Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரிய சித்தியை அருளும் ஆஞ்சநேயர்

ஆன்மிக உலகில் சில அனுபவங்கள் வெறும் சம்பவங்களாக இல்லாமல், இறை அருளின் நேரடி சாட்சிகளாக நம் மனதில் நிலைத்து நிற்கின்றன. பக்தி, நம்பிக்கை, சரணாகதி - இந்த மூன்றும் ஒன்றாக இணையும் போது, அசாத்யம் கூட சாத்யமாகும் என்பதை உணர்த்தும் ஒரு அனுபவம் இது.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் ஆலயத்தின் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற கோடி அர்ச்சனை வைபவம் பக்தி பரவசத்துடன் தினந்தோறும் சிறப்பாக நடைபெற்றது. அந்த வைபவத்தில், பெரும் உபயதாரர்களுக்கு தங்கக் காசு சாமியின் அருட்பிரசாதமாக வழங்குவது வழக்கமாக இருந்தது.

பக்தர்கள் அனைவரும் அனுமனின் அருளைப் பெறும் பாக்கியத்தில் மகிழ்ந்தனர்.இவ்வாறு ஒருநாள் கோடி அர்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, உபயதாரர்களுக்கு வழங்க வேண்டிய தங்கக்காசு காணாமல் போனது. அர்ச்சனை செய்யப்பட்ட பூக்கள் அனைத்தும் கவனமாக அகற்றி அலசிப் பார்த்தும் அது கிடைக்கவில்லை. ஆலயத்தில் பதட்டமும் கவலையும் நிலவியது.

பட்டாச்சார்யர்கள் வேதனையுடன் இந்த விஷயத்தை தெரிவித்தனர்.அந்தத் தருணம் ஒரு சோதனை நேரமாக இருந்தது. “ராம தூதா! உன்னை வேண்டி வருபவர்களுக்கு எல்லா வளமும் தருபவன் நீ. இந்த பக்தனின் மனக்கவலை நீக்காமல் இருப்பாயா?” என்று மனம் உருகிப் பிரார்த்தனை எழுந்தது. முழு நம்பிக்கையுடன் ஆஞ்சநேயரின் காரிய சித்தி மந்திரம் மூன்று முறைஉச்சரிக்கப்பட்டது:

அஸாத்ய ஸாதக ஸ்வாமின்

அனாத்யம் தவ கிம் வத

ராம தூத க்ருபா ஸிந்தோ

மத் கார்யம் ஸாதய ப்ரபோ

“சாத்தியமில்லாதவற்றையும் சாதிக்க வல்லவரே, உனக்கு முடியாதது எது? ராமனின் தூதரே, கருணைக் கடலே, என் காரியத்தை நிறைவேற்று!” - இந்த உணர்வோடு செய்யப்பட்டது அந்த பிரார்த்தனை.பின்னர், மீண்டும் மலர்களை மெதுவாகக் கிளறிப் பார்த்தபோது, காணாமல்போன தங்கக்காசு அதிசயமாக கிடைத்தது. அந்த நிமிடத்தில் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்த பரவசம் தெரிந்தது. ராம காரியங்களை நிறைவேற்றிய அந்த மகாவீரன், ஒரு பக்தனின் சிறிய வேண்டுதலையும் பூர்த்தி செய்திருந்தான். இந்த அனுபவம் ஒரு உண்மையை தெளிவாக உணர்த்துகிறது: ஆஞ்சநேயர் மீது முழு நம்பிக்கையுடன் செய்யும் பிரார்த்தனை வீணாகாது. சரணாகதி உண்மையாக இருந்தால், காரிய சித்தி நிச்சயம் அருளாகக் கிடைக்கும்.

ஜெய் ஹனுமான்!

ரமணி அண்ணா