Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எதிர்கொள்பாடி ஐராவதீஸ்வரர் கோயில்

பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது, சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி. சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம். பரஜ்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவனை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற சிவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் தலத்திற்கு எதிர்கொள்பாடி என்றும், சுவாமிக்கு திருஎதிர்கொள்பாடி உடையார் என்னும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐரா வதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.

இங்குள்ள ஐராவத தீர்த்தம் யானை தன் தும்பிக்கையினால் உண்டாக்கியது என நம்பப்படுகிறது. ஐராவத யானை சாப விமோசனம் பெற்ற தலமாக உள்ளது. ஆகவே, இக்கோயிலில் வருபவர்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இத்தலத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் நலமாக வாழ்வார்கள். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாக உள்ளது.

இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், சந்திரன், வியாழன், சுக்ரன் கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன.

* சித்திரை மாதம் வரும் பௌர்ணமி அன்று இந்த ஸ்தலத்திற்கு சென்று அர்ச்சனை செய்து திருமணம் ஆகாதப் பெண்களுக்கு வஸ்திரம் வாங்கி கொடுத்து, எடைக்கு எடை பழங்கள் தானம் செய்தால், விரைவில் வீட்டில் சுபகாரியங்கள் நடந்தேறும்.

* அனுஷம் நட்சத்திர நாளில் பால் அபிஷேகம் செய்து, வெள்ளெருக்கு மாலை கொடுத்து சுவாமியை வழிபட்டால் கணவன் - மனைவி பிரச்னை சரியாகும்.

* ஜாதகத்தில் (8ம்) எட்டாம் பாவகத்தில் சுக்ரன் இருந்தால் திருமணத் தாமதம் ஆகும். இந்த திருத்தலத்திற்கு வந்து இந்திரா அர்ச்சனை அல்லது இந்திர யாகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும்.

* கேட்டை நட்சத்திர நாளில் இந்திர அர்ச்சனை செய்து, பாலில் செய்த உணவை நைவேத்யமாக படைத்து வழிபட்டு அவற்றை அங்குள்ளவர்களுக்கு விநியோகம் செய்து, நீங்கள் வீட்டிற்கு எடுத்து வந்தால் உங்களுக்கு குபேர சம்பத்து உண்டாகும்..

எப்படிச் செல்வது? கும்பகோணம், மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது குத்தாலம். இங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் திருமணஞ்சேரி செல்லும் வழியில் உள்ளது. எதிர்கொள்பாடி. இத்தலத்திற்கு மயிலாடுதுறையிலிருந்தும், குத்தாலத்திலிருந்தும் பஸ் வசதி உள்ளது.