Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்

ராஜகோபுர தரிசனம்!

சமஸ்கிருதத்தில் ‘வியாக்ரா’ என்றால் ‘புலி’ என்று பொருள். புலியை பற்றிய ஸ்தல புராணத்தின் காரணமாக சிவன் வியாக்ரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ஒருமுறை காமதேனு, இந்திரனின் அவைக்கு தாமதமாக வந்தாள். இதனால் கோபம்அடைந்த இந்திரன் அவளை பூலோகத்தில் பிறக்கச் சபித்தான். அவள் இங்கு பரிகாரத்திற்காக கபில முனிவரை அணுகினாள். முனிவர் அவள் காதுகளில் நீரை எடுத்து சிவலிங்கத்தின் மீது ஊற்றி சிவனை வழிபடுமாறு அறிவுறுத்தினார்.

காமதேனு இந்த தவத்தினை செய்து கொண்டிருந்த போது புலி அவள் முன் தோன்றி அவளை கொன்றுவிடுவதாக மிரட்டியது. காமதேனு அமைதியாக தான் புலியால் உண்ணப்படத் தயாராக இருப்பதாகவும் ஆனால், தனது சிவ வழிபாட்டை முடிக்க விரும்புவதாகவும் பதிலளித்தாள். அதை முடித்த பிறகு அவள் புலியால் உண்ணப்படுவதற்காகத் திரும்பி வந்தாள். புலியின் ரூபத்தில் இருந்த சிவனும் பார்வதியும் அவள் முன் தோன்றி, வரம் கேட்க, அவள் தேவன் வியாக்ரபுரீஸ்வரராக இங்கேயே தங்குமாறும் மேலும், தன்னுடைய சாபம் விமோட்சனம் அடைய வேண்டும் என்று வேண்டினாள்.

இங்குள்ள கட்டிடக்கலையை பார்க்கும் போது சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக தென்படுகிறது. முதலாம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், ராஜாதி ராஜ சோழன் மற்றும் விக்ரம சோழன் காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகளும், கோயிலுக்காக நடனமாடிய நடனக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் மற்றும் அணையாத விளக்கிற்கான எண்ணெய் நன்கொடைகளை குறிப்பிடும் ஒரு கல்வெட்டும் இங்குள்ளன.

மற்ற கோயில்களுடன் ஒப்பிடுகையில் இங்குள்ள கட்டிடக்கலையும் சிற்பக்கலையும் மிகவும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் உள்ளன. இங்கு நவகிரகத்திற்குப் பதிலாக கோயிலில் ஒன்பது விநாயகர்கள் உள்ளனர். சைவ சித்தாந்த அடிப்படையில் எல்லா தெய்வ சக்திகளுக்கும் ஆதாரம் விநாயகர் என்ற தத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்த அமைப்பு விளங்குகிறது. முருகன் இங்கு ஞான குருவாக அல்லது யோக முருகனாக தவம் செய்யும் கோலத்தில் எண்கோண பீடத்தில் அமர்ந்திருக்கிறார். பிற்காலத்தில் கட்டப்பட்ட முருகனின் சந்நதியில் அவர் தேவியர்களுடன் ஒரு தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறார். கர்ப்பகிரகத்தில் ஒரே ஒரு துவாரபாலகர் மட்டுமே உள்ளார். மறுபுறத்தில் விநாயகர் இருக்கிறார். இங்குள்ள பல சந்நதிகள் ஒன்றுக்கொன்று நேராகப் பார்த்தவாறு கட்டப்பட்டுள்ளன.

இங்குள்ள சிற்பக்கலையில் மிகவும் சுவாரஸ்யமானது, தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் இரண்டு அம்மன்கள் உள்ளனர். இருவருக்கும் பிருதாம்பாள் என்றே பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாலையும் சூரியனின் கதிர்கள் மூலவர் லிங்கத்தின் மீது விழுவதைக் கொண்டு இங்கு சூரியன் தினமும் சிவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது. பெரும்பாலான சிவன் கோயில்கள் கிழக்கு நோக்கி இருக்கும் நிலையில் இங்கு கருவறை மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் பெரிய ராஜகோபுரம் இல்லாமல் எளிமையான சோழர் கால நயத்துடன் கூடிய கோபுர அமைப்பைக் கொண்டுள்ளது. கோபுரம் அதிக உயரம் இல்லாமல் அளவான விகிதத்தில் கட்டப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் காணப்படும் அழகிய சுருக்கமான வடிவமைப்பு இங்கு தெளிவாக தெரிகிறது. மேல் பகுதிகளில் தேவதைகள், சிவபெருமான் தொடர்பான சிற்பங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. சில பகுதிகள் காலப்போக்கில் சேதமடைந்துள்ளன.

இந்தக் கோயிலின் மிக முக்கியமான கலைப்பகுதி அதிஷ்டானம். அந்தப் பகுதியில் காணப்படும் சிற்பங்கள் மிகவும் முக்கியமானவை. யாழி வடிவங்கள், சிங்கம்-யானை கலந்த கற்பனை விலங்கு பாதுகாப்பின் சின்னமாக கருதப்படுகிறது. யானை வரிசைகள் பூமியை தாங்கும் வலிமையை குறிக்கின்றன. சிங்க வடிவங்கள் அரசாட்சியின் சின்னமாக விளங்குகின்றன. பூதகணங்கள் சிவபெருமானின் சேவகர்களாக உயிரோட்டமுள்ள வடிவங்களில் காணப்படுகின்றன. மலர் மற்றும் வடிவ அலங்காரங்களில் தாமரை வடிவங்கள் மற்றும் கணித வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அழகியல் சமநிலையை உருவாக்குகின்றன.

இந்த அதிஷ்டான சிற்பங்கள் வெறும் அலங்காரம் மட்டுமல்ல... கோயிலின் தத்துவ அடித்தளத்தையும் வெளிப்படுத்துகின்றன. பூமி விலங்குகள் மனிதன் தெய்வம் என்ற உயர்வு கருத்தை எடுத்துக்காட்டுகின்றன. புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் பாதையில் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று திருவேங்கைவாசல் வழியாக கோயிலுக்குச் செல்லலாம்.

திலகவதி