சென்னை: ஸ்பெயின் மண்ணில் இந்தியாவின் தேசிய மொழி Unity In Diversity என உரக்கச் சொல்லியிருக்கிறார் கனிமொழி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி நட்பு நாடுகளிடம் எடுத்து கூறவும், பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை முறியடிக்கவும் எம்பிக்கள் குழுக்கள் வெளிநாடுகளில் பயணித்து வருகின்றன. திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ஸ்பெயினுக்கு சென்றது. அப்போது கனிமொழி எம்.பி.யிடம் புலம்பெயர்ந்த இந்தியர் ஒருவர், ‛‛இந்தியாவின் தேசிய மொழி எது?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு “இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பது தான்” என்ற கனிமொழி கொடுத்த பதில் அதிக கவனம் பெற்றது.
இந்நிலையில், கனிமொழி எம்.பி.க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;
ஸ்பெயின் மண்ணில், “இந்தியாவின் தேசிய மொழி Unity In Diversity” என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் – உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழி எம்.பி. அவர்களை வாழ்த்தினேன்!
இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை – ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.