Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாயாகி வந்து கருணை கூட்டும் நாயகி

118-பக்தி ப்ரியா

119-பக்திகம்யா

120-பக்திவச்யா

121-பயாபஹா

122-ஸாம்பவீ

123-சாரதாராத்யா

124-சர்வாணீ

125-சர்மதாயிநீ

இதற்கு முன்பு நாம் ஒவ்வொரு நாமாவாகப் பார்த்தோம். அதற்குப் பிறகு இரண்டு, மூன்று, நான்கைந்து நாமங்களாக சேர்த்துப் பார்த்தோம். கடந்த நாமங்கள் வரையிலும் ஸ்ரீவித்யா தத்துவமாகட்டும், சம்பிரதாயம், லலிதா சஹஸ்ரநாமத்தினுடைய முக்கியத்துவம். சாராம்சத்தையெல்லாம் பார்த்தோம். இப்போது நாம் ஆரம்பிப்பதிலிருந்து இனி ஸ்லோகங்கங்களின் வடிவாகவே பார்க்கப் போகிறோம். சில ஸ்லோகங்களில் ஏழு நாமங்கள் இருக்கும். சிலதில் எட்டு நாமங்கள், ஆறு அல்லது நான்கு நாமங்கள் கூட இருக்கும். லலிதா சஹஸ்ரநாமம் மொத்தமுமே 180 ஸ்லோகங்களாக, அனுஷ்டுப் சந்தத்தில் வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. இனி, நாம் ஸ்லோகங்களாக அல்லது சிலவற்றை தனி நாமாவாகவே பார்ப்போம். இப்போது ஒரு ஸ்லோகத்திலுள்ள எட்டு நாமங்களை பார்க்கப் போகிறோம். பக்தி ப்ரியா, பக்தி கம்யா, பக்தி வச்யா, பயாபஹா, ஸாம்பவீ, சாரதா ராத்யா, சர்வாணீ, சர்ம தாயிநீ.

முதல் நாமமான பக்தி ப்ரியா என்பது எல்லோருக்கும் எளிமையாக தெரியும். பக்தியில் விருப்பம் உடையவள், அம்பாள் என்பதாகும். ஆனால், இதற்கு முன்னால் நாம் சொன்ன நாமங்களை இங்கு நாம் கொஞ்சம் நினைவில் கொள்ள வேண்டும். அதில், அம்பாள் பஞ்ச கிருத்தியங்கள் செய்கிறாள். அந்த பஞ்ச கிருத்தியங்கள் என்கிற ஐந்து தொழில்கள்தான் இந்த பக்தனுக்கு சௌபாக்கியத்தை தருகிறது. அந்த சௌபாக்கியத்தை நாம் அனுபவிக்க வேண்டுமெனில், நமக்கு வரவேண்டும். பக்தி வந்தால்தான் நாம் பக்தனாக முடியும். அப்போதுதான் அவளுடைய லீலைகளை அனுபவிக்க முடியும். அதனால்தான், பக்த சௌபாக்கிய தாயிநீ என்று அழைக்கிறோம். அப்போது பக்தன் ஆக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். பக்தி வர வேண்டும். அதனாலேயே பக்தியினுடைய முக்கியத்துவத்தையே இந்த ஸ்லோகம் நமக்கு காண்பித்துக் கொடுக்கிறது. அதனாலேயே பக்தி ப்ரியா - பக்தியில் விருப்பமுடையவள். இதற்கு அடுத்த நாமாவான, பக்தி கம்யா… பக்தியால் அடையப் படுபவள். பக்தி வச்யா -பக்தியால் வசப்படுபவள்.

இதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது

ஒருவர் ஒரு பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்திற்கு மூன்று விஷயங்கள் தேவைப்படும். பயணம் செய்யக் கூடியவரான பயணி. அவர் எதை நோக்கிப் போகிறாரோ அதற்கொரு பாதை இருக்கும். அந்தப் பாதையில் சென்று அவர் அடைய வேண்டிய இடத்தை அடைவார். பயணி, பாதை, அடைய வேண்டிய இடம்.வெளிப்படையாகப் பார்த்தால், பயணி என்பது வேறு. பாதை என்பது வேறு. அவர் அடைய வேண்டிய இடம் என்பது வேறு. ஆனால், அத்யாத்மமாகப் பார்த்தால் பயணியாக இருக்கக் கூடியவரும், அவர் போகக் கூடிய பாதையும், அவர் அடையக் கூடிய இடமும் மூன்றும் ஒன்றுதான். இதற்கு முன்பே கூட நாம் ஒருமுறை, the destination not different from path. When destination not different from the path; the truth is pathless land என்று ஒருமுறை பார்த்தோம்.

பக்திப்ரியா - பக்தியை விரும்புபவள் என்று சொல்லும்போது, நாம் பக்தி செய்வதை அவள் விரும்புகிறாள். அப்போது நாம் பக்தி செய்தால் நம்மை அம்பாள் விரும்புவாள். இப்படி பயணம் பண்ணக் கூடிய நாம் பக்தியால் நாம் அவளை நெருங்குகிறோம். கொஞ்சம்போனால் அந்த பக்தியே அவள்தான் என்று தெரிகிறது. அதற்குப் பிறகு, பக்தியால் அடையப்படக்கூடிய மேலான நிலையாக இடமாக இருக்கக் கூடியவளும் அவள்தான். பக்தி வச்யா… பக்திக்கு ஆட்படக் கூடியவள். பக்திக்கு வசப்படக் கூடியவள்.

இப்படி மேலே சொன்னதுபோல் மூன்று நிலைகளை அம்பாள் காண்பித்துக் கொடுக்கும்போது, நமக்கு சம்ஸார பயம் போய்விடுகிறது. இந்த சம்சார சாஹரம் இவ்வளவு கொடுமையாக இருக்கிறதே… நாம் கடக்க வேண்டுமே! நாம் இவ்வளவு தூரம் போக வேண்டுமே! என்கிற பயம் எப்போது வருமென்றால், நம்மை தனியாகவும் பாதையை தனியாகவும், அடைய இடத்தைத் தனியாகவும் பிரித்துப் பார்க்கும்போதுதான் நமக்கு பயம் வரும். இந்தப் பிரிவு இல்லாதபடிக்கு அம்பாள் செய்து விடுவதாலும், இந்த பயத்தை போக்கி விடுவதாலும் அவளுக்கு பயாபஹா என்று பெயர்.

இப்போது மீண்டும் பார்ப்போமா!

நமக்கு பக்தியை கொடுத்து, அந்த பக்தி மூலமாக நம்மேல் விருப்பத்தை உண்டாக்கி, அந்த விருப்பத்தின் மூலமாக அந்த பக்தியே அவள்தான் என்று காண்பித்து, அந்த பக்தியின் மூலமாக அடைய வேண்டிய நிலையும் அவளுடைய நிலையே என்று காண்பித்து, இந்த உண்மை நமக்கு தெரிய வரும்போது அவளுக்கு பயாபஹா என்று பார்க்கிறோம். இதற்கு அடுத்து நான்கு நாமங்கள் உள்ளன. ஸாம்பவீ, சாரதா ராத்யா,சர்வாணீ, சர்மதாயிநீ.இப்போது பயத்தை போக்கியாச்சு. அடைய வேண்டிய அந்த ஞான நிலை இருக்கிறதல்லவா… அந்த ஞான நிலை எது? அந்த ஞான நிலையைத்தான் நாம் ஷிவம் என்று சொல்கிறோம். அந்த ஷிவமாக இருக்கக் கூடிய அந்த நிலைக்குத்தான் சம்பூ என்று பெயர். ஷிவத்தினுடய உயர்ந்த ஞானத்தை காண்பிக்கக் கூடியதுதான் சம்பூ என்பதாகும்.

அந்த சம்பூவாகிய சிவபெருமான் அந்த ஞான நிலையை அப்படியே காண்பித்தார் எனில், அந்த ஞான நிலை நமக்கு அகப்படாது. அல்லது அந்த ஞான நிலையை புரிந்து கொள்ள முடியாது. ஞான நிலை என்பது நம்முடையபுரிதலுக்கு அப்பாற்பட்டது. எனவே, அந்த ஞானமே தன்னை தாயாக, கருணையின் வெளிப்பாடாக வெளிப்படுத்திக் கொள்ளும். அப்போது அவளுக்கு சாம்பவீ என்று பெயர். அப்படி சாம்பவீயாக இருக்கக் கூடிய அம்பாள் எப்படி இருக்கிறாள் எனில் சாரதா ராத்யாவாக இருக்கிறாள். சாரதா - ஆராத்யா.

அதென்ன சாரதா ஆராத்யா

இதற்கு மூன்று வகையில் விளக்கம் சொல்லலாம். சாரதா என்று சொல்லக் கூடிய சரஸ்வதி. குருவானவர் நமக்கு முதலில் சாஸ்திர ஞானத்தை கொடுத்து மேலான ஞானத்தின் வழியாகத்தான் பர ஞானத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறார். சாஸ்திர ஞானமான சரஸ்வதியால் ஆராதிக்கப்படக் கூடியவள். பரம ஞானமான சாம்பவி எப்படி இருக்கிறாள் எனில், சரஸ்வதியால் ஆராதிக்கப்படக் கூடியவளாக இருக்கிறாள். அடுத்ததாக சரத் காலம் என்று சொல்கிறோம். சரத் காலத்தில் வரக் கூடிய நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்று பெயர். சரத் காலமாகிய சாரதா நவராத்திரி சமயத்தில், ஆராதிக்கப்படுபவளாக இருக்கிறாள்.

சரத் காலத்தில் அவளை ஆராதிப்பது எதற்காக?

பொதுவாக ஞானம் என்றும், அம்பாள் என்றும் சொல்லுவோமே அதெல்லாம் கால தேசங்களுக்கு உட்படாதது. ஆனால், நமக்காக அது காருண்யம் கொண்டு வருகின்றது. சரஸ்வதி என்கிற சாஸ்திர ஞானத்திற்குள் வருகின்றது. நமக்காக தன்னை சுருக்கிக் கொண்டு இந்த காலத்திற்கு வந்து, இந்த சரத் காலத்தில் என்னைஆராதனை செய். இந்த இடத்தில், இந்த நேரத்தில், இப்படி ஆராதனை செய், இந்த மந்திரம், இந்த பூஜை மூலமாக ஆராதனை செய்யப்பா என்கிறது. எந்த விதத்திலும் கட்டுப்படாத வஸ்து தன்னை சுருக்கிக் கொள்கிறது. இப்படி சுருக்கிக் கொண்டு வருகின்றதல்லவா? அப்படி வருவதற்கு உபாசனை என்று பெயர். முதல் படியில் சாஸ்திர ஞானம். இரண்டாவது படியில் உபாசனைக்குள் செல்கிறோம். அதற்கடுத்து மூன்றாவது நிலையில் அவளே சாரதையாக,சாரதாவாகவே இருக்கிறாள்.

சாரதா என்றால் பூரண ஞான சொரூபம். தந்த்ர சாஸ்திரங்களில், இன்னும் சில நூல்களில் சூட்சமமாக சாரதா என்கிற நாமத்திற்கு அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பூரண ஞான, மோன மூர்த்தமான தட்சிணாமூர்த்தியை ஸ்த்ரீ ரூபமாக (பெண்ணாக) பார்த்தால், தட்சிணாமூர்த்தியை தாயாராகப் பார்த்தால், தட்சிணாமூர்த்தி நமக்காக அம்மாவாக வந்தால் அது சாரதா. அப்படி தட்சிணாமூர்த்தமே பூரண ஞானமே தாயாக வந்திருப்பதால் அவள் சாரதா. அந்த சாரதாவை நாம் வழிபடுகிறோம். அந்த சாரதாவை வழிபடுவது என்பது என்ன? பரிபூர்ண ஞான நிலையை அடைகிறோம் என்பதையே காண்பிக்கிறது. மேலே சொன்ன மூன்று நிலைகளான சாஸ்திரம், உபாசனை, ஞானம் என்கிற மூன்று படி நிலைகளை இந்த சாரதா ஆராத்யா என்கிற நாமம் காண்பித்து கொடுக்கிறது.இந்த சாரதாராத்யா நாமத்திற்குப் பிறகு சர்வாணீ, சர்ம தாயிநீ என்கிற இரண்டு நாமங்கள் வருகின்றன.

அடுத்து சர்வாணீ. எப்படி பகவான் சம்பூவாக இருந்தால் சாம்பவீயாக இருக்கிறாள் என்று பார்த்தோம். அதுபோல பகவானுக்கு சர்வ என்கிற பெயருண்டு. சர்வ என்றால் சிவபெருமான். அந்த சர்வ என்கிற சிவபெருமானுடைய பரிபூரண ஞானத்தினுடைய சக்தி சொரூபமாக இருப்பதால், அந்த ஞானத்தை நமக்குள் இயங்கச் செய்பவளாக இருப்பதால்அவளுக்கு சர்வாணீ என்று பெயர். இந்த சர்வாணீ என்ன செய்கிறாள். ஞான நிலையை அடையச் செய்கிறாள் என்றெல்லாம் பேசிக் கொண்டே இருக்கிறோமே … அந்த ஆத்ம சொரூபத்தை காண்பித்துக் கொடுப்பதால் என்ன லாபம். என்ன பிரயோஜனம் எனில் இதைத்தான் அடுத்த நாமம் சர்ம தாயிநீ என்று சொல்கிறது.

சர்ம என்றால் சுகம் என்று அர்த்தம். சர்ம என்றால் ஆனந்தம் என்று அர்த்தம். சர்ம என்றால் மேலான மகிழ்ச்சி என்று அர்த்தம். என்றைக்கும் குறைவில்லாத ஆனந்தம், சுகம் , மகிழ்ச்சியை தருவதால் அவளுக்கு சர்ம தாயிநீ என்று பெயர். நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு சுகமும் அம்பிகையினுடைய கிருபையில்தான் கிடைக்கிறது. எந்த மேலான சுகத்தில் துக்கமே இல்லையோ அதுதான் உண்மையானது. அந்த நிலைதான் முடிவற்ற சுகத்தை தரும். சாஸ்வதமான சுகத்தை தரும். இப்படி சாஸ்வதமான சுகத்தை தருபவளாக இருப்பதால் சர்ம தாயிநீ என்று பெயர். இப்போது ஒரு ஸ்லோகத்திலுள்ள, பக்தி ப்ரியா, பக்தி கம்யா, பக்தி வச்யா, பயாபஹா, ஸாம்பவீ, சாரதா ராத்யா, சர்வாணீ, சர்ம தாயிநீ என்கிற எட்டு நாமங்களினுடைய விளக்கங்களைபார்த்தோம்.

இந்த எட்டு நாமங்களுக்குண்டான எட்டு கோயிலை பார்க்காது, எட்டையும் சுட்டுகின்ற ஒரே கோயிலாகவேபார்ப்போம். நமக்குள் பக்தியை உண்டு பண்ணுகிறாள். அந்த பக்தியால் நமக்குள் மாத்ரு வாத்சல்யமான தாயன்பை காண்பிக்கிறாள். நம்முடைய பக்தியும் அவளுடைய தாயன்பும் சந்திக்கிறது. பக்தியும் வாத்சல்யமும் சந்திக்கும்போது பக்த வத்சலையாக இருக்கிறாள். அதனால், இதற்கான கோயிலாக திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேஸ்வரர் ஆலயத்தை சொல்லலாம். அம்பாள் லலிதாவின் பெயரிலேயே திரிபுரசுந்தரியாகவே அருள்கிறாள். சுவாமியின் திருப்பெயர் பக்தவத்சலேஸ்வரர். ஞானத்தை அப்படியே கொடுக்க முடியாது. அதை நம்மால் வாங்க முடியாது. அதனால், நமக்குள் பக்தியை உண்டு பண்ணுகிறார். அவளின் காருண்யத்தால் நமக்கு அம்மாவாக வந்து, நம்மை குழந்தையாக்கி வாத்சல்யத்தின் மூலமாக ஞானத்தை அருள்வதால் சுவாமி பக்தவத்சலேஸ்வரராக இருக்கிறார். பக்தவத்சலேஸ்வரருக்கு சக்தியாக இருந்து இதையெல்லாம் செயல்படுத்துபவராக அம்பாள் திரிபுரசுந்தரியாக இருக்கிறாள்.

(சுழலும்...)