சென்னை: ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது. ரயில் எண் 06042 கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணி புறப்படுகிறது. நெல்லை, திண்டுக்கல், மதுரை வழியாக அந்த ரயில் 5ம் தேதி காலை 9.45 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து அடைகிறது.
மீண்டும் அதே அதிவிரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் 6ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடைகிறது. அதேபோல, ரயில் எண் 06043 கோவை ரயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 11:30 மணி புறப்படுகிறது. ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக அந்த ரயில் 5ம் தேதி காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து அடைகிறது. மீண்டும் அதே அதிவிரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு 8.25 மணிக்கு கோவை சென்றடைகிறது. இந்த ரயில்க்கான முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.