Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பத்ம புராணம் காட்டும் தத்துவம்

பகுதி -3

பத்ம புராணத்தில் சொல்லப்பட்ட பல கதைகள் மறைமுகமாக மனித குலத்தின் நல்வாழ்க்கைக்குரிய கருத்துக் களைச் சொல்வதாகவே அமைந்திருக்கின்றன. ஆனால், வெறும் கதைப் போக்கை மட்டும் வைத்துக்கொண்டு ``இப்படியும் கதை நடக்குமா’’ என்று நினைக்கக் கூடாது. அதில் உள்ள மையக் கருத்துக்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக பெற்றோர்களை பிள்ளை கவனிப்பதும் அவர்களுக்கு வேண்டிய உபச்சாரங்களைச் செய்வதும் கோடி வருடம் தவம் செய்வதை விட பெருமை தரத்தக்க விஷயம் என்பதை ஒரு கதை எடுத்துக்காட்டுகிறது.

3000 வருட தவத்தை விடச் சிறந்தது பெற்றோர்களைக் கவனிப்பது காசிபன் மகன் பிப்பலன். உலகத்தில் எல்லோரையும் விட தான் மிகச் சிறந்த அறிவாற்றலையும் திறமையும் பெறவேண்டும் என்று உண்ணாமல் உறங் காமல் பல்லாண்டுகள் ஒரே நோக்கத்தோடு அவன் காட்டில் தவம் செய்தான்.தன்னைச் சுற்றி விஷ ஜந்துக்கள் படர்வதைப் பற்றியோ, கொடிய விலங்குகள் அலைவதைப் பற்றியோ கவலைப்படவில்லை.காற்று, தீ, மழை என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடும் தவம் செய் தான்.அவனைச் சுற்றி கரையான் புற்றுகட்டியது. இப்படி ஓராண்டு ஈராண்டுகள் அல்ல, மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான்.

எதற்கும் ஒரு முடிவு வரும் அல்லவா.அவன் தவம் நிறைவேறும் நாள் வந்தது.‘‘என்ன வரம் வேண்டும்?” என்று தேவர்கள் கேட்டனர். அப்பொழுது அவன் சொன்னான் ‘‘இந்த உலகத்திலே மிகச்சிறந்த அறிவை நான் பெறவேண்டும். அனைவரையும் அடக்கி ஆளும் ஆற்றலைப் பெற வேண்டும்” ‘‘அப்படியே ஆகட்டும்” என்று தேவர்களும் வரம் கொடுத்து மறைந்தனர்.தான் நினைத்ததை அடைந்து விட்டோம் என்று அவனுக்கு ஏக மகிழ்ச்சி.அந்த சந்தோஷத்தோடு அவன் ஒரு குளக் கரையை அடைந்தான்.அப்பொழுது அந்த குளக்கரையில் ஓர் அழகிய கொக்கு நீந்திக் கொண்டிருந்தது.

பற்பல ஆற்றல்களைப் பெற்றிருந்ததால் அவன் கொக்கைப் பார்த்து விசாரித்துவிட்டு, யாரிடமாவது தன்னுடைய பெருமையைச் சொல்ல வேண்டும் என்று எண்ணினான். தான் தவம் செய்ததையும் தேவர்களிட மிருந்து பல்வேறு ஆற்றல்களைப் பெற்றதையும் கொக்கிடம் சொன்னான். கொக்கு பேசியது. ‘‘பிப்பலா, எதற்காக உனக்கு இந்த ஆணவம்? 3000 ஆண்டுகள் தவம் செய்து அப்படி என்ன பெரிய வரத்தைப் பெற்று விட்டாய்? உன்னுடைய வரம் அத்தனை பெருமையுடையதா? அதற்கு நீ 3000 வருடங்கள் தவம் செய்ய வேண்டுமா? அதை எல்லாம் செய்யாமலே உன்னை விட பெரிய ஆற்றலைப் பெற்றவன் இருக்கிறானே” இவனுக்கு வியப்பாகப் போய் விட்டது.

கஷ்டப்பட்டு நான் தவம் செய்து பெற்றதை விட ஒருவன் எளிதாக என்ன பெற்றுவிட முடியும் என்று கேட்க, ‘‘அதை நான் சொல்லக்கூடாது. அவன் பெற்ற தவத்தையும் வலிமையையும் பெருமையையும் பார்க்கும் பொழுது நீ சர்வசாதாரணமானவன் என்பதை உணர்வாய்” என்றது கொக்கு.பிப்பலாவிற்கு தான் பேசுவது சாதாரண கொக்கிடமா, அல்லது வேறு யாராவது தேவர்களா என்ற சந்தேகம் வந்தது.‘‘இவ்வளவு விரிவாகப் பேசும் நீ யார் சொல்?” என்றான் உடனே கொக்கு சிரித்தது.

‘‘பார்த்தாயா, உன்னுடைய ஆற்றல் இவ்வளவுதான். 3000 ஆண்டுகள் தவம் செய்து ஒரு கொக்கிடம் பேசும் பொழுது கொக்கு யார் என்றே தெரிய வில்லை சரி. உன்னைப்போல் தவம் செய்யாமல் உன்னை விட சிறந்த ஆற்றலைப் பெற்ற சுகர்மா என்று ஒருவன் இருக்கிறான். அவனைப் போய்ப் பார். நீ எவ்வளவு சாதாரணமானவன் என்பது விளங்கும் அதோடு நான் யார் என்று அந்த சுகர்மாவிடம் கேள் சொல்லுவான்” என்று சொல்லி சுகர்மாவை எங்கே பார்க்கலாம் என்கிற விபரத்தையும் கொக்கு கூறி விட்டுச் சென்றது.

ஒரு நொடி கூட பிப்பலாவால் அந்த இடத்தில் அமர முடியவில்லை பரபரப்போடு கிளம்பி சுகர்மாவைத் தேடினான். சுகர்மா ஒரு குடிசையில் தன்னுடைய பெற்றோர்களுக்கு உபசாரம் செய்து கொண்டிருந்தான். பெற்றோர்கள் கேட்பதை மிகவும் பொறுமையோடு கொடுத்துக் கொண்டிருந்தான். அன்போடு உரையாடிக் கொண்டிருந்தான் பிப்பலா அழைத்தது கூட அவன் காதில் விழவில்லை. வெளியே வந்தவன் பிப்பலாவை பார்த்துவிட்டு, ‘‘நான் என்னுடைய பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கிறேன். சற்று நேரம் அப்படியே அமர்ந்திரு நான் இவர்களைத் தூங்க வைத்து விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டான்.

சற்று நேரம் கழித்து வெளியே வந்தான்.‘‘பிப்பலா தானே உன் பெயர்? உன்னை யார் அனுப்பியது என்று சொல்லவா? கொக்கு என்னுடைய இருப்பிடத்தைச் சொல்லி உன்னை இங்கே அனுப்பி இருக்கிறது. சரிதானே. அந்த கொக்கு யார் தெரியுமா?” என்று கேட்டவுடன், உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் அறிகின்ற ஆற்றலை பெற்றதாகக் கருதிய பிப்பலா அதிர்ந்து போனான்.‘‘அதையும் உன்னிடம் தான் அந்தக் கொக்கு கேட்கச் சொன்னது. சொல் அந்தக் கொக்கு யார்?''

‘‘பிரம்மாதான் அந்த கொக்கு. நீ என்னுடைய சக்தியை அறிந்து கொள்ள விரும்புகிறாய் அல்லவா இதோ பார் இப்பொழுது நான் அழைத்தால் அத்தனை தேவதைகளும் இங்கு வருவார்கள்” என்று சொல்லி ஒவ்வொரு தேவதையாகப் பெயர் சொல்லி அழைக்க அடுத்த நிமிடம் அந்த தேவர்கள் அவன் முன்னால் வந்து நின்றார்கள்.இப்பொழுது பிப்பலாவிற்கு சந்தேகம் வந்துவிட்டது .3000 ஆண்டுகள் தவம் செய்து நான் அடைந்த வலிமையை விட உன்னுடைய வலிமை பெரிதாக இருக்கிறது என்று சொன்னால், நீ என்னை விட பல ஆண்டுகள் அதிகம் தவம் செய்திருக்க வேண்டும்? என்ன செய்து இத்தகைய பலத்தைப் பெற்றாய்” என்று சொன்னவுடன் சுகர்மன் சிரித்தான்.

‘‘நான் உன்னைப் போல் 3000 ஆண்டுகள் தவம் செய்யவில்லை; வேதங் களைக் கரைத்துக் குடிக்கவில்லை. பெரிய பூஜைகளை செய்யவில்லை. நான் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என்னுடைய பெற்றோர்கள் மனம் கொடாதபடி நான் பணிவிடை செய்கின்றேன் அவர்கள் மகிழ்ச்சியை என்னுடைய மகிழ்ச்சியாக கருதுகிறேன் அதனால் நான் அழைத்தால் அத்தனை தேவர்களும் வருகிறார்கள். பெற்றோர்கள் மனம் மகிழும்படி நடக்கும் பிள்ளைகளுக்கு தேவர்கள் வரம் தருகிறார்கள் என்பதுதான் உண்மை. உனக்கு புரிவதற்காக நான் இன்னொரு கதையைச் சொல்லுகிறேன்.

யயாதி கதை

யயாதி என்று ஒரு மன்னன் இருந்தான். நகுஷனின் ஆறு பிள்ளைகளில் ஒருவன். கடுமையான தவம் செய்து உலகம் முழுவதையும் ஆண்டான். அவனுக்குச் சில பிள்ளைகள்.தன்னுடைய முதுமைக் காலத்தில் அவனுக்கு திருமண ஆசை வந்தது. ரதியின் மகளான அஷ்ருவித்துமதியை மணந்து கொள்ள எண்ணினான். அதற்கு தன்னுடைய முதுமை தடையாக இருப்பதாக நினைத்து தன்னுடைய மகன்கள் ஒவ்வொருவரிடமும் சிறிது காலம்” உங்களுடைய இளமையை எனக்குத் தந்துவிட்டு என்னுடைய முதுமையை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கேட்டான்.

அவனுடைய புத்திரர்கள் ஒருவனைத் தவிர யாருமே அவன் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.‘‘உனக்கு இன்னும் இளமை கேட்கிறதா? முதுமையான காலத்தில் நீ மோட்சம் அடையும் வழியை விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறாயே.. அதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா?\” என்று யயாதி மனம் புண்படும்படியாகப் பேச, அவர்களை எல்லாம் யயாதி சபித்து விட்டு தன்னுடைய கடைசிப் பிள்ளையாகிய புரு என்கிற பிள்ளைடம் கேட்டான் .

‘‘அப்பா! ஏதாவது ஒரு வகையில் உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும் படியாக நான் நடந்து கொள்ள முடியும் என்று சொன்னால் என்னுடைய இளமையை உங்களுக்குத் தருவதற்கு நான் சித்தமாக இருக்கின்றேன். பெற்றுக் கொள்ளுங்கள்” என்று தன்னுடைய இளமையைத் தந்தான்..அவனிடமிருந்து இளமையைப் பெற்றுக் கொண்ட யயாதி கொஞ்ச காலம் கழித்து அந்த இளமையைத் திரும்ப அவனிடமே தந்து விட்டு முதுமையைப் பெற்றுக் கொண்டான்..தந்தையின் ஆசிர்வாதத்தால் அவன் மிகச் சிறந்தவனாக ஆனான். அவருடைய பரம்பரையில் வந்தவன் தான் பரதன். இந்த பரத கண்டத்திற்குப் பெயர் தந்தவன். பரதனின் பரம்பரையில் வந்த குரு என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர்கள் தான் மகாபாரத மாந்தர்கள். குரு ஆட்சி செய்த இடம் குருசேத்திரம்.

யயாதி மன்னனின் மகனாகிய துர்வாசுவின் பரம்பரையில் வந்தவர்கள் பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள்.யயாதி மன்னனின் மற்றொரு மகனாகிய துருயாவின் பரம்பரையில் வந்தவர்கள் காந்தார மன்னனாகிய சகுனி முதலியவர்கள். யயாதியின் பேரனாகிய சகஸ்ரதனின் வழியில் வந்தவனே கார்த்த வீரிய அர்ஜுனன் யயாதியின் மற்றொரு பேரனாகிய குரோஷ்குவின் வம்சத்தில் வந்தவன் தான் கிருஷ்ணன். எனவே பெற்றோர்களை மதித்தவன் பெருமை உடையவனாக ஆகிறான். நீ பெரிய அளவில் தவம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று சுகர்மன் சொல்லி அனுப்பினான். சுகர்மன் என்றால் நல்ல புண்ணிய கார்யங்களைச் செய்பவன் என்று பொருள்.

இதில் சொல்லப்பட்ட யயாதி கதை மகாபாரதம் உட்பட இதிகாசங்களிலும், பிரம்மபுராணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கதையின் அமைப்பில் சிற்றில வித்தியாசங்கள் இருக்கின்றன. பிரம்ம புராணத்தில் உலகை சுற்றிப் பார்ப்பதற்காக இளமையைப் பெறவேண்டும் என்று யயாதி நினைத்ததாக வருகிறது.

நரபலியை தடுத்த விஸ்வாமித்திரர்

அந்தக் காலத்தில் யாகங்களில் நரபலி செய்வது போன்ற கொடிய விஷயங்களை சில கதைகள் கூறும். ஆனால் நரபலி செய்வது எத்தனை மோசமானது என்பதை விளக்கும் ஒரு கதை பத்ம புராணத்தில் உண்டு.துவாபர யுகத்தில் தீனநாதன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான்.அவனுக்கு எல்லாச் செல்வங்களும் இருந்தன. ஆனால் வாரிசு இல்லை. இதனால் மனம் வருந்தினான்.அப்போது காலவ முனிவர் என்று ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார்.

அவருக்கு சகல உபசாரங்களையும் மன்னன் செய்தான். தனக்கு வாரிசு இல்லாத குறையைச் சொல்லி, குழந்தை கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முனிவரிடம் கேட்க, அந்த முனிவர் அங்கம் குறையில்லாத ஒரு குழந்தையை பலி இட்டு யாகம் செய்தால் உனக்குக் குழந்தை செல்வம் கிடைக்கும் என்று சொன்னவுடன், தன்னுடைய பணியாளர்களை அனுப்பி அப்படி ஒரு பிள்ளையை அழைத்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தான். அப்புறம் என்ன நடந்தது ?

அடுத்த இதழில்...

முனைவர் ஸ்ரீராம்