Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தான்தோன்றி பெருமாளும் அனுமாரும்!

வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள் பகுதியில், கரூர் மாவட்டத்தில் உள்ள ``தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வெங்கட்டரமண ஸ்வாமி’’ கோயிலின் சிறப்புகளை பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த இதழிலும் சிலவற்றை பார்ப்போமா!

எங்கும் அனுமன்

குன்றின் உள்ளே ஸ்வாமி இருப்பதால், சற்று தலை குனிந்து காணப்படுகிறார். இதனை பலரும் பலவிதமாக சொல்வதுண்டு. அர்ச்சகர், பெருமாளுக்கு மாலை சாற்றுவதற்காக முயற்சிக்கும் போது, பெருமாள் உயரமாக இருப்பதால், அர்ச்சகர் சிரமப்பட்டிருக்கிறார். அதனால், பெருமாள் அவருக்காக சற்று தலை குனிந்ததாக சொல்லப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, குழந்தைக்காக தலைகுனிந்து, அக்குழந்தை கொடுக்கும் உணவை உண்டதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், பக்தர்களுக்காக பெருமாளே சற்று தலைகுனிந்து காணப்படுகிறார்! திருப்பதியில் பெருமாள் எப்படி தனியாக காட்சியளிக்கிறாரோ, அதே போல், தான்தோன்றி பெருமாளும், தனியாகத்தான் காட்சியளிக்கிறார். அதாவது, தனியாக தாயார் சந்நதி என்று கிடையாது. திருப்பதி பெருமாள் போலவே, பெருமாளின் இருதயக்கமலத்தில் அதாவது பெருமாளின் மார்பில் வட்சஸ்தலத்தில் தாயார் இருக்கிறார்.

இக்கோயிலில், பிற சந்நதிகள் என்பதே காணப்படவில்லை. ஆனால், ஆங்காங்கு பல ஆஞ்சநேய சந்நதிகள் இருக்கின்றன. பெருமாளின் துவாரபாலகர்களின் அருகில், வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படும் அனுமன், கீழே சேத்திர பாலகன் என்று சொல்லக்கூடிய கம்பத்தடி ஆஞ்சநேயர், வடக்கு வாசல் பகுதியில் வில்வமர வீர ஆஞ்சநேயர், அதே பகுதியில் கீழே வீர ஆஞ்சநேய ஸ்வாமி என கோயில் முழுவதிலும் ஆஞ்சநேயர் நீக்கமற நிறைந்திருக்கிறார். பெருமாளுக்கு நேர் எதிரில், கிழக்கு நோக்கி, கருடாழ்வார் சந்நதி உள்ளது. இவைகளை தவிர பிற சந்நதிகள் கிடையாது.

கல்யாண வைபோகமே

மூலவரான ஸ்ரீ கல்யாண வெங்கட்டரமண ஸ்வாமி, பாறையில் சுயம்புவாக இருப்பதால், சூரியனால் ஏற்படும் வெப்பம், பாறையில் அதிகரிக்காமல் இருப்பதற்காக, வருடம் 365 நாட்களும் அதாவது தினமும் திருமஞ்சனம் நடைபெறுகின்றன. தினமும் காலை 11.00 மணி அளவில் திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது. கல்யாண வெங்கடரமண ஸ்வாமி, பலருக்கும் குலதெய்வமாக திகழ்வதால், அனுதினமும் எவரேனும் திருமஞ்சன உபயதாரர்களாக கைங்கரியம் செய்து வருகிறார்கள். திருமஞ்சனத்தை மிக அற்புதமாக, பக்தியோடு அர்ச்சகர்கள் செய்து வருகிறார்கள். திருமணம் நடைபெறாமல் தடைபட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு, இக்கோயிலில் ``திருக்கல்யாண உற்சவம்’’ செய்விப்பதன் மூலமாக, விரைவாக அவர்களுக்கு திருமணம் கைகூடுகிறது.

இப்படி திருக்கல்யாண உற்சவம் செய்த பலருக்கும், திருமணம் நடைபெற்று, தம்பதி சகிதமாக மீண்டும் இக்கோயிலுக்கு வந்திருந்து, திருக்கல்யாணம் செய்வித்து செல்கிறார்கள்.

தினமும் மாலையில் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. ஆனால், சனிக்கிழமை, அமாவாசை மற்றும் பிரம்போற்சவம் காலங்களில், கல்யாண உற்சவம் நடைபெறாது.

அதே போல், குழந்தைப்பேறு கிடைக்காமல் அவதியுறுவோர், இங்குள்ள துலாபாரத்தில் குழந்தையை வைப்பதாக வேண்டுகிறார்கள். குழந்தை பிறந்த உடன், அக்குழந்தையை துலாபாரத்தில் வைத்து, எடைக்கு எடை தாங்கள் வேண்டிக்கொண்ட பொருட்களை வைத்து, பிரார்த்தனையை நிறைவு செய்கிறார்கள்.

(அடுத்த இதழிலும் தொடரும்...)