Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆனந்தமான வாழ்வை அருளும் ஆவராணி பெருமாள்

திருமங்கை மன்னன் எனும் திருமங்கையாழ்வார் திருவரங்கனிடமே தன் மனதை தொலைத்தவர். அரங்கனுக்கு திருப்பணி செய்வதைத் தவிர இவ்வுலகில் வேறெந்த வேலையுமில்லை என்று திடம்பூண்டிருந்தார். இரவு தூக்கத்தையே அவரது தாபம் அறுத்தெறிந்தது. திடீரென்று நடுநிசியில் எழுந்து உட்கார்ந்து கொண்டு அரங்கனுக்கு சேவை செய்ய வேண்டுமே என்று தவிப்பார். நோக்கிய இடத்திலெல்லாம் நம்பெருமாளின் சொரூபம் கண்டார்.

எல்லாமும் அவன்தானெனில் இங்கிருப்பது அனைத்தும் அவனுக்குரியது தானே. ஏன் அவனிடமே சேர்க்கக் கூடாது என்று சகலவிடத்திலும் எம்பெருமானை கண்ட ஆத்மானுபூதியின் உச்சத்தில் நின்று யோசித்தார். தீர்த்தவாரிக்குத் தீர்த்தம் வேண்டுமெனில் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ளலாம். திருப்பணிக்கு பொன் வேண்டுமெனில் அதையும் மஞ்சனம் செய்விக்கும் தீர்த்தமாகத்தான் கருத வேண்டும். நீரென்ன, பொன்னென்ன யாவும் ஒன்றே என்று ஒரே பாய்ச்சலாக ஞானக்குளத்தில் பாய்ந்தார். அதனால், பொன் வேண்டுமெனில் அதையும் எடுத்துக் கொள்வோம். ஆனால், தடுப்பார்களே; கொடுக்கத் தயங்குவார்களே. அப்போது, ‘பெருமாளுக்குரியதை நீ வைத்துள்ளாய்’ என்போம். புரியாது விழிப்பான் எனில் அவன் அறியாது அதைக் கவர்ந்து கொள்வோம்.

திருமங்கையாழ்வார் முகத்தில் ஞானம் பெரும் விருட்சமாக வளர்ந்து, பூத்துக் குலுங்கியது. அரங்கன் அதன் வாசத்தை அனைவரும் தெரியப்படுத்த ஆசை கொண்டார். திருமங்கையாழ்வாரும் ‘நல்ல வழி காட்டி விட்டானே என் அரங்கன்’ என பெருமகிழ்ச்சியுற்றார். இம்முறை நாகப்பட்டினம் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டார்.

நாகையிலுள்ள பொற்சிலை அவரை மிகவும் கவர்ந்தது. அதைத் திரட்டினால் போதுமே எத்தனை கோபுரங்கள் எழுப்பலாம் என்று எண்ணினார். நடுநிசியில் நாகை அடைந்தார். பொற்சிலையை கவர்ந்தார். இரவு முழுதும் பதுங்கிப் பதுங்கி பயணம் மேற்கொண்டார். ஓரிடத்தில் பொற்சிலையை மறைத்து வைத்தார். (பொருள் வைத்தசேரி’ என்று இவ்விடம் வழங்கப்பட்டு ‘பொரவச்சேரி’ என்று தற்போது அழைக்கிறார்கள்.) கைகளும், கால்களும், கண்களும் உள்ளுக்குள் அவன் பார்த்தசாரதியாக நின்று எத்திசையில் செலுத்துகிறானோ அந்தப் பக்கமாக சென்றுகொண்டிருந்தது.

சட்டென்று இருளில் பலாக்கனிகள் வெடித்து அதன் மணம் எட்டுத்திக்கும் கசிந்துகொண்டிருந்தன. அந்தத் திசை நோக்கி இவர் ஓடினார். தொடர் ஓட்டத்தால் களைத்தார். எங்கேனும் துவண்டு அமர்ந்து கண்ணயரலாம் என நினைந்தார். கருணைக் கடலான பரந்தாமன் அந்தப் பெரும் பக்தனுக்கு தன்னை காட்ட வேண்டுமென்று விடாப்பிடியாக நின்றான். அவரும் எத்தனை வலிவந்தாலும் வழுவாது அவன் பாதம் பற்றி நின்றார். மரத்தினடியில் சரிந்து அமர்ந்தார். எங்கேனும் நீர் கிடைக்குமா என்று மெல்ல எழுந்தார். சட்டென்று அவர் கண்ட காட்சி அவரின் உயிரையே நிறுத்துவதுபோல் இருந்தது.

பாம்பணையின் மீது பரந்தாமன் பெரிய மேனியோடு பள்ளி கொண்டிருந்தார். பெருமாளின் மீது சர்வ ஆபரணங்களும் பொன்னொளியாக வீசி அவன் மீது புரண்டு தவழ்ந்து கொண்டிருந்தன. ஆதிசேடன் எனும் பெருநாகம் ஏழு தலைகளோடு படமெடுத்து காற்றில் அலையும் சருகுபோல மெல்லியதாக ஆடிக் கொண்டிருந்தன. பாம்பின் கழுத்துப்புறம் ஸ்படிகம் போன்று மிகத் தெள்ளியதாக, கண்ணாடி போன்றிருந்தது. அதில் ஸ்ரீ தேவிப்பிராட்டியார் எம்பெருமானுக்கு பாத சேவகம் புரிவதும் கூடத் தெளிவாகத் தெரிந்தது. வியாசரும், பிருகு மகரிஷியும் பணிவாக அமர்ந்திருக்க அவ்விடமே வைகுண்டமாக ஜொலித்தது.

‘அரங்கா... அரங்கா’ என்று அலறினார், திருமங்கையாழ்வார். ‘ஆஹா... இது பெருமாள் உறையும் திருக்கோயிலல்லவா... எத்தனை அழகான கோயில்’ என்று பரவசமானார். சந்நதியை நோக்கி ஓடினார். இன்னும் நெருங்கி வெகு அருகே வைத்த கண் வாங்காது திருமேனியழகை பருகினார். அந்தப் பிரமாண்ட சந்நதியின் முன்பு தன்னை சிறு தூசாக உணர்ந்தார். உடல் முழுதும் ஓர் பேரதிர்வால் அதிர்ந்து கொண்டிருந்தன. மனதை ஏதோ புயல் போன்று சுழற்றிக் கொண்டிருந்தது. மெய்சிலிர்ப்பால் ரோமக்கால்கள் சிலிர்த்துக் கிடந்தன. கண்கள் எல்லையில்லா பரம்பொருளைக் கண்டதால் நிலை குத்தி நின்றன. வயிறு குழைந்தது. கால்கள் அந்த பேரவஸ்தையைத் தாங்காது பலமற்றிருந்ததால், தடாரென்று மடங்கிச் சரிந்தார். மூர்ச்சையுற்றார்.

புற நினைவை இழந்தார்.

ஆனால், பாற்கடல் அள்ளி எடுத்தது. அரவணைத்துத் தாலாட்டியது. பரந்தாமன் முன்பு சிறு குழந்தை யானார். வெகுநேரம் கடந்துவிட்டதை உணர்ந்தவர் குழந்தைபோல கண் விழித்தார். ஆத்மிகமாக மிக உயர்ந்த நிலையிலிருந்து உலகப் பிரக்ஞைக்குத் தவழ்ந்திறங்கினார். கேவிக்கேவி அழுதார். உடல் தளர்ந்து மெதுவாக எழுந்தார். அரங்கனைப் பார்த்தவாறும், சர்வாபரணதாரியான அந்த பள்ளிகொண்ட நாதரைப் பார்த்தவாறே பின்புறமாகவே நடந்து வந்தார். ‘உனக்குத் திருப்பணி செய்யவே நான் போகிறேன்’ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டு பணிவாக வெளியேறினார். வானத்தில் மின்னல் வெட்டியது, விடியல் வேளையில் இதென்ன பேரொளி என்று ஊரார் வெளியே வந்து பார்த்தனர். அந்தக் கோயிலுக் குள் மணிச் சத்தம் கேட்டது. போய்ப் பார்க்க பேரொளி ஒன்று அரங்கனுக்குள் மெல்ல ஒடுங்கிற்று.

எம்பெருமானின் ஆபரணங்கள் பொன்னொளியால் பளபளத்தன. அன்றிலிருந்து அவ்வூர் ‘ஆபரணதாரி’ என்றழைக்கப்பட்டது. பிறகு ‘ஆவராணி’ என்று திரிந்து இப்போது அதுதான் வழக்கு மொழியிலுள்ளது.

திருமங்கையாழ்வார் தொடர்ந்து திருக்கண்ணங்குடிக்குச் சென்றார். இறையருளால் அங்கும் பல திருவிளையாடல்கள் நிகழ்ந்தேறின. அது வேறொரு காவியத்திற்கு ஈடான சுவாரசியம். ஆனால், இத்தலத்தில் அவர் நடந்து, எம்பெருமானை தரிசித்து, பெரும் ஏற்றம் கொடுத்துச் சென்றிருக்கிறார். அது மட்டுமல்ல விசேஷம் திருக்கண்ணங்குடியிலுள்ள தாமோதர நாராயணனே ஆபரணதாரி எனும் ஆவராணியில் அனந்த நாராயணப் பெருமாளாக கிடந்த கோலத்தில் அதாவது சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறான் என்றும் கூறுகிறார். திருமங்கையாழ்வார் திருக்கண்ணங்குடியை மங்களாசாஸனம் செய்யும்போது ‘வங்கமா முந்நீர்’ என்று தொடங்கி தொடர்ந்து பாடுகிறார். வங்கமா முந்நீர் பாசுரத்தின் முதல் அடிக்கு, திவ்யகவி பெரியவாச்சான் பிள்ளை தரும் விளக்கம் அற்புதமானது. பெரிய கடலிலே இட்டுச் செல்லும் அலைகள் அழகிய நிறத்தையுடையவனவாக உள்ளன. மென்மை, குளிர்ச்சி, மணம் முதலான குணங்களையுடைய திருவனந்தாழ்வான் மேலே படுக்கையில் திருக்கண் வளர்ந்தருளி, நீலமேக மேனியோடு கண்குளிரும்படி சேவை சாதிக்கிறார். ‘அந்த நீலநிறத்தினன் என் தலைவன்’ என்று விளித்துக் கூறுகிறார். இப்படியாக வரிக்கு வரி ஆபரணதாரி அனந்த நாராயணனின் திருமேனியழகையும், அவன் அருட் திறத்தையும் விளக்கியிருக்கிறார்.

திருக்கண்ணங்குடியிலிருப்பவனும், ஆபரணதாரியில் உறைபவனும் ஒன்றேயாவான். திருக்கண்ணங்குடியின் அகரமான ஆபரணதாரி அனந்த நாராயணனை உள்ளத்தில் இருத்தி திருக்கண்ணங்குடியில் நின்றானே’ என்று முடித்திருக்கிறார். இரண்டும் வெவ்வேறு தலங்களல்ல என்று நினைத்து இங்கு நின்றானே என்றும், ஆபரணதாரியை கிடந்தானே என்றும் இத்தலத்தைக் நேராகக் குறிப்பிடாது குறிப்பால் உணர்த்துகிறார். பெரியவாச்சான்பிள்ளையின் விளக்கத்தோடு பயணிக்க இது இன்னும் தெளிவாகும். ‘வங்கமா முந்நீர்’ எனும் பாசுரம் இத்தலத்தை மனதில் இருத்திப் பாடியதாகவும், இத்தலத்திற்கே அந்தப் பாசுரம் உரித்தானது என்றும் ஆன்றோர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கிறார்கள்.

ஆபரணதாரி கிராமம் திருக்கண்ணங்குடியின் அகரம் என்பதற்கு திருக்கோயிலைச் சுற்றியுள்ள நான்கு தேரோடும் வீதிகளுக்கு உட்பட்டது என்பதற்கு சான்றுள்ளது என்கிறார்கள். கி.பி. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் ராஜராஜசோழனின் கல்வெட்டுச் சான்றுப்படி இவ்வூர் வாசிகள் நான்கு வேதங்கள் பயின்றவராவார்கள். அதனாலேயே ‘சதுர்வேதிமங்கலம்’ என்று அழைத்தார்கள். விஜயநகர மன்னன் திப்பய்ய தேவ மகாராயரின் கி.பி. 1474 கல்வெட்டில் ‘ஆபரணதாரியான உத்தரானந்தபுரம் பள்ளிகொண்ட பெருமாள் கோயில்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருமங்கை மன்னன் கூற்றுப்படி ‘’எரிமூன்றும் செம்மையுடைய கைகளால் சர்வேஸ்வரனுடைய மார்க்கத்தில் சலியாத மனம் உடையவர்கள்’’ என்று பாடுகிறார். அக்னி வளர்த்து ஹோமம் செய்த சதுர்வேதி மங்கலம் என்று தெளிவுபடக் கூறுகிறார்.

திருமங்கையாழ்வார் மெய்சிலிர்த்துத் தரிசித்த ஆவராணியை நாமும் தரிசிப்போமா... கோயிலுக்கு முன்பு இயற்கை எழில் சூழ்ந்த பரவசம்தரும் பச்சைவண்ண வயல்கள். அதன் மத்தியில் குடியிருக்கிறார் ஆவராணி அனந்தநாராயணப் பெருமாள். மிக அமைதியான மனதிற்கு ஏகாந்தமான கிராமம். ரங்கனாதரைப் பார்க்கப்போகிறோமோ என்கிற சந்தோஷம் கோயிலின் வாயிலிலேயே நம்மைப் பற்றிக்கொள்கிறது. கோயிலின் தலைவாயிலைக் கடந்து மகாமண்டபம் செல்லும் முன்பு பெருமாளை நோக்கி கைகூப்பியபடி இருக்கும் கருடாழ்வார் தனி சந்நதியில் அமைந்துள்ளார். அவரை சேவித்து கருவறை நோக்கி நகர்கிறோம். பச்சைக்கற்பூரத்தின் வாசமும், துளசியும் சேர்ந்த கலவை மனதை ஒருமுகமாக்குகிறது. சாந்நித்தியத்தின் அதிர்வுகள் சூழ நம்மையறியாது ஓர் பேரமைதி நம்மீது கவிழ்கிறது. கருவறையின் சிறிய வாயிலிலிருந்து பள்ளி கொண்டருளும் பரந்தாமனைப் பார்க்க ஒரு கணம் மூச்சு நிற்கிறது. என்னவொரு பேரழகு. கிட்டத்தட்ட 21 அடியில் மிக நீண்ட சயனப்பெருமாள். தென்திசை முடியை வைத்து வடதிசை பாதம்நீட்டி சயனித்திருக்கும் கோலம் காண உள்ளம் குழையும். திருமேனிமுழுதும் புரளும் ஆபரணத்தை மிக நுணுக்கமாக காட்டியிருக்கும் அழகில் மனம் கரையும்.

ஏழுதலை ஆதிசேஷனும் அந்தக் கூர்மையான பார்வையும், மெல்ல தலைதாழ்த்தி எம்பெருமானைப் பணியும் விதம் பார்க்க ஆச்சரியம் பெருகும். தாமரைபோன்ற கண்கள். அனந்த நாராயணப்பெருமாள் ஒரு கரம் தலையைத் தாங்க, மற்றொரு திருக்கரம் முழங்கால் வரை நீண்டிருக்கும் ஒய்யாரம் உயிரை நெருடும். நீருண்டமேகம் போன்ற மேனி. இன்னும் மின்னுகிறார். சிரத்தின் மேல் மணிமகுடம். காதுகளில் அசைந்தாடும் குண்டலம். எப்போதும் சிறு புன்னகை உதிர்க்கும் பவளவாய் புன்முறுவல். திருமார்பில் நலங்கிளர் எனும் ஹாரம். உத்தரியம், தண்டை என அணிந்து சாந்த ஸ்வரூபியாக உலகனைத்திற்கும் படியளக்கும் பெருமாள் சயனத் திருக்கோலத்தில் காட்சி தரும் அழகு காணுதற்கரியது. நாபிக்கமலத்திலிருந்து பிரம்மா வளர்ந்துள்ளார். ஸ்ரீ தேவித்தாயார் பாதசேவை செய்யும் வினயப்பாங்கு காண சகல வினைகளும் தீரும். இப்பெருமாளை வேதவியாசரும், ப்ருகு முனிவரும் தலைப்பகுதியிலும், திருப்பாதத்தருகிலும் முறையே அமர்ந்து சேவிக்கிறார்கள்.

இத்தலப் பெருமாள் பார்க்கப் பார்க்க களிப்பூட்டக் கூடியது. கண்டுவிட்டோமோ என்ற நிறைவு ஏற்படவேயில்லை. கண் இமைக்காது பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்ற ஏக்கம்தான் அதிகரிக்கிறது. நம் போன்ற சாமான்யருக்கே இத்தனை உள்ளக் கிளர்ச்சி இருக்க, திருமங்கையாழ்வார் எப்படி இத்தலத்தில் கரைந்துபோயிருப்பார் என்று பிரமிப்பு ஏற்படுகிறது. அனந்தநாராயணனை தரிசித்த மாத்திரத்தில் உங்கள் வாழ்வினை அவன் தன் கையில் ஏந்திக்கொள்கிறான். பிரார்த்தனைகளையும் தருவான் பெருமாள். அதைத் தாண்டி பிறவாமலிருக்கும் பெரிய வரத்தையும் தந்திடுவான் இந்தப் பெருமான். ஒரு கணத்தில் திகைப்பு மேலுற்றதால் மனம் வார்த்தையற்று அமைதியாகிறது. வெறும் அவன் திருவழகையும், அவன் கிடந்தகோலத்தையும், அதனின்று பொங்கும் அருளையும் மனதில் தேக்கி நகர மனமில்லாது அடுத்த சந்நதி நோக்கி நகர்வோம்.

அர்த்தமண்டபத்தில் வரப்பிரசாதியான ஆஞ்சநேயர் அருளாட்சி புரிகிறார். சாதாரணமாக எல்லா பெருமாள்கோயிலிலும் அமாவாசையன்று முதல் திருமஞ்சனம் பெருமாளுக்குத்தான் செய்வர். ஆனால், இங்கு பெரிய திருவடி என்று சொல்லக்கூடிய கருடாழ்வாருக்கும், சிறிய திருவடியான ஸ்ரீ பத்மாஞ்சநேயருக்கும் திருமஞ்சனம் செய்துவிட்டு, மூன்றாவதாகத்தான் அனந்தநாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்விப்பர். இதை பஞ்சவர்த்தினி திருமஞ்சனம் என்கிறார்கள். அதாவது, மாதப்பிறப்பு, அமாவாசை, ஏகாதசி, திருவோணம், அமாவாசை, சனிக்கிழமை போன்ற தினங்களில் திருமஞ்சனம் ஆகும். மேலும், பத்மாஞ்சநேயர் மிக விசேஷமாக இங்கு ஆராதிக்கின்றனர். ஆதிநாட்களிலிருந்து இந்த பத்மாஞ்சநேயருக்கு கட்டமுது கட்டுதல் என்கிற விசேஷ பிரார்த்தனையை செய்விக்கிறார்கள். கட்டமுது என்பது தயிர்சாதத்தை புதிய வஸ்திரத்தில் முடிந்து இடுப்பில் முடிந்து விடுவர். வியாழன், சனி, அமாவாசை போன்ற தினங்களில் காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் பெயர், நட்சத்திரம், பிரார்த்தனைக்கான விளக்கத்தை மனுவாக எழுதி அந்தக் கட்டமுதுடன் செய்து கொடுத்துவிடுவார்கள். இந்தப் பிரார்த்தனையை மேற்கொண்டு கைமேல் பலன் கண்டு கண்ணீர் மல்கி திருமஞ்சனம் செய்து வருவோர் ஏராளமானவர்கள் உண்டு.

கோயிலை வலமாகச் சுற்றிக்கொண்டு வரும்போது தென்பிராகாரத்தில் தனி சந்நதியில் ஸ்ரீ அலங்காரவல்லித் தாயார் எனும் திருநாமம் பூண்டருளுகிறாள். அழகிழந்து களையற்றுக் கிடக்கும் வாழ்க்கையை அலங்காரமாக சிருங்காரத்தோடு மாற்றிக் காட்டுவாள் இந்தப் பிராட்டி. ஆபரணதாரிக்கு நிகரான அலங்காரிவல்லி இவள். அழகும், செல்வமும் வாரிக்கொடுப்பதில் இவளுக்கு நிகர் எவர். கைகூப்பி அவளைப் பணிந்து பிராகாரத்தை வலம்வரும்போது ஸ்தலவிருட்சமான பலாமரம் உள்ளது.

வண்ணத்துப் பூச்சிகள் விளையாடும் சோலை அது. சிறிய கோயிலாயினும் கீர்த்திமிக்க கோயில். நேர்த்தியான கோபுரங்கள். விசாலமான காற்றிடையில் நிமிர்ந்திருக்கும் கோயில். மெல்ல கோயிலை வலம் வந்து பலிபீடத்திற்கு முன்பு நமஸ்கரித்து நிமிர நீண்ட பெருமாள் நமக்குள்ளும் பள்ளிகொண்டுவிடுகிறான்.

இத்தலம் நாகப்பட்டினம்&திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.