Wednesday, May 21, 2025
Home செய்திகள்Showinpage விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்: அதிகாலையில் விண்கலம் தரையிறங்கும் திக்… திக்… நிமிடங்கள்

விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்: அதிகாலையில் விண்கலம் தரையிறங்கும் திக்… திக்… நிமிடங்கள்

by Mahaprabhu

கேப் கேனாவெரல்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு புறப்பட்டார். சுனிதா வில்லியம்சுடன் 4 வீரர்களை அழைத்து வந்த டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் தரையிறங்கும் திக்… திக்… நிமிடங்களை நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்தது. விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ள பூமியில் இருந்து 408 கிமீக்கு மேலே விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சுமார் 6 மாதம் தங்கியிருந்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்வர். அடுத்த குழு வந்ததும், 6 மாத பணியை நிறைவு செய்தவர்கள் பூமிக்கு திரும்புவார்கள். இதற்கான விண்வெளி வீரர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தேர்வு செய்து அனுப்பி வைக்கும்.

நாசாவால் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டவர் சுனிதா வில்லியம்ஸ் (வயது 59). இந்திய வம்சாவளி. இவர், ஏற்கனவே நாசாவால் 2 முறை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். திறமையான போர் விமானத்தின் விமானியான சுனிதா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் தனது 3வது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். இந்த ஸ்டார்லைனர் விண்கலம், நாசாவும் போயிங் நிறுவனமும் இணைந்து தயாரித்த புதிய விண்கலம். இதில் முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி சோதிப்பதற்காக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் ஒரு வார பயணமாக புதிய ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றனர். ஆனால் விண்வெளிக்கு சென்ற ஸ்டார்லைனில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதே விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் திரும்பி வர முடியவில்லை. ஸ்டார்லைனர் விண்கலம் மட்டும் காலியாக பூமிக்கு திரும்பியது. இதனால் அடுத்த குழுவை விண்வெளிக்கு அனுப்பும் போது மட்டுமே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவர்களை திரும்ப அழைத்து வருவதற்காகவே கடந்த செப்டம்பர் மாதம் 4 வீரர்களுக்கு பதிலாக 2 வீரர்கள் மட்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

அந்த 2 வீரர்களுடன், சுனிதா, வில்மோர் இருவரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்தது. ஆனால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக க்ரூ-10 குழு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. 9 மாதமாக விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை பூமிக்கு அழைத்து வர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் அதிக முக்கியத்துவம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, புதிய 4 வீரர்களுடன் டிராகன் விண்கலம் பால்கன்-9 ராக்கெட் மூலமாக கடந்த 15ம் தேதி புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இது, அடுத்த நாள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது. அங்கு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட வீரர்கள் புதிய குழுவினரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற புகைப்படங்கள், வீடியோக்களை நாசா வெளியிட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி க்ரூ-10 குழுவினர் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பும் நிகழ்வுகள் நேற்று காலை தொடங்கின. இந்திய நேரப்படி காலை 8.15 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், கடந்த செப்டம்பர் மாதம் விண்வெளிக்கு சென்ற வீரர்கள் நாசாவின் நிக் ஹக் மற்றும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனாவ் ஆகியோர் வெள்ளை கவச உடைகளை அணிந்து டிராகன் விண்கலத்தில் ஏறினர். அதற்கு முன்பாக விண்வெளி மையத்தில் புதிய வீரர்கள் அவர்களை வழியனுப்பி வைத்தனர். இந்த புகைப்படங்களையும் நாசா வெளியிட்டது.

காலை 10.35 மணிக்கு டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிரிந்து பூமியை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. விண்கலம் பூமிக்கு திரும்ப 17 மணி நேர பயணத்தை மேற்கொள்ளும். அந்த வகையில், நேற்று அதிகாலை 3.27 மணிக்கு டிராகன் விண்கலம் பூமியை வந்தடையும் என நாசா அறிவித்திருந்தது. வானிலை சீராக இருந்தால் அந்த நேரத்தில் விண்கலம் புளோரிடா கடலில் தரையிறக்கப்படும் என அறிவித்தது.
அந்த திக்… திக்… நிமிடங்களை நாசா நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தது. 9 மாதமாக விண்வெளியில் சிக்கி சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவதை நாசா விஞ்ஞானிகள் மட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலக மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

17 மணி நேர பயணம்
* 18ம் தேதி காலை 8.15: சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 வீரர்களும் டிராகன் விண்கலத்திற்குள் சென்றனர்.
* காலை 10.35: டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிரிந்து பயணத்தை தொடங்கியது.
* 19ம் தேதி அதிகாலை 2.41: விண்கலம் அதன் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். (அதிகாலை 2.15 மணியிலிருந்து நாசா தனது நேரடி ஒளிபரப்பை தொடங்கியது)
* அதிகாலை 3.27: விண்கலத்தின் வேகம் குறைந்து, பாராசூட்கள் மூலம் விண்கலம் பாதுகாப்பாக கடலில் தரையிறங்கும். இது ஸ்பிலாஷ்டவுன் எனப்படுகிறது.

* டிரம்ப், மஸ்க்குக்கு நன்றி
9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் தங்களை பூமிக்கு அழைத்து வருவதில் சிறப்பு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

* விண்வெளி வீரர்கள் எப்படி தரையிறங்குவர்?
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களை அழைத்து வரும் டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் அதிவேகமாக நுழையும். அப்போது, 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அந்த விண்கலம் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இதில் தவறு நிகழும் பட்சத்தில் விண்கலம் எரிந்து சாம்பலாகி விடும். பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும் விண்கலத்தின் வேகம் விரைவாக குறையும். இறுதியாக 4 பாராசூட்கள் விரிந்து விண்கலம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பத்திரமாக புளோரிடா கடற்கரை பகுதியில் கடலில் தரையிறங்கும். விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் படகு மூலம் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்படுவார்கள்.

* சாதனை படைத்தவர்
விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த பெண் வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆவார். ஏற்கனவே இவர் 2007ல் தனது முதல் விண்வெளி பயணத்தின் போது, ​​29 மணி நேரம் 17 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளார். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2வது அமெரிக்க விண்வெளி வீரர். 1965ம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ். இவரது தந்தை தீபக் பாண்டிய குஜராத் மாநிலம் அகமதாபாத்தை பூர்வீகமாக கொண்டவர். கடற்படை விமானியான சுனிதா வில்லியம்ஸ் 30க்கும் மேற்பட்ட போர் விமானங்களை இயக்கி உள்ளார். இவரது கணவர் மைக்கேல் வில்லியம்சும் விமானி ஆவார்.

* சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி கடிதம்
சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி கடந்த 1ம் தேதி எழுதிய கடிதத்தை ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
சமீபத்தில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் விண்வெளி வீரர் மாசிமினோவை சந்தித்து பேசிய போது உங்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது உங்களைப் பற்றியும், உங்கள் பணியைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமை கொள்கிறோம் என்பதை விவாதித்தோம்.

நான் அமெரிக்கா சென்ற போது கூட அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பைடன் ஆகியோரை சந்தித்த போது, உங்களைப் பற்றி விசாரித்தேன். 140 கோடி இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனையில் பெருமை கொண்டுள்ளனர். சமீபத்திய நிகழ்வுகள் உங்களின் ஊக்கமளிக்கும் மன உறுதியையும் விடா முயற்சியையும் மீண்டும் வெளிப்படுத்தி உள்ளன. நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் ஆரோக்கியத்துக்காகவும், உங்கள் பணியில் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள். நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறது.

உங்கள் வருகைக்காக உங்களின் தாயார் போனி பாண்டியா ஆவலுடன் காத்திருப்பார். உங்கள் தந்தையின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் என நான் நம்புகிறேன். 2016ம் ஆண்டு அமெரிக்க பயணத்தின் போது உங்களின் தந்தை தீபக் பாண்டியாவை (தற்போது காலமாகிவிட்டார்) சந்தித்தேன். இவ்வாறு கடிதத்தில் பிரதமர் மோடி கூறி உள்ளார். மேலும், சுனிதா வில்லியம்சின் கணவர் மைக்கேல் வில்லியம்சுக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

* சொந்த கிராமத்தில் கொண்டாட்டம்
சுனிதா வில்லியம்சின் சொந்த கிராமமான குஜராத்தின் மேசனா மாவட்டத்தில் உள்ள ஜூலசன் கிராம மக்கள், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதையொட்டி தீபாவளி போல் வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi