Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜடாயு பெரியப்பா...

மனதில் ஒன்றன்பின் ஒன்றாக அன்றைய நிகழ்வுகள் வந்து போயின. சீதாவின் பிரிவும் பெரியப்பாவின் மறைவும் கதி கலங்கச் செய்து விட்டது. இதுபோன்ற சமயங்களில், சில மணித்துளிகள் ஆர அமர யோசிக்க, தெளிவு பிறக்கும் என்ற வசிஷ்டரின் வாக்கு நினைவுக்கு வந்தது. மனிதனாய் பிறந்து விட்டால் இன்பம் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்காது. துயரங்களும் இடையிடையே வரத்தான் கூடும். அப்போது கலவரப்பட்டு விடக் கூடாது.

சோர்ந்து விடக் கூடாது. யார் மீதும் குற்றம் சொல்லாமல் இருக்க வேண்டும். அமைதியாய் அந்த நிகழ்வை கடக்கும்போது, ஏதோ ஒரு காலகட்டத்தில் அந்த விஷயம் நகர்ந்து போய், நல்லது நடக்கத் துவங்கி விடும். நடக்கும் வரை காத்திருக்க வேண்டும். நம்பிக்கை வேண்டும். நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். இறை அதை வழிநடத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். ராமனுக்கு வசிஷ்டரே மனதில் தோன்றி பேசியது போல் இருந்தது. ஒரு தெளிவு பிறந்தது. இந்த நேரம் பெரியப்பாவின் ஆன்மா கரைசேர தான் செய்ய வேண்டிய கிரியைகள்தான் பிரதானம் என்பது ராமனுக்குப் புரிந்தது. ராமன் ஜடாயுவின் உடல் அருகே சென்றான்.

இலக்குவன் ஜடாயுவின் உடலை சந்தன கட்டைகளின் மேல் கிடத்தியிருந்தான். ராமன் ஜடாயுவின் பாதங்களைத் தொட்டான். நெஞ்சில் ஒற்றிக் கொண்டான். கதறி அழுதான். இலக்குவன் ராமனைத் தேற்ற முற்பட்டான். ராமன் அழுகையினூடே பேசத் துவங்கினான்.

“இதோ இந்த கோதாவரி ஆறு ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுபோலத்தான் காலமும் யாருக்காகவும் எதற்காகவும் நிற்கப் போவதில்லை. கடல்தானே முடிவு என்கின்ற போதும் நதி கலங்குகிறதா? இறப்பு என்று ஒன்று இருந்த போதும் நம் ஜடாயு பெரியப்பா வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு உத்தமமானது. நாம் படித்த சாஸ்திரங்கள், வேதங்கள், புராணங்கள் இவை எல்லாம் கற்றுக் கொடுக்காததை ஒரு மரணத்தின் அருகாமை கற்றுக் கொடுககும் என்பார்கள். நம் பெரியப்பாவின் மரணம் நமக்கு நிறைய புரிய வைத்திருக்கிறது.

ஜடாயு என்பவர் யார்? ஒரு பறவை. வெறும் ஐந்தறிவு மட்டுமே உள்ள ஒரு பறவையினம். ஆனால் எவ்வளவு உயரிய எண்ணம். யோசித்துப் பார்! நம் தந்தையுடனான தன்னலமற்ற நட்பு. அந்த நட்பினால் விளைந்த உறவு. அந்த உறவிற்காக ஏற்றுக் கொண்ட அர்ப்பணிப்பு. அந்த அர்ப்பணிப்பிற்காக செய்த உயிர்த் தியாகம். சீதாவிற்கும் அவருக்கும் என்ன பந்தம்? யாருடைய வெகுமானத்திற்கோ பாராட்டுகளுக்கோ அவர் இந்த தியாகம் செய்யவில்லை. தான் நம்பியேற்ற ஒரு பொறுப்பிற்காக, தான் கொடுத்த வாக்கிற்காக உயிரையும் விடத் துணிவது எவ்வளவு பெரிய செயல்! நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்.”

தள்ளி நின்ற ஜடாயுவின் ஆன்மா ராமனின் பேச்சை கேட்டது. நெகிழ்ந்தது. ஆன்மாவினால் பேச முடியவில்லை. ராமனைக் கட்டி அணைத்து உச்சி முகர வேண்டும் என்று துடித்தது. அதன் தவிப்பு இயற்கைக்குப் புரிந்திருக்க வேண்டும். சட்டென்று மெல்லிய மழைச்சாரல் அடித்தது. சில மழைத்துளிகள் ராமன் மேல் விழுந்தன. ராமன் ஜடாயுவின் ஆன்மாவின் அருகாமையை உணர்ந்தான். இலக்குவன் நெய் பந்தத்தை ராமனிடம் அளித்தான்.

‘ஜடாயு, உயிர் நீ! உன் உடல் நான்!’ தசரதனின் வாக்கு ராமனின் நெஞ்சில் ஓடியது. ராமன் தீ மூட்டப் பெற்ற நெய் பந்தத்தை உற்று நோக்கினான். தன் தந்தை தசரதனின் உடல்தான் அன்று மரித்தது. இன்று தான் அவன் உயிர் பிரிந்தது என்பதை உணர்ந்தான். ராமன் நெய் பந்தத்தால் ஜடாயுவின் நெஞ்சினில் தீ மூட்டினான். பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றும் ஜடாயுவை வாங்கிக்

கொண்டன.

‘என் தந்தைக்கு நான் செய்ய முடியாத அந்திம காரியங்களை என் பெரியப்பாவிற்குச் செய்ய முடிந்தது. இது பெரிய கொடுப்பினை. ஆனால், மனதில் ஒரு குறை உள்ளது. நானும் சீதாவும் ஒன்றிணைந்து அந்திம காரியங்களை செய்ய இயலாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் உண்டு. ஆனால், சீதா இப்பொழுது இங்கே இருந்தால் நீங்கள் ஏன் உயிரை விட்டிருக்க போகிறீர்கள்?” ராமன் தனக்குள் பேசிக் கொண்டான். ஜடாயுவின் ஆன்மா நன்றியில் நனைந்தது.ராமன் கோதாவரி கரையை அடைந்தான். தெற்கு நோக்கி குத்துக் காலிட்டு அமர்ந்தான். தர்ப்பைப் புல்லை பரப்பினான். ஒவ்வொரு பிண்டமாக வைத்து கைகூப்பி வணங்கினான்.

பறவைகளின் அரசனான ஜடாயுவே!

அருணன் மற்றும் ஷேனியின் புதல்வனே!

சம்பாதியின் சகோதரனே! என் தந்தை தசரதனின் உயிரான தோழனே! எங்கள் நால்வரின் பெரிய தந்தையே!

உங்கள் மருமகள் சீதாவிற்காக உயிர் நீத்தவரே!

பல்லாண்டு பாடி வாழ்த்திய எங்களின் அன்பு பெரிய உடையாரே! இந்தப் பிண்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.” ராமன் இறைஞ்சினான்.ராமா! என் மூதாதையர்கள் செய்த புண்ணியத்தால், உன் மடியில் என் உயிர் பிரிந்தது! தசரதனின் பரிபூரண ஆசியினால்,எனக்கான அந்திமக் கிரியைகளை நீயே செய்தாய்! ராமா! எல்லாவற்றிற்கும் மேலாக நீ அருளின் ஆழியவனாக இருப்பதால் எனக்கு பெரிய உடையார் என பட்டம் சூட்டி பிண்டமும் வைத்தாய்! உன்னை விட யார் எனக்கு இந்த நற்கதியை அளிக்க முடியும்! பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் நீ வாழ்வாய் ராமா!” என ஆசீர்வதித்தபடி ஆன்மா சாந்தி அடைந்தது.

(நிறைந்தது)

தொகுப்பு: கோதண்டராமன்