இவ்வாறு நாள்தோறும், (பௌத்தர்கள் அறியாதவாறு) சிறு கல்லை, மலர் போலப் பாவித்து சிவலிங்க வழிபாடு செய்த சாக்கியரின் செயலைக்கண்ட பௌத்தர்கள் சிவலிங்கத்தைப் பௌத்தத் துறவி கல்லால் எறிகிறார் என்று எண்ணி மகிழ்ந்தனர். இந்நிகழ்வினைக் கீழ்க்காணும் பெரியபுராணப் பாடலில் காணலாம்,

``எந் நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்

மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள் என்றே

துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவந்

தன்னைமிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்...!”

- பெரியபுராணம்

(சாக்கிய நாயனார்) 3641.

சாக்கியர் செய்த இச்செயல் சிவபெருமானுக்கு உவப்பாயிற்று. அவர் அன்பினால் எறிந்த கற்களை நறுமலர்களாகவே ஏற்றுக்கொண்டார். மறுநாள் அங்கு வந்தபொழுது முதல்நாள் தாம் சிவலிங்கத் திருமேனியின் மேல் செங்கல் எறிந்த குறிப்பினை எண்ணி, ‘நேற்று இந்த எண்ணம் நிகழ்ந்தது இறைவன் திருவருளே’ என்று துணிந்து அதனையே தாம் செய்யும் வழிபாடாகக் கருதி எப்பொழுதும் அப்படியே செய்து வந்தார்.ஒருநாள் சாக்கியர் அச்செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம் பெருமானைக் கல்லால் அர்ச்சனை செய்ய மறந்து விட்டேனே என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஆராத காதலால் கண்ணீர் வழிய ஒரு கல்லை எடுத்து எறிந்தார். சிவபெருமான் விடைமீது உமையம்மையாருடன் தோன்றி அருளினார். அத்தெய்வக் காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். சாக்கிய நாயனாரைப் பற்றி, சுந்தரர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

``வார் கொண்ட வனமுலையாள் ஒரு உமைபங்கன் சூழலே

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்’’

சுந்தரர் திருத்தொண்டத்தொகை - 398

பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன இந்தக் கோயிலில் சென்று இங்குள்ள ஈசனை வழிபட்டால் மன தடைகள் விலகி செயல் வேகம் பிறக்கும். சிந்தனை சிறக்கும். வியாபாரம் தொழில் முதலியவற்றைச் செய்வதில் ஆர்வம் ஏற்படும். தொழில் மற்றும் ஜீவன ஸ்தான தடைகளை இவர் விலக்குவார்.

பழனி மலை முருகன்

பொதுவாக பழநியை ஆண்டிக்கோல முருகன் என்று சொல்லுவார்கள். ஞானத்தைத் தருகின்ற பெருவள்ளல் அவன். அது மட்டுமல்ல வேண்டியவருக்கு வேண்டிய செல்வங்களையும் வரங்களாகத் தரும் அவர் வியாபார தொழில் விருத்தியையும் தரக்கூடியவர். அதனால்தான் எத்தனையோ தொழில் அதிபர்கள் நேர்த்திக்கடன் செய்து கொண்டு பழனி மலை முருகனை வணங்கி தங்கள் வியாபார தொழில் வளர்ச்சியை ஓஹோ என்று வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தொழில் வளர்ச்சி, மேன்மை, பதவி உயர்வு, இவற்றையெல்லாம் பெற வேண்டும் என்று சொன்னால் மாலை நேரத்தில் பழனி மலையில் ராஜா அலங்கார வேஷத்தில் இருக்கக்கூடிய முருகனை மனமுருகி வழிபட வேண்டும்.அதன்பிறகு அவர் வாழ்க்கையில் அடுத்தடுத்த மாற்றங்கள் ஏற்படுவது கண்கூடு.அருணகிரிநாதர் ‘‘ஜபமாலை தந்த சத்குரு நாதா’’ என்று இவரை சத்குருவாக ஏற்றுக் கொண்டு வழிபட்ட தலம்.போகர் வழிபட்ட தலம் என்பதால் ஒருமுறை வந்து பழனி முருகனைத் தரிசித்தால் சகல சம்பத்துக்களும் கிடைக்கும்.

திருமலை

உலகத்தில் இந்து சமயத்தில் பணக்கார கோயிலாக விளங்குவது திரு மலை என்று எல்லோருமே சொல்லுவார்கள். தினசரி பல கோடி ரூபாய் உண்டியல் வருமானம் வருகின்ற கோயில். நவகிரக தோஷத்தையும் நீக்க வல்லது. திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேர்ந்துவிடும். இதை ஒரு பாசுரத்தின் மூலமாகவும் நாம் தெரிந்து கொள்ளலாம். திருப்பதியில் வாழுகின்ற இறைவன் ஒரு காலத்தில் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து அவனை நம்பிய பக்தர்களை மழையிலிருந்து காத்தவன்.நம்மை ரட்சிப்பதற்காகவே வந்து மலையில் நின்றவன். ஆகையினால் அவனை வணங்கினால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் அவன் இருக்கக்கூடிய மலையை வழங்கினாலும் கூட கிடைத்து விடும் என்பார்கள். வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே என்பது பாசுரம். அதனால் தான் அந்த மலையின் மீது ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தும், வாகனங்களில் சென்றும் அவனை வணங்குகிறார்கள்.அங்கே ஐஸ்வரிய லட்சுமி (மகாலட்சுமி) பிரதானமாக அவனுடைய திருமார்பில் வசிப்பதால், திருமலை எம்பெருமானை வணங்குபவர்களுக்கு லட்சுமி கடாட்சம் தவறாமல் கிடைக்கிறது. அதை நாம் கண்கூடாகவே பார்க்கலாம். ஐஸ்வரியம் மிகவும் செழிப்பாக இருக்கக் கூடிய கோயில் தரிசனம் நம் வாழ்வை உயர்த்தும்.தொழில் மேன்மை காக்கவும், புதிய வேலைக்காகவும், ஒரு குறிப்பிட்ட திட்டம் வெற்றி அடையவும், திருமலை வாசனை ஒரு முறை சென்று தரிசித்து வாருங்கள்.

திருவரங்கம்

பூலோக வைகுந்தம் என்று சொல்லப்படும் திருவரங்கம் சுக்கிரன், சந்திரன் சம்பந்தப்பட்ட தலமாகவும் விளங்குகிறது. சந்திரபுஷ்கரணி இருப்பதால் சந்திர தோஷம் நீங்கி மன பலம் அதிகரிக்கும். இந்தப் பெருமானை தரிசித்தால் வணிகத் தடைகள் விலகும். இங்கு சென்று தாயாரையும், சக்கரத்தாழ்வாரையும், ராமாநுஜரையும் தரிசிக்க வேண்டும். ரங்கநாதரை தரிசித்து ஒரு தொழிலை ஆரம்பித்தால், அல்லது ஒரு வேலையில் சேர்ந்தால் அது படிப்படியாக மேலே மேலே

முன்னேற்றத்தைத் தரும்.

திருக்கொள்ளிக்காடு

திருவாரூர் -திருத்துறைப்பூண்டி மார்க்கத்திலே திருவாரூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருமையான சிவத்தலம் திருக் கொள்ளிக்காடு. திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 115ஆவது சிவத்தலமாகும். இங்கு உள்ள ஈஸ்வரனுக்கு அக்னீஸ்வரர் என்று பெயர். அம்மனுக்கு “மென்திருவடியம்மன்” என்ற திருநாமம்.சூரியனுடைய உஷ்ணத்தைக் குறைத்து அவருக்கு சந்தான விருத்தியைத் தந்தவர். சூரியனுக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவிக்கு உஷாதேவி என்று பெயர். இன்னொரு மனைவிக்கு சாயாதேவி என்று பெயர். சூரியன் உஷ்ண கிரகம் அல்லவா. அவரை யாரும் நெருங்க முடிய வில்லை. சூரியனை அணுகுவதற்கு அவர்களுடைய மனைவிகளான உஷா தேவியும் சாயா தேவியும் அஞ்சினர். சூரியன் இங்குள்ள ஈஸ்வரனை தவம் செய்து வணங்கினார். அவருடைய தவத்தை மெச்சிய இறைவன் அவருக்கு அருளாசி வழங்கினார். இதன் மூலமாக அவருடைய இல்லறம் சிறந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தன. சூரியனுக்கும் உஷா தேவிக்கும் பிறந்த குழந்தை கால தேவனாகிய எமதர்மன். சூரியனுக்கும் சாயா தேவிக்கும் பிறந்த குழந்தை கிரகங்களில் தொழில் ஜீவன ஸ்தானத்திற்கு உரிமை படைத்த சனிபகவான்.குறிப்பாக ஜாதகத்தில் “பொங்கு சனி திசை” நடப்பவர்கள் இங்கு வழிபடுவதால் இக்காலகட்டத்தில் சனி பகவானால் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும். மற்ற எல்லா கோவில்களிலும் நவகிரகங்க விக்கிரகங்கள் ஒருவரை ஒருவர் நேரடியாக பார்க்காதவாறு இருக்கும். ஆனால் இக்கோவிலில் “ப” வடிவில் ஒன்பது கிரகங்களும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருக்கின்றனர்.நள மஹாராஜா இழந்த பதவி, குடும்பம், நாடு ஆகியவற்றை இக்கோவிலில் உள்ள இறைவனை வழிபட்ட பிறகு பெற்றார் என்று கூறப்படுகிறது.வார நாட்களில் காலை 7.30 முதல் மதியம் 12.30 வரையும் மாலை 4.30 முதல் இரவு 7.30 வரையும் நடை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் முழு தினமும் கோவில் நடை திறந்திருக்கும்.எனவே தொழில், ஜீவனம் சிறக்க வேண்டும் என்று சொன்னால், சனி பகவான் பிறப்பதற்குக் காரணமான இந்த தலத்து ஈஸ்வரனை ஒரு முறை வந்து தரிசிக்க வேண்டும். அதன் மூலமாக சனியால் தரப்படும் பலன்கள் சிறக்கும். பொங்கும். அதனால் இங்குள்ள சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். ஈஸ்வரனையும் தரிசித்துவிட்டு சனி பகவானையும் தரிசித்து வந்தால் தொழில் மேன்மை ஏற்படும்.