சில நேரங்களில் கிரகங்களுக்குள் தெய்வங்களா? தெய்வங்களுக்குள் கிரகங்களா? என்ற ஆச்சர்யமும்; ஏற்படுகின்றது. ராமர் இலங்கேஸ்வரனை வதம் செய்து ராமேஸ்வரத்தில் ராமநாத ஸ்வாமியை பிரதிஷ்டை செய்து பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொண்டார். முருகப் பெருமானும் சூரனை வதம் செய்து திருச்செந்தூரில் லிங்கத்தை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொண்டார். தெய்வ அவதாரங்களே இப்படிச் செய்யும் பொழுது நாம் செய்கின்ற பாவக் கணக்குகளை நாம்தான் நிவர்த்தி செய்ய வேண்டும்...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம். பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது.
திருமாலுக்கும் - பிரம்மாவிற்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. அதன் விளைவாக சிவபெருமானின் அடியையும் (பாதத்தையும்) முடியையும் (சிரசையும்) யார் காண்கின்றார்களோ அவரே பெரியவர் என முடிவெடுத்து இருவரும் போட்டியில் இறங்கினர்.
திருமால் தன்னால் அடியை காண முடியவில்லை என ஒப்புக் கொண்டார். ‘‘நான் பகீரதனுக்காக ஆகாய கங்கையை தனது செஞ்சடையில் தாங்கிய சிவகங்கையை கண்டுவிட்டேன். இதற்கு தாழம்பூவே சாட்சி என கூறி, நீ குழந்தைக்கு ஒப்பானவன்’’ என கூறி பிரம்மா நகைத்தார். கோபம் கொண்ட சிவபெருமான் திருமாலின் உந்தியில் பிரம்மா தோன்றுவார் எனவும் பொய்யுரைத்த தாழம்பூ இனி சிவபூஜையில் இடம்பெறாது என சாபம் கொடுத்தார்.
தாழம்பூ தன் தவறை உணர்ந்ததால் சிவபெருமான் உத்திரகோசமங்கையில் மட்டும் இடம்பெருவாய் என வரம் அருளினார்.
தன்னை நோக்கி தவம் செய்த பார்வதி தேவிக்கு தனது இடப்பக்கத்தில் அமர்த்தி அர்த்தநாரீஸ்வரராக கருவறையில் ஐம்பொன் சிலையாக காட்சி கொடுக்கிறார்.
இத்தலத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதனை எழுதிக் கொண்டே போகலாம். இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் அருணாசலேஸ்வரர் - உண்ணாமுலை நாமகரணம் செய்கின்ற கிரகங்கள் சூரியன், செவ்வாய், சந்திரன், வியாழன் ஆகியனவாகும்.
செவ்வாய் பலம் பெற்றவர்கள், செவ்வாய் தோஷத்தில் இருந்து விலக. மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று செவ்வாயுடன் இருப்பவர்கள் காவல் துறையில் மருத்துவ துறையிலும் அரசாங்கத்தின் பதவிகளிலும் இருப்பர். இவர்கள் ஞாயிற்று கிழமை வரும் பௌர்ணமியில் கிரிவலம் வந்தால் மேன்மேலும் வளர்ச்சி கிடைக்கும்.
செவ்வாய்க் கிழமை வரும் பௌர்ணமியில் கிரிவலம் செய்து அக்னி லிங்கத்தை வழிபட்டால் அடகு வைத்த நகைகளை மீட்கலாம். சிலருக்கு செவ்வாய் தோஷம் இருந்தாலும் பூமி தொடர்பான வழக்குகள் வெற்றி பெறும்.
திருநேர் அண்ணாமலையை தரிசித்து தீபம் ஏற்றி வந்தால் வழக்குகள் வெற்றி பெறும்.
சனிக்கிழமை வரும் பௌர்ணமி அன்றும் பூச நட்சத்திரத்தன்றும் கிரிவலம் செய்து குபேர லிங்கத்தை வழிபட்டு அங்குள்ளவர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கினால் குபேர சம்பத்து உண்டாகும்.
வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமையில் வரும் பௌர்ணமியில் கிரிவலம் செய்து நிறுதி லிங்கத்தை தரிசித்து தேனும் தினை மாவும் பிரசாதமாக அங்குள்ளவர்களுக்கு கொடுத்து தொட்டாசினுங்கி செடியையும் திருநீற்றுப்பச்சிலையையும் வீட்டிற்கு எடுத்து வந்தால் வாஸ்து தோஷம் சரியாகும்.
நீண்டநாள் படுத்தபடுக்கையாக உள்ளவர்களுக்கு சனிக்கிழமை வரும் பௌர்ணமியில் அம்மையப்பர் லிங்கத்தை தரிசனம் செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, அங்கிருந்து விபூதி வாங்கிவந்து அவர்களின் உடலில் பூசினால் நோய்கள் குணமாகும்.
வியாழக்கிழமை வரும் பௌர்ணமியில் கிரிவலம் செய்து அடி அண்ணாமலை லிங்கத்தை வழிபட்டு இனிப்பு வாங்கி அங்குள்ளவர்களுக்கு கொடுத்தால் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.
