Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநிலங்களில் ஒளித்திருநாள் கொண்டாட்டங்கள்!

தீபாவளியை ஒளித்திருநாளாக அனைத்து மாநில மக்களும் கொண்டாடி வருகிறார்கள்.

*கோவா மாநிலத்தில் கொங்கணி மக்கள் தீபாவளி அன்று அதிகாலை எண்ணெய் குளியல் செய்து, கெளரி பூஜையும், லட்சுமி பூஜையும் செய்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம், தேங்காய் தருவார்கள்.

*ராஜஸ்தானில் குஜ்ஜார் மக்கள் முன்னோர்களை வழிபடும் சிரார்த்த தினமாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அடுத்த நாளை மாட்டுப் பொங்கல் போல விசேஷமாக கொண்டாடுகிறார்கள். தீபாவளியன்று காலையில் பாயசம், சப்பாத்தி, வெல்லம், நெய் அடங்கிய தட்டுகளை நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று, அங்கு தீ மூட்டி தட்டிலுள்ள தின்பண்டங்களை சூடாக்கி ஆண்கள் நீரினுள் வரிசையாக நின்று பண்டங்களில் ஒரு பகுதியை இலையில் வைத்து நீரில் விடுவார்கள். மீதம் உள்ளதை பிரசாதமாக பகிர்ந்து உண்பார்கள்.

*உத்தரப்பிரதேசம், பீகாரில் தன்வந்திரியின் பிறந்த தின விழாவாக அனுஷ்டித்து தன்வந்திரி பூஜையில் ஈடுபடுகின்றனர். 4வது நாளை கோவர்த்தன தினமாக சாணத்தில் உருவங்களை செய்து வழிபாடு செய்து, மாடுகளுக்கு கொம்பில் வண்ணம் தீட்டி கொண்டாடுவார்கள்.

*மேற்குவங்காளத்தில் எல்லா பண்டிகைகளுமே சக்தி வழிபாடுதான். இரவு முழுக்க காளி மாதாவிற்கு பூஜை நடைபெறும்.

*குஜராத்தில் தீபாவளி பண்டிகை ஆறு நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் வாக்பரஸ், பழையன கழித்து வீடு புதுக் கோலமுமாகவும், இரண்டாம் நாள் தன்தோஸ். அன்று திருமகளுக்குப் பூஜை செய்து புதிய ஆபரணங்கள், பண்டங்கள் வாங்கி தொழில் நிறுவனங்களை அலங்கரித்து லட்சுமி பூஜை வழிபாடு, தயிர், நாணயங்கள், தண்ணீர், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜையுடன் வழிபாடு முடியும். மூன்றாம் நாள் காளி சௌதஸ். 4வது நாள் சௌபாடா பூஜையில் சாரதா பூஜையும், பழைய கணக்குகள் முடிக்கப்பட்டு, புதிய கணக்கு தொடங்குவார்கள். 5வது நாள் அவர்களுக்கு புத்தாண்டு தினம். எல்லோரும் புத்தாண்டு வாழ்த்து கூறுகின்றனர். 6வது நாள் உடன் பிறப்பு தினமாக கொண்டாடுவார்கள்.

*மகாராஷ்டிராவில் தீபாவளியை நான்கு நாட்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து வீடுகளுக்கு வெளியே கூடி ‘கோவிந்தா… கோவிந்தா’ என உற்சாகமாக குரல் கொடுத்து, இறைவனை துதித்து, குளிக்கும் போதே வெளியில் வந்து, சிராட்டி என்ற பழத்தை காலால் நசுக்கி, வெற்றிலையை சாப்பிட்டு நசுக்கப்பட்ட பழத்தில் துப்புகின்றனர்.

*ஒடிசாவில் தீபாவளியன்று மக்கள் உயரமான மூங்கில்களை தன்வீட்டு முன்வைத்து, அதில் கயிற்றால் மண்பானைகள் கட்டி, அதில் உள்ளே அகல் விளக்குகளை ஏற்றி, முன்னோர்களின் ஆன்மாவை சொர்க்கத்திற்கு வழி அனுப்பும் நாளாக கொண்டாடப்படுகிறது. இருளை விரட்டி நம் வாழ்வில் நம்பிக்கை ஒளியாக தீப ஒளித்திருநாள் அமையட்டும்.

- எஸ்.மாரிமுத்து, சென்னை.