சிவபெருமானின் திருப்பெயர்களை மக்களுக்கு இட்டு அழைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து
வருகின்றது.
சோழர் குடியினர் சிறப்பாகச் சூடிய பெயர் கரிகாலன் என்பதாகும். சோழர்கள் வரலாற்றில் பல கரிகாலர்களைக் காண்கிறோம். காவிரிக்கு அணைகட்டி சோழ மண்டலத்தை நெற்களஞ்சியமாக மாற்றியவன் கரிகாலன். இவன் கல்லணை கண்ட கரிகாலன் என்று போற்றப்படுகின்றான். மேலும், ஆதித்த கரிகாலன் போன்றவற்றையும் காண்கிறோம்.
கரிகாலன் என்பது சிவபெருமானுக்கு உரிய பெயராகும். அவன் காலத்தை வென்றவன் என்பதால் காலகாலன் என்றும், யமனை அழித்ததால் காலகாலன் என்றும் அழைக்கப்படுகிறான். அதுபோல் கஜாசுரனையும் ரிஷிகள் அனுப்பிய யானையையும் உரித்துப் போர்த்துக் கொண்டதால் கரிகாலன் எனப்பட்டான். இப்பெயரையே சோழர்கள் சூடினர்.
பின்னாளில் வந்தவர்கள் இந்த சிறப்பை உணராமல், கரிகாலன் என்பதற்கான விளக்கத்தை அறியாமல் மன்னன் பகைவர்கள் இட்ட தீயுள் மாட்டிக் கொண்டதால் கரிந்த காலை உடையவன் கரிகாலனானான் என்ற பொருத்தமில்லாத கதையை எழுதி வைத்துள்ளனர்.
பல்லவர்கள் ராஜசிம்மன் என்னும் பெயரைச் சூடியிருந்தனர். காஞ்சியில் கயிலாயநாதர் கோயிலைக் கட்டியவனும் பூசலார் வரலாற்றோடு தொடர்பு கொண்டவனும் பல்லவப் பெருவேந்தனுமாகத் திகழ்ந்த ராஜசிம்மன் என்பவர் இவனே அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக காடவர்கோன் கழற்சிங்கன் ஆவார்.
அப்பர் திருவாலங்காட்டுப் பெருமானை ராஜசிம்மன் எனப் போற்றுகின்றார். ராஜசிம்மன் என்பது ஆலங்காட்டுப் பெருமானின் பெயராகும். பாவநாசத் திருப்பதிகத்தில் அவர் பெருமானை ஏழிலாலர் ராஜசிங்கம் என்று போற்றுவதைக் காண்கிறோம்.
பல்லவர்கள் பரமேஸ்வரன் என்னும் பெயரைச் சூடியிருந்தனர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் பல்லவப் பெரு மன்னனாகத் திகழ்ந்தவர். இவரது இயற்பெயர் பரமேஸ்வரன் என்பதாகும். இவர் தன் பெயரால் பரமேஸ்வரக் கிருகம், பரமேஸ்வர விண்ண கரம் என்னும் கோயில்களைக் கட்டி யுள்ளார். பின்னாளில் வந்த சம்புவரையர்கள் அம்மை யப்பன் போன்ற பெயர்களைக் கொண்டிருந்தனர்.
இவருக்குப்பின் இரண்டாம் பரமேஸ்வரன், மூன்றாம் பரமேஸ்வரவர்மன் போன்றவர்கள் நாட்டை ஆண்டனர். சிறப்பாக சிவப் பணிகளையும் செய்துள்ளனர். நந்தி என்பது சிவபெருமானுக்கே உரியதாகும். பல்லவ அரசர்கள் நந்திவர்மன் என்ற பெயரைச் சூடினர். நந்திபுரம் என்னும் ஊரை உருவாக்கி அதில் ஆயிரம் லிங்கங்களை நிலைப்படுத்தினர். ஆயிரம் லிங்கங்களும் ஆலயம் நந்திபுர ஆயிரத்தளி எனப்பட்டது.
பாண்டியர்கள் மதுரை சோமசுந்தரப் பெருமானுக்குரியதான வரகுணன், சோம சேகரன், சுந்தர பாண்டிய ஜடாவர்மன், சுந்தர பாண்டியன் போன்ற பெயர்களைச் சூடிக் கொண்டனர்.




