Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கொரநாட்டுக் கருப்பூர் - பெட்டி காளியம்மன்

கொரநாட்டுக் கருப்பூர் - பெட்டி காளியம்மன்

‘‘ஏம்மா... நீ புள்ளதாச்சி தானேம்மா. ஏம்ப்பா நீ இன்னிக்கு முகச்சவரம் பண்ணினியா’’ தம்பதியர் இரு கேள்விகளுக்கும் தலையாட்டினார்கள். ‘‘மன்னிக்கணும்மா. நீங்க ரெண்டுபேரும் பெட்டிக்காளிய தரிசனம் பண்ணமுடியாதும்மா. ஏம்ப்பா நீ வேணா நாளைக்கு வாப்பா. நீ குழந்தை பெத்துகிட்டு வந்து தரிசனம் பண்ணிக்க தாயி. காளியாத்தா இங்க ரொம்ப உக்கிரமா இருக்காம்மா. எண்ணெய் தேய்ச்சி குளிச்ச அன்னிக்குகூட தரிசனம் கூடாதும்மா’’ என்றவுடன் அவர்கள் வாயிலருகே நின்றார்கள். சிரசுக்கு மீது கைகளை உயர்த்தி ராஜகோபுர தரிசனம் முடித்துத் திரும்பினார்கள். மாமன்னன் விக்ரமாதித்தன் ஆராதித்த ஆதிதேவி இவள். காளியின் ஆட்டம் தொடங்கியது.

உஜ்ஜயினியின் ஆற்றிலொன்றில் மிதக்க விட்டான். காளி காவிரியோடு கைகோர்த்தாள். பெட்டிக்குள் இருந்தவள் காவிரியின் ஒரு துறையில் ஒதுங்கினாள். காவிரியில் குளித்து பக்தியோடு பெட்டியை தூக்கி ஊரின் தெற்குப் பகுதியில் குடில் அமைத்து பெட்டியை வைத்து வழிபட்டனர். திடீரென்று குடிசை தீப்பற்றி எரிந்தது. காஞ்சி காமகோடி பீடாதிபதியான மகாபெரியவரை அணுகினர். ‘‘காளியை உங்க ஊர்ல இருக்கற சுந்தரேஸ்வரர் கோயில்லயே வச்சுடுங்கோ. மாகாளிக்கு தனி இடம் அந்த கோயில்லயே இருக்கு. போய்பாருங்கோ. அவளும் அங்க இருக்கணும்னு நினைக்கறா. சுந்தரேஸ்வரர் பேரோட காளிய சேர்த்து சுந்தரமாகாளின்னு பிரதிஷ்டை பண்ணுங்கோ.

பழைய பூசை முறைகளை மாத்த வேணாம்’’ என்று ஆசியளித்தார். ஆச்சாரியாரின் அறிவுரைப் படியே அவளை ஈசனின் ஆலயத்திற்குள் தனித்த இடத்தில் ஸ்தாபித்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இந்த மாகாளி வீதியுலா வருகிறாள். பெட்டியில் இருந்தபடியே பல்லக்கிலேற்றி புறப்பாடு நடக்கும். கொரநாட்டுக் கருப்பூர் என அழைக்கப்படும் இத்தலம் கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

கீழ்மாந்தூர் - மகாமாரியம்மன்

சந்தைக்காக பொருட்களை ஏற்றிச் சென்ற பார வண்டியின் முன்புறத்தில் அதிக கனம் கூடியது. அந்த இரவு நேரத்தில் வழியில் ஓரத்தில் கிடந்த கருங்கல்லை ஏற்றி எடையை சமப்படுத்தினர். காலையில் பாரத்தை இறக்கும்போதுதான் அடடா... அது கருங்கல் அல்ல. அம்மன் சிலை என்று தெரிந்தது. என்ன செய்வது என்று தெரியாது செருகுடி எனும் ஊரிலுள்ள குளத்தில் போட்டனர்.

பின்னர் அங்கிருந்து ரங்கராஜபுரம் எனும் ஊரிலுள்ள குளத்திலும் போட்டுவிட்டுச் சென்றனர். இப்படி மும்மூன்று மாதங்கள் இரு ஊர்க்குளத்தில் அம்மன் சிலை இருந்தது. தற்போது அறங்காவலர்களாக இருப்போர்களின் முப்பாட்டனார் கனவில் அம்மன் தோன்றினாள். ‘‘நான் ஓர் குளத்தில் இருக்கிறேன். என்னை எடுத்து கோயில் கட்டுங்கள்’’ என்று ஆணையிட்டாள். இந்தக் கனவு ஒருவருக்கு மட்டுமல்லாது, பலருக்கும் வந்தது. எந்த குளம் என்று தெரியாதவர்கள் ஆங்காங்கு விசாரித்தபடி சென்று ரங்கராஜபுரம் குளத்தில் தேடியபோது அன்னை கிடைத்தாள்.

வாரி எடுத்துக் கொண்டு ஓடினார்கள். அழகாக ஆலயம் எழுப்பினார்கள். இன்றும் பதினான்கு கிராமங்களை இந்த அம்பிகை ஆண்டுவருகிறாள். திருவிழாவின்போது இந்த கிராமங்களுக்கெல்லாம் அம்மன் சென்று வருகிறாள். பிரம்மோற்சவத்தன்று மணிமகுடம் சூட்டி தேரெடுத்து அலங்காரமிட்டு பக்திப் பரவசத்தோடு கொண்டாடுவார்கள். குழந்தைப் பாக்கியத்திற்காக எப்போதும் இங்கு பக்தர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள். கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் மயிலாடுதுறைக்கும் அருகேயுள்ள பந்தநல்லூருக்கு அருகே கீழ்மாந்தூர் உள்ளது.

திண்டுக்கல் மாரியம்மன்

திண்டுக்கல் மலைக்கோட்டையின் அழகான பின்னணியில்தான் மாரியம்மன் கோயில் உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிறு பீடமும், மூலக் கருவறை விக்ரகம் மட்டுமே இருந்தன. திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் சிறுமடம் நிறுவி சிலையை பிரதிஷ்டை செய்தனர். அதுவே, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் என்றானது. கோட்டையிலிருந்து ஒரு சுரங்கம் பழனிக்கு செல்வதாக கூறுகிறார்கள். சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் என்று ஐந்தாறு அம்மன் கோயில்கள் இங்குண்டு.

எல்லாவற்றிற்கும் தலைவியாக கோட்டை மாரியம்மன் விளங்குகிறாள். அமர்ந்த கோலத்தில் எழிலோடு வீற்றிருக்கிறாள். எட்டு கைகளோடு காட்சி தருகிறாள். அம்மனின் வலது கரங்களில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலமும், இடது கரங்களில் வில், கிண்ணம், பாம்பும் காணப்படுகின்றன.

இந்த அம்மன் சிலையின் அடிப்பகுதி பூமிக்கடியில் அதிக ஆழத்தில் புதைந்து கிடக்கிறது. நோய் நொடிகள் நீங்க மஞ்சளையும் உப்பையும் கம்பத்தடியில் இடுகிறார்கள். கொடி ஏற்றும்போது பெண்கள் புனிதநீர் அபிஷேகத்தை நடத்துவர். இதனால் அம்மனின் கோபம் தணிவதாக ஐதீகம். குழந்தைக்காக வேண்டிக் கொண்டவர்கள் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வருகின்றனர்.

கிருஷ்ணா