Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

மாலை நேரம். சூரியன் மறையும் அந்த நேரத்தில், அந்த வீட்டின் உள்ளே ஒருவிதமான அமைதியும், அதே நேரத்தில் சொல்ல முடியாத ஒரு பதற்றமும் இருந்தது. பழைய வீட்டின் சுவர்கள்கூட ஏதோ சொல்ல முயற்சிப்பதுபோல இருந்தது. அந்த வீட்டில் ஒரு வயதான தாத்தா இருந்தார். பல நோய்களால் பலவீனமடைந்தவர். ஆனால், அந்த நாளில் அவரின் கண்களில் வேறு ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது. அது மருந்துக்காக அல்ல, யாரோ ஒருவரை எதிர்பார்த்து இருப்பது.

அவரின் மகன் வெளிநாட்டில் புலம்பெயர்ந்தார். மகள் தான் புகுந்த வீட்டில் பிஸியானாள். தினமும் வந்து போகும் ஒரே நபர் ஒரு செவிலித்தாய் மட்டுமே. அவள் வந்து மருந்து கொடுத்து, சில நிமிடங்கள் பேசிவிட்டு போய்விடுவாள். ஆனால் இன்று அவள் வரவில்லை. கடிகாரத்தின் முட்கள் நகரும் ஒலி கூட அந்த வீட்டில் பெரிய சத்தமாக கேட்கத் தொடங்கியது. “இன்று ஏன் அவள் வரவில்லை?” என்ற கேள்வி தாத்தாவின் மனதில் அலைமோதியது.

இரவு நெருங்கியது. திடீரென கதவு திறக்கும் சத்தம். தாத்தாவின் கண்கள் ஒளிர்ந்தது. “வந்துட்டாளா?” என்ற நம்பிக்கையுடன் அவர் எழுந்திருக்க முயன்றார். ஆனால் உள்ளே வந்தது ஒரு அயலவர். “மருந்து வாங்கி வந்தேன்” என்று சொல்லி சென்றாள். ஆனால் தாத்தாவின் முகத்தில் ஏமாற்றம். மருந்து இருந்தும், ஏதோ குறைவாக இருந்தது. அந்த குறைவு மருந்தால் நிரப்ப முடியாதது.

அந்த இரவு தாத்தாவுக்கு தூக்கம் இல்லை. நினைவுகள் மட்டும் வந்துகொண்டே இருந்தது. பழைய நாட்கள், குடும்பச் சிரிப்புகள், குழந்தைகள் ஓடித் திரிந்த அந்த வீடு இன்று அமைதியானதை எண்ணி வழிந்த கண்ணீர் துளிகள். அவரின் மனதில் ஒரு சின்ன பயம். “நான் தனியாகி விட்டேனா?” என்ற கேள்வி. அந்த கேள்வி அவரை உடலால் அல்ல, உள்ளத்தால் வலிக்கச் செய்தது.

அடுத்த நாள் காலை. கதவு மீண்டும் திறந்தது. இந்த முறை வந்தது, வழக்கமாக வரும் அந்த செவிலித்தாய். அவள் சற்று அவசரமாக உள்ளே வந்தாள். “மன்னிச்சுக்கோங்க தாத்தா… நேற்று வர முடியல” என்றாள். ஆனால் அவள் சொல்லும் முன்பே தாத்தாவின் கண்களில் கண்ணீர். அது கோபத்தின் கண்ணீர் இல்லை. அது ஒரு எதிர்பார்ப்பு உடைந்த கண்ணீர்.

அவள் அதை கவனித்தாள். மருந்து கொடுக்காமல், அவள் அருகில் அமர்ந்தாள். “என்னாச்சு தாத்தா?” என்று மெதுவாக கேட்டாள். அந்த ஒரு கேள்வி… தாத்தாவின் உள்ளத்தில் இருந்த எல்லா வலியையும் வெளியில் கொண்டு வந்தது. “நீ வரலையே… அதான்…” என்றார் அவர். அந்த வார்த்தைகள் மிகச் சிறியது… ஆனால் அதில் இருந்த உணர்ச்சி அளவிட முடியாதது.

அவள் சற்று மௌனமாக இருந்தாள். பின்னர் தாத்தாவின் கையை பிடித்தாள். “நான் இருக்கேன் தாத்தா…” என்றாள். அந்த ஒரு தொடுதல், அந்த ஒரு வார்த்தை அது எல்லா மருந்தையும் விட பலமாக வேலை செய்தது. தாத்தாவின் முகத்தில் ஒரு அமைதி திரும்பியது. அவர் கண்களை மூடி, மனதுக்குள் நிம்மதியை உணர்ந்தார்.

அந்த நாளிலிருந்து, அந்த செவிலித்தாய் தனது பணியை மட்டும் செய்யவில்லை. அவள் தினமும் சிறிது நேரம் உட்கார்ந்து பேசத் தொடங்கினாள். தாத்தாவின் கதைகளை கேட்டாள். சிரித்தாள். சிலநேரம் அவருடன் அமைதியாக இருந்தாள். மெதுவாக, தாத்தாவின் உடல் நலம் மட்டும் அல்ல… மனமும் குணமாகத் தொடங்கியது. ஒரு நாள், அயலவர் மீண்டும் வந்தார். “என்ன தாத்தா, இப்போ நல்லா இருக்கீங்களே?” என்று கேட்டார். தாத்தா சிரித்தார். “மருந்து மாத்திரை நல்லதுதான்… ஆனா இதைவிட நல்லதும் தேவையானதும் என்னவென்றால் கரிசனமும், அன்பான பராமரிப்பும்தான்” என்றார்.

அந்த வீட்டின் சுவர்கள் இப்போது வெறுமையாக இல்லை. அவை, மீண்டும் உயிருடன் எழுந்தது. ஏனெனில் அந்த வீட்டில் மீண்டும் மனிதத் தொடர்பு வந்தது. இறைமக்களே, ஒருவரின் அன்பான பராமரிப்பு உடலின் வலியை மட்டுமல்ல, உள்ளத்தின் தனிமையையும், பயத்தையும், பேச முடியாத சுமைகளையும் மெதுவாக கரைத்துவிடும். கரிசனத்தோடு சொன்ன ஒரு வார்த்தை, அன்புடன் கொடுத்த ஒரு கவனம்... இவை மனிதனின் உள்ளத்தை உயிர்ப்பிக்கும் மருந்துகளாகும். மருந்து மாத்திரைகள் உடலை சிகிச்சை செய்கின்றன; ஆனால், அன்பும் பராமரிப்பும் உள்ளத்தையும் வாழ்வையும் சீர்செய்கின்றன.

“மென்மையான வார்த்தை கோபத்தை அடக்குகிறது; கடுமையான சொல் சினத்தை எழுப்புகிறது” (நீதி. 15:1) என்றும் “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.” (கலா. 6:2) என்றும் இறைவேதம் கூறுகிறது. உங்களது அன்பும் கரிசனமும் கொண்ட அந்த சிறிய செயல்கள் தேவையுள்ள ஒரு உயிருக்கு நம்பிக்கையையும், புதிய உற்சாகத்தையும் தரும் பெரிய கிருபையாக மாறுகிறது.

- அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.