Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

திணித்தல் - இறைநீதி அல்ல

மனிதர்களைப் படைத்த இறைவன் தனது தூதர்கள் வாயிலாகத் தனது வழிகாட்டுதலை - நேர்வழியை அருளினான். அதனை ஏற்கவும் ஏற்காதிருக்கவும் மனிதனுக்கு முழுமையான சுதந்திரம் உண்டு.

இம்மை வாழ்வு ஒரு தேர்வுக் களம் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. தேர்வின்போது முழுச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதனையே அவனுடைய செயல்களுக்குப் பொறுப்பாக்க முடியும். கட்டாயப்படுத்தப்பட்ட மனிதனை நோக்கி ‘ஏன் இப்படிச் செய்தாய்’ என்று கேள்வி கேட்க முடியாது.

கட்டாயப்படுத்துவது இறைநீதிக்குப் புறம்பானது. எனவே விவேகம், அழகிய விவாதங்கள், அழகிய வார்த்தைகளைக் கொண்டு இஸ்லாத்தின்பால் மக்களை அழைக்கும்படியாக குர்ஆன் கட்டளையிடுகிறது.

இஸ்லாத்தைத் திணிக்கவோ கட்டாயப்படுத்தவோ வேண்டாம் என்று எச்சரிக்கிறது. இறைவன் நாடியிருந்தால் உலகிலுள்ள அனைவரும் முஸ்லிம்களாக ஆகியிருப்பார்கள். இறைவன் அப்படி நாடவில்லை. ஆதலினால் மக்களைக் கட்டாயப்படுத்துவது தவறு என்று குர்ஆன் கூறுகிறது.

“தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை.” (குர்ஆன் 2: 256)

“குர்ஆன் உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்.” (குர்ஆன் 18: 29)

“உலகிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பது உம் இறைவனின் நாட்டமாக இருந்தால் இப்பூமியிலுள்ள அனைவருமே இறைநம்பிக்கை கொண்டிருப்பார்கள். அப்படியிருக்க மக்கள் நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று நீர் அவர்களை நிர்பந்திப்பீரா?” (குர்ஆன் 10:99)

நபிகள் நாயகத்தின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில் ஒருமுறையேனும் எவரையாவது கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக வரலாறு கிடையாது. சந்தித்த மனிதர்களிடம் அவர் சத்தியத்தை எடுத்துக் கூறுவார். பின்னர் அவர் களின் முடிவுக்கு விட்டு விடுவார்.

கைதிகளாகப் பிடிபட்டவர்கள், அடிமைகள், பணியாளர்கள், ஏழைகள் ஆகிய பலவீனமான மக்களிடமும் அவர் இஸ்லாத்தைத் திணித்ததில்லை. நபிகளாரை வளர்த்துப் பாதுகாப்பு அளித்த அவருடைய பெரிய தந்தை அபூதாலிப் இறுதிவரை மார்க்கத்தை ஏற்காமலேயே மரணித்தார்.

அவருடைய நெருங்கிய உறவினர்களில் பலர் இஸ்லாமியப் பரப்புரை தொடங்கிப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இஸ்லாத்தைத் தழுவினார்கள். மார்க்கத்தில் இணைந்தவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி இணைக்க அண்ணலாரிடம் அனுமதி கோரியபோது அதனை மறுத்தார்.

நபிகள் நாயகம் அரபுநாட்டின் அதிபராக ஆட்சி புரிந்தார். முழு அரேபியாவும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. அவரை எதிர்க்க அங்கு எவரும் இல்லை என்பதையும் நினைவில் கொள்க.

அதுமட்டுமல்ல, மக்கா நகரம் அண்ணலாரால் வெற்றி கொள்ளப்பட்டபோது, தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் சொல்லொணொத் துன்பங்கள் அளித்த மக்காவாசிகளை மனப்பூர்வமாக மன்னித்த மாண்பாளர் அவர்.

ஆகவே, வாள்முனையில் நபிகளார் இஸ்லாத்தைப் பரப்பினார் என்பது இட்டுக்கட்டப்பட்ட அப்பட்டமான கட்டுக் கதையாகும்.

- சிராஜுல்ஹஸன்